பக்கம் எண் :


451


அவர்க்கு உரையா ஆயினும் உண்கண் நீர் உரைத்தொழிந்தன; ஆதலால் நமர் இனி நம்மை இற்செறிப்பர், இனி யாம் யாது செய்வாம் எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறுவாளாய்க் களவொழுக்கத்தை நமர் அறிந்துகொண்ட செய்தியைக் குறிப்பாக வுணர்த்தி வரைவு கடாவினள் என்று கோடலே தகுதியாம். இதற்கு உரையவர்க்கு உரையா ஆயினும் என்று பாடம் இருத்தல் வேண்டும். இங்ஙனமிருப்பின் "தோழி நமர்க்கு நின் நுதலும் வளையும் ஊரலர் தூற்றும் கௌவையுங்கூட உரையா நின் உண்கண் ணீரே நாண் விட்டுக் கரப்பவும் கரப்பவும் கைம்மிக்கு உரைத்த" என நன்கு பொருத்தமுற அமையும். "நாண்விட்டு" என்று பாடவேற்றுமையுண்டு. இஃதே சிறந்த பாடமுமாம். இக் கருத்திற்கு உரையவர் என்று பாடங்கொண்டு நாம் அறத்தொடு நிலையால் உரைத்தற்குரிய நமர்க்கு எனப் பொருள் கொள்க.

(263)
  
    திணை : பாலை.

    துறை : (1) இஃது, உடன்போகாநின்ற தலைமகன் தலைமகளை வற்புறீஇயது.

    (து - ம்.) என்பது, உடன்போக்கிற் கொண்டுசெல்லுந் தலைமகன் மடந்தாய், ஊர் தோன்கின்றது உங்கே பாராய் : சிறிது நனி விரைந்து செல்லுவாயாக என ஆற்றிக்கொண்டு செல்லாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஒன்றாத் தமரினும்" (தொல். அகத். 41) எனவரும் நூற்பாவின்கண் "கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட, அப்பாற்பட்ட வொருதிறத் தானும்" என்பதனால் அமைத்துக்கொள்க.

    துறை : (2) உடன்போய் மறுத்தராநின்றான் ஊர்காட்டி வற்புறீஇயதுமாம்.

    (து - ம்.) என்பது, வெளிப்படை. (ஊரெனப் பொதுப்படக் கூறியிருத்தலால் உரை இரண்டற்குமொக்கும்.)

    (இ - ம்.) இதுவுமது.

    
பாம்பளைச் செறிய முழங்கி வலனேர்பு 
    
வான்தளி பொழிந்த காண்பின் காலை 
    
அணிகிளர் கலாவம் ஐதுவிரித் தியலும் 
    
மணிபுரை எருத்தின் மஞ்ஞை போலநின் 
5
வீபெய் கூந்தல் வீசுவளி உளர 
    
ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே 
    
வேய்பயில் இறும்பின் கோவலர் யாத்த 
    
ஆபூண் தெண்மணி இயம்பும் 
    
உதுக்காண் தோன்றுமெம் சிறுநல் ஊரே.