(து - ம்.) அஃதாவது, தலைவி தலைவனுக்குக் கற்புக்கடம் பூண்ட செய்தியைத் தோழி அறத்தொடு நிற்றலா லுணர்ந்த செவிலி நாற்றாய்க்கு அறத்தொடு நின்றுணர்த்தினளாக, அவ்வழித் தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங் கலங்களோடு வரைவு வேண்டிவிட, முன்விளைவறியாத தந்தையும் தமையன்மாரும் வரைவு மறுத்தாராக; அது கண்ட நற்றாய் தலைவி கற்புக்கடம் பூண்டமையை அவர் குறிப்பாலுணரும்படி அறத்தொடு நின்றது என்றவாறு.
(இ - ம்.) இதனை, "தாய்க்கும்வரையார் உணர்வுடம் படினே" (தொல். கள. 25) எனவரும் மாட்டேற்று விதியான் அமைத்துக் கொள்க.
| சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது |
| வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் |
| திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள் |
| வருமுலை ஆகம் வழங்கினோ நன்றே |
5 | அஃதான்று, |
| அடைபொருள் கருதுவிர் ஆயின் குடையொடு |
| கழுமலம் தந்த நற்றேர்ச் செம்பியன் |
| பங்குனி விழவின் உறந்தையொடு |
| உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே. |
(சொ - ள்.)நமரங்காள்!-; சான்றோர் வருந்திய வருத்தமும் - நம்பால் மகட்பேசும் பொருட்டு அருங்கலம் முதலியன சுமந்து நம்மில்லிற்கு வந்துள்ள இப் பெரியோருடைய வழிநடை வருத்தத்தையும்; நுமது வான்தோய்வு அன்ன குடிமையும் நோக்கி - நுங்களுடைய வானைத் தீண்டுமளவு உயர்ந்தாற் போன்றுயர்ந்து திகழும் குலச்சிறப்பினையும் நினைந்துபார்த்து; இவள் ஆகம் வருமுலை - நம்மகளின் மார்பின்கண் கணந்தொறும் வளராநின்ற முலைக்கு விலையாக; திருமணி வரன்றும் குன்றம் கொண்டு - இச் சான்றோராற் குறிப்பிடப்படுகின்ற அருவிநீர் அழகிய மணிகளை வரன்றி வீழ்தற்கிடனான தலைவனது குன்றத்தையே