பக்கம் எண் :


565


     (பெரு - ரை.) என் எனப்படுமோ? என்னும் வினாவைத் தோழி கூற்றாக்கினுமாம். இகுளை தோழி என்றும் பாடம். இதற்கு இகுளை என்று தலைவி தோழியை விளித்துப் பின்னர் "தோழி . . . . . தொடி" என்னுந் துணையும் தோழி கூற்றைக்கொண்டு கூறுகின்றாள் எனக்கொள்க. விடரின்கண் பிணவை மறைத்துவைத்த வயப்புலி அதற்கு ஊட்டும் இரையை நசைஇ என்க. பேணலன் - பேணலையுடையவன்.

  
(332)
     திணை : பாலை.

     துறை : இது, பொருள்வயிற் பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி வற்புறுத்தது.

     (து - ம்,) என்பது, தலைமகன் பொருள்வயிற் பிரிதலாலே வருந்திய தலைமகளைத் தோழி நெருங்கி 'அவரை நாம் கருதும் போதெல்லாம் சுவரின்கண்ணே பல்லி சொல்லநின்றதாதலின், அகன்று போகிய காதலர் இன்னே வந்து நின்னை முயங்குவர் போலுமென்று தோன்றுகின்றது; நினது துயரம் நீங்குவாய்கா'ணென வலியுறுத்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதனாற் கொள்க.

    
மழைதொழில் உலந்து மாவிசும்பு உகந்தெனக் 
    
கழைகவின் அழிந்த கல்லதர்ச் சிறுநெறிப் 
    
பரலவல் ஊறற் சிறுநீர் மருங்கில் 
    
பூநுதல் யானையொடு புலிபொருது உண்ணுஞ் 
5
சுரன்இறந்து அரிய என்னார் உரனழிந்து 
    
உண்மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி 
    
அரும்பொருட்கு அகன்ற காதலர் முயக்கெதிர்ந்து 
    
திருந்திழைப் பணைத்தோள் பெறுநர் போலும் 
    
நீங்குக மாதோநின் அவலம் ஓங்குமிசை 
10
உயர்புகழ் நல்லில் ஒண்சுவர்ப் பொருந்தி 
    
நயவரு குரல பல்லி 
    
நள்ளென் யாமத்து உள்ளுதொறும் படுமே. 

     (சொ - ள்.) ஓங்கு மிசை உயர் புகழ் நல்இல் - (தோழீ!) உயர்ந்த இடத்தில் உயர்ந்த புகழையுடைய நல்லவீட்டின் கண்ணே; நள் என் யாமத்து உள்ளுதொறும் - செறிந்த இரவு நடு யாமத்தில் நாம் நம் காதலரை நினைக்குந்தோறும்; நயவருகுரல பல்லி - இனிமையான குரலையுடைய பல்லி; ஒள் சுவர்ப் பொருந்திப்படும் - ஒள்ளிய சுவரிலே