பத்துப்பாட்டு 150 - 51. பல் வரி கொடு சிறை புள் அணி நீள் கொடி செல்வனும் - பலவரியினையுடைத்தாகிய வளைந்த சிறகினையுடைய கருடனை யணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும், 151 - 4. [ வெள்ளேறு, வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோள், உமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண், மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்:] 1வலம் வயின் வெள்ளேறு உயரிய செல்வன் - வெற்றிக்களத்தே வெள்ளிய ஏற்றினை வெற்றிக்கொடியாக எடுத்த உருத்திரன், உமை அமர்ந்து விளங்கும் செல்வன் - இறைவி ஒருபாகத்தே பொருந்தி விளங்கும் செல்வன், பலர் புகழ் திணி தோள் - பலரும் புகழ்கின்ற சிக்கென்ற தோளினையும், இமையா முக்கண் செல்வன் - இதழ் குவியாத மூன்றுகண்ணினையுமுடைய செல்வன், மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - முப்புரத்தையெரித்த மாறுபாடு மிக்க செல்வனும், 155. நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து -நூற்றைப்பத்தாக அடுக்கிய கண்ணினையும், என்றது ஆயிரங்கண்ணென்றவாறு. 155 - 6. நுறு பல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து - நூறென்னும் எண்ணாகிய பலவேள்விகளை வேட்டுமுடித்ததனாற்பெற்ற பகைவரை வென்றுகொல்கின்ற வெற்றியினையும், 157. [ ஈரிரண் டேந்திய மருப்பின் :] ஏந்திய ஈரிரண்டு மருப்பின் - தலைகள் ஏந்தியிருக்கின்ற நான்காகிய கொம்பினையும், எழில் நடை - அழகினையுடைய நடையினையும், 158. தாழ் பெரு 2தட கை - 3நிலத்தே கிடக்கின்ற பெரிய வளை வினையுடைய கையினையுமுடைய, 158 - 9. உயர்த்த யானை எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் - எல்லாரானும் உயர்த்துச் சொல்லப்படுகின்ற யானையின் புறக்கழுத்திலே ஏறிய திருமகள் விளங்கும் இந்திரனும், உயர்ந்த: உயர்த்தவென விகாரமுமாம். நாட்டத்தினையும்(155) கொற்றத்தினையுமுடைய (156) செல்வனென்க.
1.வலவயின் உயரிய - வெற்றியினால் ஏறிய (வேறுரை) 2. "தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்" (தொல். உரி. சூ. 23) 3."ஈர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கை" (சிறுபாண். 19); "இரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்தி" (குறிஞ்சிப். 163)
|