முகப்பு தொடக்கம்




பதிற்றுப்பத்து - பழைய உரை
83.



கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும்
வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வரப் பொலிந்து
 5




செலவுபெரி தினிதுநிற் காணு மோர்க்கே
இன்னா தம்மவது தானே பன்மா
நாடுகெட வெருக்கி் நன்கலந் தரூஉநின்
போரருங் கடுஞ்சின மெதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே.

     துறை - தும்பையரவம். வண்ணம் - ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - பஃறோற் றொழுதி
(3)

     (ப - ரை) 1. கைபரிதல் - ஒழுங்கு குலைதல்.

     1மழைக்கு ஒப்பாகிய யானைகளோடு தோல்களையும் (3)
2ஒப்பித்துப் பெரியவாகக் கூறிய சிறப்பான் இதற்கு,
‘பஃறோற்றொமுதி’ என்று பெயராயிற்று.

     6. 3பன்மாவென்றது பலபடியென்றவாறு. 7. எருக்கல் -
அழித்தல்.

     நின்னைக் காண்பார்க்கு நின்படை செல்கின்ற செலவு (5)
4மழைக் குழாத்தின்முன்பே ஓரொருகால் ஒழுங்கு குலைந்து செல்லும்
(1) கொக் கொழுங்குபோலக் (2) களிறுமிடைந்த பஃறோற்கிடுகின்
தொகுதியோடு (3) தேர்களின் நுடங்குகொடி விளங்காநிற்பப்
பொலிவுபெற்றுப் (4) பெருக இனிது; அவ்வாறு அன்புறுவாரையொழிய
(5) அதுதான் இன்னாது ; யார்க்கெனின் (6), மாறுகொள் வேந்தர்
பாசறையோர்க்கு (9) என வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன்படைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-2. கார்காலத்து மேகக்கூட்டத்தின் முன்னே
ஒழுங்கு குலைந்து எழுகின்ற, சிறந்த பறத்தலையுடைய கொக்கின்
நீண்ட வரிசையை ஒப்ப. பொற்ப : உவம உருபு.

     3-4. கொல்லும் ஆண்யானைகள் நெருங்கிய பல கேடகங்களின்
தொகுதியோடு, உயர்ந்த தேரில் அசைகின்ற கொடிகள் விளங்கா
நிற்பப் பொலிவு பெற்று.

     2-4. தேர்மீதுள்ள வெள்ளிய கொடிகளுக்குக் கொக்கு உவமை.

     5. நின்னைக் காண்பார்க்கு நினது சேனை செல்லும் செலவு
மிகவும் இனியது. 6. அதுதானே இன்னாதது ஆகும்.

     6-7. பலபடியாக நாடுகள் அழியும்படி சிதைத்து நல்ல
ஆபரணங்களைத் தருகின்ற நினது. ‘பன்மாணாடு’ என்ற பாடம்
சிறக்கும்; பலவாக மாட்சிமைப்பட்ட நாடுகளென்று கொள்க;
“பாடுசா னன்கலந் தரூஉம், நாடுபுறந் தருத னினக்குமார் கடனே”
(பதிற். 59:18-9)

     8-9. போர்செய்தற்கு இயலாத, மிக்க போகத்தை ஏற்றுக்
கொண்டு, நின்னோடு மாறுபாடுகொண்ட அரசருடைய பாசறையிலுள்ள
வீரர்க்கு. பாசறையோர்க்கு (9) இன்னாது (6) என முடிக்க.

     (பி - ம்) 2. போர்ப்ப. 6. அம்மதானே. 6 - 7. பன்மா, ணாடு
(3)


     1“கடாஅ மாறிய யானை போலப், பெய்துவறி தாகிய பொங்கு
செலற் கொண்மூ”, ‘வயவுப்பிடி யினத்தின் வயின்வயிற் றோன்றி,
இருங்கிளைக் கொண்மூ வொருங்குடன் றுவன்றி” (
அகநா. 125 : 8-9,
183 : 8-9)

     2ஒப்பித்து - ஒப்புக்கூறி.
     3பன்மாறு என்பதன் விகாரம் போலும்.
     4தோல்களுக்கு மழை ஒப்பாகக் கூறப்படும் ; “மழையென
மருளும் பஃறோன் மலையெனத், தேனிறை கொள்ளு மிரும்பல்
யானை” (புறநா. 17 : 34 - 5)




பதிற்றுப்பத்து - மூலமும் விளக்க உரையும்

3. பஃறோற் றொழுதி
 
83.கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும்
வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வரப் பொலிந்து
 
5செலவு பெரிதினிதுநிற் காணு மோர்க்கே
இன்னா தம்மவது தானே பன்மாண்
1
நாடுகெட வெருக்கி நன்கலந் தரூஉநின்
போரருங் கடுஞ்சின மெதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே .
 

துறை  : தும்பையரவம்.
வண்ணம் : ஒழுகு வண்ணம்.
தூக்கு  : செந்தூக்கு
பெயர்  : பஃறோற் றொழுதி.

1 - 5. கார்மழை...........................காணுமோர்க்கே.

உரை : கார் மழை முன்பின் - கரிய முகிற் கூட்டத்தின் முன்னே;
கை  பரிந்து  எழுதரும்  வான்  பறைக்  குருகின் நெடுவரி பொற்ப -
ஒழுங்கு  குலைந்தெழும்  வெள்ளிய  சிறகுகளையுடைய கொக்குகளின்
நீண்ட   வரிசையைப்போல   ;  கொல்  களிறுமிடைந்த  பல்  தோல்
தொழுதியொடு  -  யானைப் படையுடனே செறிந்த பலவாகிய கிடுகுப்
படையுடன்;  நெடுந்தேர்  நுடங்கு கொடி அவிர் வரப் பொலிந்து நின்
செலவு - நெடிய தேரிற் கட்டியசையும் கொடிகள் விளங்க அழகுற்றுப்
பகைமேற்  செல்லும்  நின் செலவு; காணுமோர்க்குப் பெரிது  இனிது -
காண்போர்க்கு மிக்க இன்பந் தருவதாம் எ - று.

முன்பின்,     ஈண்டு முன்னே யென்னும்  பொருட்டு. கைபரிதல்
என்புழி,  கை, ஒழுங்கு.  கைபரிதலாவது  ஒழுங்கு  குலைதலென்றே
பழையவுரையும் கூறுகிறது.  மழை  முகிலின்  முன்னே  கொக்குகள்
ஒழுங்கு  குலைந்து எழுந்து  நீளப் பறக்கும் நேரிய தோற்றம், போர்
யானைகளோடு மிடைந்து  வரும் கிடுகுப் படையோடு தேரிற் கட்டிய
கொடி  யசைந்துவரும்  காட்சிக்கு  உவமமாயிற்று. ஒழுங்கு குலைந்து
செல்லினும்,  அவற்றின்  நேரிய  தோற்றம்  கரு முகிற் படலத்திட்ட
வரிபோலத்   தோன்றுவது  பற்றி,  “நெடுவரி” யென்றார்.  கருமுகிற்
படலத்திற் றோன்றும் மேகவடுக்குப் போலக் களிறு மிடைந்த கிடுகுப்
படையின் தொழுதி தோற்றுமாறு உணர்க. இம்   மழைத்   தோற்றம்

நீண்ட   தாரைகளைப்   பொழிந்து நிலத்தே பெருவெள்ளம் பெருகி
யோடுதற்குக்  காரணமாதல்   போல,   நின்   படையின்  தோற்றம்
பகைவர்மேல்  அம்புமாரி   பொழிந்து   குருதி  வெள்ளம்  பெருகி
யோடுதற்குக் காரணமா  மெனக் காண்பாரை மகிழ்வித்தலின், “செலவு
பெரி தினிது நிற்காணு மோர்க்கே” என்றார். இனிப் பழைய வுரைகாரர்,
“மழைக்கொப்பாகிய  யானைகளோடு   தோல்களையும்,   ஒப்பித்துப்
பெரியவாகக்  கூறிய சிறப்பான்  இதற்குப் பஃறோற் றொழுதி யென்று
பெயராயிற்” றென்பர்.

6 - 9. இன்னாது......................பாசறை யோர்க்கே .

உரை :  பன்மாண்   நாடு   கெட எருக்கி - பகைத்தோருடைய
பலவாகிய மாட்சிமையுற்ற நாடுகள் கெட்டழியுமாறு சிதைத்து; நன்கலம்
தரூஉம் - ஆங்கே பெறும் நல்ல கலன்களைக் கொணரும்; நின் போர்
அருங்   கடுஞ்   சினம்  எதிர்ந்து  -  நினது  பொருதற்கரிய  மிக்க
சினத்துக்கு    இலக்காகி    நேர்பட்டு    ;   மாறுகொள்   வேந்தர்
பாசறையோர்க்கு     -    மாறுகொண்ட    பகைவேந்தர்    தங்கிய
பாசறையிலுள்ளார்க்கு  ;  அது  இன்னாது  -  அச் செலவு மிகுதியும்
துன்பம் தருவதாகும் எ - று.

எருக்குதல், அழித்தல், நாட்டிடத்தும் காட்டிடத்தும் அவலிடத்தும்
மிசையிடத்தும்   பலவகை  வளங்க  ளுண்டாதலின்,  “பன்மாணாடு”
என்றார்.  இனி,  பழையவுரைகாரர்,  பன்மா  என்று  பாடங்கொண்டு,
“பன்மா   வென்றது   பலபடி   யென்றவா”   றென்பர்.  பலபடியாக
அழித்தலாவது,  பகைவர் நாட்டை எரியிட்டும் சூறையாடியும் கொலை
புரிந்தும்  அழித்தலென்று கொள்க. அவ்வாறு அழிக்குமிடத்து உயரிய
கலன்களைக்   கவர்ந்து  கோடலின்,  “நன்கலம்  தரூஉம்”  என்றும்,
பகைத்தோர்   பொருது  வேறல்  அரிதாதற்கேது,  அவனது  படைப்
பெருமையேயன்றி மிக்க சினமுமா மென்பார், “போரருங் கடுஞ்சினம்”
என்றும்  கூறினார்.  நின்பால் அன்புடையார்க்கு நின் படைச் செலவு
பெரிதும்  இனிதாமெனவே,  அன்பின்றிப்  பகைமை கொண்டார்க்குப்
பெருந்  துன்பமாம்  என்பார்,  “இன்னா  தம்ம வதுதானே” என்றார்.
தானே  என்பது  கட்டுரைச்  சுவைபட  நின்றது. அம்ம, கேட்பித்தற்
பொருட்டு.

இதுகாறும்    கூறியது, களிறு மிடைந்த பஃறோல்  தொழுதியொடு,
நெடுந்தேர் நுடங்கு கொடி விளங்கச் செல்லும் நின்செலவு அன்பொடு
காணுமோர்க்குப்   பெரிது   இனிது   ;  நின்  கடுஞ்சினம்  எதிர்ந்து
மாறுகொள்  வேந்தரது  பாசறையி  லுள்ளோர்க்குப் பெரிது இன்னாது
என்பதாம்.  இனிப் பழையவுரைகாரர், “நின்னைக் காண்போர்க்கு நின்
படை  செல்கின்ற  செலவு  மழைக்  குழாத்தின் முன்பே ஓரொருகால்
ஒழுங்கு  குலைந்து  செல்லும் கொக்கொழுங்குபோலக் களிறு மிடைந்த
பஃறோற்  கிடுகின் தொகுதியொடு தேர்களின் நுடங்கு கொடி விளங்கா
நிற்பப்  பொலிவு  பெற்றுப் பெருக இனிது ; அவ்வாறு அன்புறுவாரை
யொழிய,  அதுதான்  இன்னாது  ; யார்க்கெனின், மாறுகொள் வேந்தர்
பாசறை   யோர்க்கென   வினைமுடிவு  செய்க”  என்பர்.  “இதனாற்
சொல்லியது ; அவன் படைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.”
 


1. பன்மா என்றும் பாட வேறுபாடுண்டு


 மேல்மூலம்