எழுத்ததிகாரம்66முத்துவீரியம்

(வ-று.) தன்னை, என்னை. (68)

இன்னொடு சிவணும் எண்ணுப்பெயர்கள்

228. எல்லா வெண்களு மின்னொடு சிவணும்.

(இ-ள்.) எண்ணுப்பெயரெல்லாம் இன்சாரியை பெறும்.

(வ-று.) ஒன்றினை, இரண்டினை, மூன்றினை, நான்கினை, பிறவுமன்ன.

(வி-ரை.)

‘‘எண்ணின் இறுதி அன்னொடு சிவணும்’’ (உருபு - 26)

என்பர் தொல்காப்பியர். இவர் அதற்கு மாறாக இன்னொடு சிவணும் என்று கூறுகிறார்.
வழக்கறிந்து ஏற்பது கொள்க. (69)

டறவொற்றிரட்டும் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள்

229. ஒற்றிடை மிகூஉங்குற் றுகரமு முளவே.

(இ-ள்.) இடையிலொற்று மிக்குமுடியுங் குற்றிய லுகரங்களும் உளவாம்.

(வ-று.) ஆட்டை, கயிற்றை.

(வி-ரை.) நெடிற் றொடர்க்குற்றுகர ஈறும், உயிர்த்தொடர்க் குற்றுகர ஈறும்
உருபேற்குங்கால் இடையில் ஒற்றுமிக்கு நிற்றலும் உள என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.

யாடு + ஐ = யாட்டை, முயிறு + ஐ = முயிற்றை.

‘‘நெடிலோடு உயிர்த் தொடர்க் குற்றுகரங்களுள்
டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே’’ (உயிரீற் - 33)

என்னும் நன்னூல் நூற்பா இதனை நன்கு விளக்குதல் காண்க. (70)

ஒன்று முதல் எண்முன் பத்து வருதல்

230. ஒன்று முதலெட் டீறா மெண்களை
     ஊர்ந்து வரும்பத் தானொடு சிவணிப்
     பகரவொற் றொழியமே லெல்லா மோடும்.

(இ-ள்.) ஒன்றுமுத லெட்டீறாகிய வெண்களையூர்ந்து வரும் பத்தென்னு மெண்
ஆனொடு சிவணிப் பகரமெய்யொன்று நிற்க மற்றைய வெழுத்துக்க ளெல்லாங் கெடும்.