பக்கம் எண் :


634


    
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் 
    
சுற்றமை வில்லன் செயலைத் தோன்றும் 
    
நற்றார் மார்பன் காண்குறின் சிறிய 
    
நன்கவற்கு அரிய உரைமின் பிற்றை 
10
அணங்கும் அணங்கும் போலும் அணங்கி 
    
வறும்புனங் காவல் விடாமை 
    
அறிந்தனிர் அல்லிரோ அறனில் யாயே. 

     (சொ - ள்.) முறம் செவி யானைத் தடக்கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைந் தாள் செந்தினை - முறம்போலுஞ் செவியையுடைய யானையினது வளைந்த கைபோல வளைந்து தலைசாய்ந்த கதிர்களையும் பசிய அடித்தண்டினையும் உடைய செவ்விய தினையை; வரையோன் வண்மை போலப் பல உடன் கிளையோடு உண்ணும் வளை வாய்ப் பாசினம் - வரையாது கொடுப்பவனது கைவண்மைக்கு ஈண்டும் பரிசிலர்போலப் பலவாகிய சுற்றத்தொடு நெருங்கிவந்து உண்ணாநின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டமே!; அறன் இல் யாய் அணங்கி - தலைவனை முன்பு முயங்கி அவனை நீங்கிய பின்னர் அறநெறியிலே நில்லாத எம் அன்னை எம்மை வருத்தி; வறும் புனம் காவல் விடாமை அறிந்தனிர் அல்லிரோ - காவலின்றி அழிகின்ற தினைப்புனத்தினை யாங் காவல்செய்யவிடாது இல்வயிற் செறித்திருப்பதனை நீயிர் அறிந்தீரன்றே; பிற்றை அணங்கும் அணங்கும் போலும் - இதன்பின்பு வெறியெடுத்தலாலே முருகவேளும் எம்மை வருத்தும் போலும்; குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன் - ஆதலின் குல்லை மலைப்பச்சை கூதாளி குவளை தேற்றா என்பனவற்றின் மலராற் புனைந்த மிகக் குளிர்ந்த பூமாலையை யுடையவனும்; சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும் நல் தார் மார்பன் காண்குறில் - வரிந்து கட்டிய அமைந்த வில்லையுடையவனுமாகி அசோகமரத்தின்கீழ் வந்துநிற்கும் நல்ல மாலையணிந்த மார்புடைய அவனை நீயிர் காண்பீராயின்; சிறிய அரிய நன்கு அவற்கு உரைமின் - இங்கு நிகழ்ந்த எல்லாவற்றினையும் கூறாது விடினும் சிறிய சிலவற்றையேனும் அறிந்து கொள்ளுமாறு நன்றாக அவனுக்கு உரையுங்கோள்! எ - று.

     (வி - ம்.) குல்லை - கஞ்சா; துழாயுமாம். இல்லம் - தேற்றாமரம். யாய் அணங்கிப் புனங்காவல் விடாமை அறிந்தனிர் அல்லிரோ வென்க. இமையார் என்னும் எதிர்மறை வினையாலணையும் பெயர் இமையோரெனத் திரிந்தது போல வரையானென்பது வரையோனெனத் திரிந்து நின்றது; இது, தூதுமுனிவின்மை. ஏனை மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரவுகடாதல்.