34

பத்துப்பாட்டு

1அறக்கற்பினையும் ஒளிபொருந்திய நுதலினையுமுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்;

இப்பெயரை முற்கூறினார், படைத்தற்கும் காத்தற்கும் உரிமை தோன்ற. 

2மறுவில் கற்பின்வாணுதல் கணவனென்பது ஈண்டு முருக னென்றும் துணையாய் நின்றது.

ஒளியினையும் (3) தாளினையும் (4) கையினையும் (5) உடைய கணவனென முடிக்க

7.கார்கோளென்பது முதல் மார்பினன் (11) என்னுந்துணையும் ஒரு தொடர்.

கார்கோள் முகந்த கம சூல் மா மழை - கடலிலே முகந்த தனாலுண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய பெருமையையுடைய - மழை,

கார் முகக்கப்படுதலிற் கடல் கார்கோளென்று பெயர் பெற்றது; ஆகுபெயர்.

8. 3வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி - திங்களும் ஞாயிறும் இருளை நீக்கும் ஆகாயத்தே பெருமையையுடைய துளியை முற்படச் சிதறி, 

வாள் : ஆகுபெயர். 

9. தலைப்பெயல் 4தலைஇய தண் நறு கானத்து - கார்காலத்து முதற்பெயலைச் சொரிந்த தண்ணிய நறிய காட்டிடத்து,

10. இருள் பட 5பொதுளிய பராரை மராஅத்து - இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய 6செங்கடம்பினது,

பராரை: பண்புத்தொகைச் சந்திமுடிபு வேற்றுமையென்றுணர்க. 

11. 7உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் - தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலையசையும் மார்பினையுடையவன்;

1(பி-ம்.) அருட்கற்பு.

2‘கொடியோள் கணவன் ...... இது நன்னென்னும் பொருட்டாய் நின்றது' (மலைபடு. 424,.) என்றது இங்கே அறியத்தக்கது. 

3வாள் போழ் - திங்களும் ஞாயிறும் அளவிடப்பட்டாற்போன்ற (வேறுரை). 

4தலைஇய - தழைத்த (வேறுரை)

5 பொதுளிய - நெருங்கிய (வேறுரை)

6(பி-ம்.) வெண்கடம்பினது.

7உருள்பூ - தேருருள்போன்ற வட்டப்பூ (வேறுரை)