1 - திருமுருகாற்றுப்படை 143. நோயின்றென்பது முதல் மகளிர் (147) என்னுந்துணையும் பாடு மகளிரைக் கூறிற்று. நோய் இன்று இயன்ற யாக்கையர் - மக்களுக்குரிய நோய் இல்லையாக நிருமித்த உடம்பினையுடையராய், 143 - 4. மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மாவினது விளங்குகின்ற தளிரையொக்கும் நிறத்தினையுடையராய், 144 - 5. அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னுரை விளங்கினாற்போலும் துத்தியினையுடையராய், 145 - 7. இன் நகை 1பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்2மாசு இல் மகளிரொடு - கட்கினிய ஒளியினையுடைய பதினெண்கோவையாகிய3மேகலை யணிந்த தாழவேண்டியவிடம் தாழ்ந்து உயரவேண்டியவிடம் உயர்ந்த அல்குலையுடைய குற்றமில்லாத கந்தருவ மகளிரோடே, மறு இன்றி விளங்க - குற்றமின்றாய் விளங்கா நிற்க, உடையினையும் (138) ஆகத்தினையுமுடைய (139) மென்மொழி மேவலர் (142) யாக்கை (143) முதலியவற்றையுடையராய், மாசில்லாத மகளிரோடே மறுவின்று விளங்க (147) இன்னரம்புளர (142) வென முடிக்க. 148. 4கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிறு - நஞ்சுடனே உறைக்குள்ளே கிடந்த துளையினையுடைய வெள்ளிய எயிற்றினையும், மிடற்றினஞ்சு தன்னிடத்தே தோன்றுதலின், ‘கடுவொடு' என்றார்.5எயிறு : காளி, காளாத்திரி, யமன், யமதூதியென நான்காம். 149. அழலென உயிர்க்கும் அஞ்சு வரு கடு திறல் - நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக் கொள்ளும் கண்டார்க்கு அச்சந்தோன்றும் கடிய வலியினையுமுடைய, 150. பாம்பு பட புடைக்கும் - பாம்பு படும்படி அடிக்கும்,
1.அரைப்பட்டிகை (வேறுரை) 2.தெய்வக் குறத்திகளோடே (வேறுரை) 3.மேகலை யென்பது காஞ்சி முதல் விரிசிகை யீறாக உள்ளவற்றிற்குப் பொதுப்பெயர் (பரி. 10 : 11, பரிமேல்.); "எண்கோவையாகிய மேகலை" (கலித். 56 : 9-12, ந.) 4.ஒடொடுங்கிய - ஒடுங்கி ஓடப்பட்ட (வேறுரை) 5இப்பற்களின் இயல்பு, சித்தராரூடம், சிந்தாமணி முதலியவற்றிற் கூறப்பட்டுள்ளது; "காளி காளாத்திரி தூதி யமதூதி" என்பர் ; தக்க. 155, உரை.
|