பக்கம் எண் :


624


     வெப்பம் நீங்கித் தட்பமிக்குப் பறவைகள் பயிர்ந்துவிளையாட நறுமணம்வீசி முல்லை நகைசெய, முதல்நாள் மாலையம்பொழுது வருதலும் காமவெள்ளத்தின் முழுகி வருந்தி இனி இம் மாலைவரி னிறந்துபடுவது திண்ணமெனக் கொண்டவளாதலின் நீந்துமாறு அறியேனென்றாள். மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்.

     (பெரு - ரை.) காலையையும் பகற்பொழுதையும் ஒருவாறு கழித்துத் தொலைப்பேன் என்பாள் எல்லை பைபயக் கழிப்பி என்றாள்.

(369)
  
     திணை : மருதம்.

     துறை : (1) இஃது ஊடல்நீட ஆற்றனாய் நின்றான் பாணற்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பரத்தையிற் பிரிந்துவருகின்ற தலைவனது வரவறிந்த தலைவி ஊடினாளை நயந்து பலகால்வேண்டியும் ஊடல் நீங்காமையால் வருந்திய அவன், ஆங்கு வந்த பாணனை நோக்கிப் பாணனே! நம் காதலி புதல்வனைப் பெற்றகாலத்து நாம் அருகெய்தி வினாயபொழுது நகைகொண்டு கண்ணைமூடியதை நினைக்குந்தோறும் நகாநிற்போம்; அத்தகையாள் இப்பொழுது ஊடியிருப்பது காணென்று நொந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதற்கு, "ஏனை வாயில் எதிர்" (தொல். கற். 5) என்னும் விதிகொள்க.

     துறை : (2) முன் நிகழ்ந்ததனைப் பாணற்குச் சொல்லியதூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை. (உரை குறிப்பெச்சமில்வழி ஒக்கும்.)

     (இ - ம்.) இதுவுமது.

    
வாராய் பாண நகுகம் நேரிழை 
    
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக்கு உதவி 
    
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ் 
    
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்  
5
புதல்வன் ஈன்றெனப் பெயர்பெயர்த்து அவ்வரித் 
    
திதலை அல்குல் முதுபெண் டாகித் 
    
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப் 
    
பன்மாண் அகட்டிற் குவளை ஒற்றி 
    
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல 
10
முகைநாள் முறுவல் தோற்றித் 
    
தகைமலர் உண்கண் புதைத்துவந் ததுவே.