(து - ம்.) என்பது, தலைமகன் தலைமகளைக் கொண்டுதலைக்கழிதலும் அதனைச் செவிலியாலறிந்த ஈன்ற தாய் புலம்புவாளாக, அங்ஙனம் புலம்புதல் கண்ட அயல்மனைமாதர் போந்து தேற்றி "அஃது அறத்தாறாதல் கண்டாய்! இனி வருந்தாதேகொ" ளென்றார்க்கு "அறத்தாறாயினும் பிரிவை எவ்வண்ணந் தாங்கமுடியும்? என்மகள் ஆடிய இடங்காணின் என்னுள்ளமும் வேகின்ற தன்றோ?" என எதிரழிந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதற்கு, ""தன்னும் அவனும் .......................... போகிய திறத்து நற்றாய் புலம்பலும், ஆகிய கிளவி யவ்வழி யுரிய"" (தொல். அகத். 36) என்னும் விதிகொள்க.
| ஒருமகள் உடையேன் மன்னே அவளுஞ் |
| செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு |
| பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் |
| இனியே, தாங்குநின் அவலம் என்றிர் அதுமற்று |
5 | யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடை யீரே |
| உள்ளின் உள்ளம் வேமே உண்கண் |
| மணிவாழ் பாவை நடைகற் றன்னஎன் |
| அணியியற் குறுமகள் ஆடிய |
| மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே. |
(சொ - ள்.) அறிவு உடையீரே ஒரு மகள் உடையேன் - அறிவுடைய அயலிலாட்டியரே ! நுங்களைப் போல பல புதல்வியரைப் பெற்றேனில்லை, யான் ஒரோவொரு புதல்வியையே பெற்றுடையேன்;