பக்கம் எண் :


366


     வரையாதொழுகினும் அவனே மணமகனென அவனறியுமாறு கொண்கனெனக் கூறினாள். கொண்கன் - திணைப்பெயரே யன்றிக் காதலனெனும் பெயரையுமுடைமையின் களவுக்காலத்துப் பிரிவாதலின் எவரிடத்தும் புலப்படுத்தற்கு இயையாமையின் "யார்க்கு நொந்துரைக்கோ யானே" எனத் தானே புலம்பியதாம்.

     உள்ளுறை:- இரைதேடி வந்த குருகு பற்றுதலைத் தப்பியோடிய இறாமீன் தாழம்பூவை நோக்கிக் குருகெனக் கருதி அஞ்சுமென்றது, ஊரார் பழி தூற்றத் தொடங்கலும் அதற்கஞ்சிய தலைவி அன்னையைக் கண்டவிடத்தும் ஏதிலாட்டியர் கூற்றை மேற்கொண்டு சினந்து வருவாள் கொல்லோவென அஞ்சாநிற்கு மென்றதாம். மெய்ப்பாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் - தலைவனை வரைவுடன் படுத்தல்.

     (பெரு - ரை.) உப்புடைச் செறு - உப்பளம். கோடு - கரை. துறுகடல் - செறிவுடைய கடல். வான் போது - வெண்டாழை மலர்.

(211)
  
     திணை : பாலை.

     துறை : இது, பொருண்முடித்துக் தலைமகனோடு வந்த வாயில்கள் வாய் வரைவுகேட்ட தோழி தலைமகட்குச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, பொருள்வயிற்சென்ற தலைவன் மீண்டுவரும் பொழுது அதனுடன் வந்த இளைஞர் முதலானோர் முன்னரே மனையகம் புகுந்து தலைவன் வருகையைத் தெரிவிப்பக் கேட்ட தோழி, தலைமகளை நெருங்கிச் "சுரத்தின் கண்ணே சென்ற நங்காதலர் மீண்டுவந்தெய்தினர்காண்; ஆதலின் அவரும் நீயும் நெடுங்காலம் வாழ்க"வென உவந்து கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல். கற். 9) என்னும் நூற்பாவின்கண் "பிறவும் வகைபட வந்த கிளவி" என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ 
    
நெடுங்கால் கணந்துளம் புலம்புகொள் தெள்விளி 
    
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும் 
    
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் 
5
கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர் 
    
நெடும்பெருங் குன்ற நீந்தி நம்வயின் 
    
வந்தனர் வாழி தோழி கையதை 
    
செம்பொற் கழல்தொடி நோக்கி மாமகன் 
    
கவவுக்கொள் இன்குரல் கேட்டொறும் 
10
அவவுக்கொள் மனத்தேம் ஆகிய நமக்கே.