301-310

301. குறிஞ்சி
''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
5
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள்,
பாவை அன்ன வனப்பினள் இவள்'' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை-
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.

சேட்படுத்து, ''பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையி னான்'' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.-பாண்டியன் மாறன் வழுதி

302. பாலை
இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த
நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக்
காடு கவின் பூத்தஆயினும், நன்றும்
வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
5
நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ
தாஅம் தேரலர்கொல்லோ-சேய் நாட்டு,
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு
வெளிறு இல் காழ வேலம் நீடிய
பழங்கண் முது நெறி மறைக்கும்,
10
வழங்கு அருங் கானம் இறந்திசினோரே?

பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்

303. நெய்தல்
ஒலி அவிந்து அடங்கி, யாமம்
நள்ளென,
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
5
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,
''துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம்வயின் வருந்தும், நன்னுதல்'' என்பது
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல்
10
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி,
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.

வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

304. குறிஞ்சி
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி,
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ,
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும்
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன்
5
புணரின், புணருமார் எழிலே; பிரியின்,
மணி மிடை பொன்னின் மாமை சாய, என்
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால்,
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும்,
இன்பமும் துன்பமும் உடைத்தே,
10
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே.

வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்

305. பாலை
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
5
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி,
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
10
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே.

நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்

306. குறிஞ்சி
தந்தை வித்திய மென் தினை பைபயச்
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ-
''குளிர் படு கையள் கொடிச்சி செல்க'' என,
நல்ல இனிய கூறி, மெல்லக்
5
கொயல் தொடங்கினரே கானவர்; கொடுங் குரல்
சூற் பொறை இறுத்த கோல் தலை இருவி
விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவர,
பைதல் ஒரு நிலை காண வைகல்
யாங்கு வருவதுகொல்லோ-தீம் சொல்
10
செறி தோட்டு எல் வளைக் குறுமகள்
சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே?

புனம் மடிவு உரைத்துச் செறிப்பு அறிவுறீஇயது; சிறைப்புறமும் ஆம்.- உரோடோகத்துக் கந்தரத்தனார்

307. நெய்தல்
கவர் பரி நெடுந் தேர் மணியும் இசைக்கும்;
பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்;
கடல் ஆடு வியல் இடைப் பேர் அணிப் பொலிந்த
திதலை அல்குல் நலம் பாராட்டிய
5
வருமே-தோழி!-வார் மணற் சேர்ப்பன்:
இறை பட வாங்கிய முழவுமுதற் புன்னை
மா அரை மறைகம் வம்மதி-பானாள்,
பூ விரி கானல், புணர் குறி வந்து, நம்
மெல் இணர் நறும் பொழில் காணா
10
அல்லல் அரும் படர் காண்கம் நாம், சிறிதே.

குறி நீட ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.-அம்மூவனார்

308. பாலை
செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை-
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
5
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
10
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்

309. குறிஞ்சி
நெகிழ்ந்த தோளும், வாடிய வரியும்,
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி,
''யான் செய்தன்று இவள் துயர்'' என, அன்பின்
ஆழல்; வாழி!-தோழி!-''வாழைக்
5
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்,
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று'' என,
கூறுவைமன்னோ, நீயே;
தேறுவன்மன் யான், அவருடை நட்பே.

''வரைவு நீட ஆற்றாள்'' எனக் கவன்று தான் ஆற்றாளாகிய தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது.-கபிலர்

310. மருதம்
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
5
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே!
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
10
வள் உயிர்த் தண்ணுமை போல,
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?

வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்