| 316 | நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி |
கருத்து : இது, முன் முதற் சூத்திரத்தில் அகவுணர்ச்சிச் செய்யுட்பொருள் முப்பத்திரண்டும் புறத்தே இயலொத்த இனக்குறிபற்றி நந்நான்காய்ப் பண்ணையிற்றோன்றுமெனச் சுட்டிய மெய்ப்பாட்டு வகையெட்டும் இன்னவென விளக்குகிறது. பொருள் : நகை = சிரிப்பு; அழுகை = அவலம்; இளிவரல் = இடும்பை, அஃதாவது துன்பம்; மருட்கை = மயக்கம்; அச்சம் = அஞ்சுதல்; பெருமிதம் = வீறு; அஃதாவது தருக்கு. வெகுளி = சினம்; உவகை = மகிழ்ச்சி; என்று அப்பாலெட்டே மெய்ப்பா டென்ப = என அத்தன்மைய மெய்ப்பாடு எட்டேயாமென்பர் புலவர். குறிப்பு : ‘நகையே’ என்பதில் ஏகாரம் எண் குறிக்கும் ‘எட்டே’ என்பதில் ஏகாரம் தேற்றமாம். இதில் இனக்குறியால் தொகுதியிற் புறத்திற்றோன்றும் மெய்ப்பாட்டுத் தொகை எட்டும், இதையடுத்து இவற்றின் வகைவிரிகளான எள்ளல் - முதல் விளையாட்டீறாக முப்பத்திரண்டும் கூறி, பின் இவற்றை ‘ஆங்கவை ஒருபாலாக’ எனச் சுட்டிப் பிரித்து நிறுத்தி, “ஒருபால் எனத்தொடங்கி வேறு முப்பத்திரண்டு மெய்ப்பாட்டுணர்வு வகை குறிப்பதனால், இவை நந்நான்காய் எண்ணப்படும் பான்மையவாதல் ஒருமுறை; இதன்பின் பிற எவ்வெட்டாய்த் தொகுத்து எண்ணப்படும் தன்மையவாதல் மற்றொரு முறை”யென்பது தொல்காப்பியர் குறிப்பாம். அதனால் இதிற் கூறப்படுவன நாலுநாலாய்த் தொக்கு அம்முறையில் எண்ணப்படும் எட்டாம் என்பது விளங்க (‘பால்’ தன்மையைக் குறிப்பதாகலின் இம்மெய்ப்பாடுகள் “அப்பாலெட்டே” எனக் குறிக்கப்பட்டன. ஈற்றில் “என்ப” எனும் வினைக்குப் ‘புலவர்’ எனும் எழுவாய் அவாய்நிலை. இனி, இம்மெய்ப்பாட்டுமுறை பிற ஆரியக்கூத்து நூல் வழக்கொடுபடாமல் என்றும் இயற்றமிழ்ச் செய்யுளுறுப்பாய்த் தொன்றுதொட்டு நின்று நிலவும் மரபிற்றாகும். இவ்வுண்மை இச்சூத்திரத்தின் கீழ் “இது பிறர் வேண்டுமாற்றானன்றி இந்நூலுள் இவ்வாறு வேண்டப்படும் மெய்ப்பாடு என்பது உணர்த்துதல் நுதலிற்று”எனப் பேராசிரியரே கூறுதலானும் விளங்கும். இவற்றின் இயல்வகை விரிக்கும் பிற சூத்திரங்களானும் இது விளங்கும். அன்றியும் ஆரிய நூலார் கூறும் நவரசங்கள் இம்மெய்ப்பாடுகளின் வேறாய் நடன நாட்டியச் சத்துவங்களாம். அவை முறையே |