'தோழி கூற்று' என்ற சொல் உள்ள பக்கங்கள்
2
தோழி கூற்று

தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக,
அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,
மடங்கல் போல், சினைஇ, மாயம் செய் அவுணரைக்
கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூஎயிலும்
5 உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்,
சீறு அருங் கணிச்சியோன் சினவலின் அவ் எயில்
ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை
மறப்பு அருங் காதல் இவள் ஈண்டு ஒழிய,
10 இறப்பத் துணிந்தனிர், கேண்மின் மற்று ஐஇய!
‘தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
நிலைஇய கற்பினாள், நீ நீப்பின் வாழாதாள்,
முலை ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை?
15 ‘இல் என, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள்
புல் ஆகம் பிரியாமை பொருளாயின் அல்லதை?
‘இடன் இன்றி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’ என,
20 கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ
வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள்
தட மென் தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை?
என, இவள்
புன் கண் கொண்டு இனையவும், பொருள்வயின் அகறல்
25 அன்பு அன்று, என்று யான் கூற, அன்புற்று,
காழ் வரை நில்லாக் கடுங் களிற்று ஒருத்தல்
யாழ் வரைத் தங்கியாங்கு, தாழ்பு, நின்
தொல் கவின் தொலைதல் அஞ்சி, என்
சொல் வரைத் தங்கினர், காதலோரே

‘ஒன்றாத் தமரினும்’ என்னும் சூத்திரத்து, ‘நாளது சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையது இழிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும், ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்’ என்பதனான், இன்மையது இழிவு கூறி,‘இல்வாழ்க்கை நெறி ஆற்றுதற்குப் பொருள்வயிற் பிரிவேன்’ என்ற தலைமகற்குத் தலைமகளது இயல்பு கூறி, ‘இப் பெற்றியாளைப் பிரியாமையே பொருளாவது’ எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தமை தோழி தலைமகட்கு உவந்து சொல்லியது. (1)

3
தோழி கூற்று

அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும்,
வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும்
இறை நில்லா வளை ஓட, இதழ் சோர்பு பனி மல்க,
பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள்
5 விறல் நலன் இழப்பவும், வினை வேட்டாய்! கேஎள், இனி:
‘உடை இவள் உயிர் வாழாள், நீ நீப்பின்’ என, பல
இடைகொண்டு யாம் இரப்பவும், எம கொள்ளாய்ஆயினை;
கடைஇய ஆற்றிடை, நீர் நீத்த வறுஞ் சுனை,
அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன
10 ‘வல்லை நீ துறப்பாயேல், வகை வாடும் இவள்’ என,
ஒல் ஆங்கு யாம் இரப்பவும், உணர்ந்தீயாய் ஆயினை;
செல்லு நீள் ஆற்றிடை, சேர்ந்து எழுந்த மரம் வாட,
புல்லு விட்டு இறைஞ்சிய பூங்கொடி தகைப்பன
‘பிணிபு நீ விடல் சூழின், பிறழ்தரும் இவள்’ என,
15 பணிபு வந்து இரப்பவும், பல சூழ்வாய்ஆயினை;
துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை, அம் மரத்து
அணி செல, வாடிய அம் தளிர் தகைப்பன
என ஆங்கு
யாம் நிற் கூறவும் எம கொள்ளாய்ஆயினை;
20 ஆனாது இவள்போல் அருள் வந்தவை காட்டி,
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல், நீ செல்லும்
கானம் தகைப்ப, செலவு

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகட்கு அஃது உரைத்து,அவளது ஆற்றாமையின் வகை தலைமகற்கு உணர்த்தவும், பின்னும் பிரிவின்மேல் சென்ற உள்ளத்தன் ஆயினானை, ‘நீர் செல்லும் கானமே நும்மை இடிக்கும் கேளிர்போல விலக்கும்’ என, அவன் செலவழுங்கும் வகை அவள் கூறியது (2)

4
தோழி கூற்று

வலி முன்பின், வல்லென்ற யாக்கை, புலி நோக்கின்
சுற்றமை வில்லர், சுரி வளர் பித்தையர்,
அற்றம் பார்த்து அல்கும் கடுங்கண் மறவர் தாம்
கொள்ளும் பொருள் இலர்ஆயினும், வம்பலர்
5 துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து, உயிர் வௌவலின்,
புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை,
வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின்,
உள்ளினிர் என்பது அறிந்தனள், என் தோழி
‘காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை
10 போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார், என்
தாழ் கதுப்பு அணிகுவர், காதலர்; மற்று, அவர்
சூழ்வதை எவன்கொல்? அறியேன்!’ என்னும்
‘முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக்
கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார், என்
15 ஒள் இழை திருத்துவர், காதலர்; மற்று, அவர்
உள்ளுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும்
‘நுண் எழில் மாமைச் சுணங்கு அணி ஆகம் தம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார், என்
ஒள் நுதல் நீவுவர், காதலர்; மற்று, அவர்
20 எண்ணுவது எவன்கொல்? அறியேன்!’ என்னும்
என ஆங்கு,
‘கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து’ என, என் தோழி
அழிவொடு கலங்கிய எவ்வத்தள்; ஒரு நாள், நீர்,
பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ?
25 ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே

‘பொருள்வயிற் பிரிவேன்’ என்ற தலைமகற்கு, தோழி, தலைவி செலவுக் குறிப்பு அறிந்தவாறும், அவளது ஆற்றாமையும், உணர்த்தி, ‘செலவு ஒழிவாயாக’ எனக் கூறியது

5
தோழி கூற்று

பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை
மாஅல் யானையொடு மறவர் மயங்கித்
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அருஞ் சுரம்
இறந்து, நீர் செய்யும் பொருளினும், யாம் நுமக்குச்
5 சிறந்தனம் ஆதல் அறிந்தனிர்ஆயின்,
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின்
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை,
கேள் பெருந் தகையோடு எவன் பல மொழிகுவம்?
நாளும் கோள் மீன் தகைத்தலும் தகைமே
10 கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின்,
புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு, அமைவாளோ?
ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல்,
பாழ்பட்ட முகத்தோடு, பைதல் கொண்டு, அமைவாளோ?
ஓர் இரா வைகலுள், தாமரைப் பொய்கையுள்
15 நீர் நீத்த மலர் போல, நீ நீப்பின், வாழ்வாளோ?
என ஆங்கு
பொய்ந் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு,
எந் நாளோ, நெடுந் தகாய்! நீ செல்வது,
அந் நாள் கொண்டு இறக்கும், இவள் அரும் பெறல் உயிரே

தலைமகன் ‘பொருள்வயிற் பிரிவல்’ என, கேட்ட தோழி, தான் ஆற்றாளாய்,'நீர் செய்யும் பொருளினும் யாம் உமக்குச் சிறந்தேம் என்பது நும் உள்ளத்து உளது எனின், நும்மை நாளும் புள்ளும் விலக்கும்' எனவும், ‘இவள் பிரிந்திருப்பார் இருக்குமாறு இருப்பாள் அல்லள்; பிரிந்த அன்றே இறந்துபடுவள்’ எனவும், சொல்லிச் செலவு அழுங்குவித்தது. (4)

7
தோழி கூற்று

‘வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு
வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம்
கானம் கடத்திர், எனக் கேட்பின், யான் ஒன்று
உசாவுகோ ஐய! சிறிது?
5 நீயே, செய் வினை மருங்கில் செலவு, அயர்ந்து, யாழ நின்
கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே;
இவட்கே, செய்வு உறு மண்டிலம் மையாப்பது போல்,
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே
நீயே, வினை மாண் காழகம் வீங்கக் கட்டி,
10 புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே;
இவட்கே, சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல்,
இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே
நீயே, புலம்பு இல் உள்ளமொடு பொருள்வயிற் செலீஇய,
வலம் படு திகிரி வாய் நீவுதியே;
15 இவட்கே, அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல்,
இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே
என நின்,
செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின்,
தன் நலம் கடைகொளப்படுதலின், மற்று இவள்
20 இன் உயிர் தருதலும் ஆற்றுமோ
முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகற்கு, ‘நீர் பிரிகின்றீர் என்று யான் கூறத் தலைவி கேட்பின், அவட்கு அக் காலத்து நிகழ்வனவற்றை நும்மொடு ஆராய்வதுடையேன்;நீர் செய்யும் பொருள் இவள் உயிரையும் தருகிற்குமோ?’ எனச் செலவு அழுங்கக் கூறியது. ‘உடன் சேறல் செய்கையொடு அன்னவை பிறவும், மடம் பட வந்த தோழி கண்ணும்’ என்பதனுள் செய்கை கூறுகின்றது (6)

8
தோழி கூற்று

நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க,
கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல, ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின்,
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்,
5வறன் உழு நாஞ்சில் போல், மருப்பு ஊன்றி நிலம் சேர,
விறல் மலை வெம்பிய போக்கு அரு வெஞ் சுரம்
சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள்
சொல்லுவது உடையேன்; கேண்மின், மற்று ஐஇய!
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல்
10ஏழும் தம் பயன் கெட, இடை நின்ற நரம்பு அறூஉம்
யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது,
பிரியுங்கால் பிறர் எள்ள, பீடு இன்றிப் புறம் மாறும்
திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
15புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை
வரைவு இன்றிச் செறும் பொழுதில், கண் ஓடாது உயிர் வௌவும்
அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ?
என ஆங்கு
நச்சல் கூடாது பெரும! இச் செலவு
20ஒழிதல் வேண்டுவல், சூழின், பழி இன்று;
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி,
தன் நகர் விழையக் கூடின்,
இன் உறல் வியன் மார்ப! அது மனும் பொருளே

சொல்லாது பிரியலுற்ற தலைவன் குறிப்பு அறிந்து, தோழி பொருளது நிலையாமை கூறி, ‘அவளோடு கூடிச் செல்கின்ற இல்வாழ்க்கைச் செலவே பொருள்’ என, அவன்்செலவு அழுங்கக் கூறியது

10
தோழி கூற்று

வறியவன் இளமை போல், வாடிய சினையவாய்,
சிறியவன் செல்வம் போல், சேர்ந்தார்க்கு நிழல் இன்றி,
யார்கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல்,
வேரொடு மரம் வெம்ப, விரி கதிர் தெறுதலின்,
5அலவுற்றுக் குடி கூவ, ஆறு இன்றிப் பொருள் வெஃகி,
கொலை அஞ்சா வினைவரால், கோல் கோடியவன் நிழல்
உலகு போல், உலறிய உயர் மர வெஞ் சுரம்
இடை கொண்டு பொருள்வயின் இறத்தி நீ எனக் கேட்பின்,
உடைபு நெஞ்சு உக, ஆங்கே ஒளியோடற்பாள்மன்னோ
10படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ
புடைபெயர்வாய்ஆயினும், புலம்பு கொண்டு இனைபவள்?
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின்,
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்மன்னோ
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகையாகத்
15துனி செய்து நீடினும், துறப்பு அஞ்சிக் கலுழ்பவள்?
பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின்,
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்மன்னோ
இருள் நோக்கம் இடையின்றி, ஈரத்தின் இயன்ற நின்
அருள் நோக்கம் அழியினும், அவலம் கொண்டு அழிபவள்?
20என ஆங்கு
‘வினை வெஃகி நீ செலின், விடும் இவள் உயிர்’ என,
புனையிழாய்! நின் நிலை யான் கூற, பையென,
நிலவு வேல் நெடுந் தகை நீள் இடைச்
செலவு ஒழிந்தனனால்; செறிக, நின் வளையே!

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, ‘இவ் வகைப்பட்ட சுரத்தைப் பொருள் காரணமாகப் பிரிகின்றீர் எனக் கேட்பின், இவ் வகை ஆகற்பாலள்’எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தமை தலைமகட்குச் சொல்லியது

12
தோழி கூற்று

இடு முள் நெடு வேலி போல, கொலைவர்
கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த
கடு நவை ஆர் ஆற்று, அறுசுனை முற்றி,
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை
5கடுந் தாம் பதிபு, ஆங்குக் கை தெறப்பட்டு,
வெறி நிரை வேறாகச் சார்ச்சாரல் ஓடி,
நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம்
சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும், அஞ்சும்
நறுநுதல் நீத்துப் பொருள்வயிற் செல்வோய்!
10உரனுடை உள்ளத்தை; செய் பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்!
இளமையும் காமமும் நின் பாணி நில்லா
இடை முலைக் கோதை குழைய முயங்கும்
முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை
15கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை
போற்றாய் பெரும! நீ, காமம் புகர்பட
வேற்றுமைக் கொண்டு, பொருள்வயிற் போகுவாய்!
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக் கொண்ட வழி

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, காட்டது கடுமையும், தலைவியது மென்மையும், ‘நாளது சின்மையும், இளமையது அருமையும், தாளாண் பக்கமும்,தகுதியது அமைதியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும்’ கூறி, செலவு அழுங்குவித்தது.

13
தோழி கூற்று

செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல,
எரி மேய்ந்த கரி வறல்வாய், புகவு காணாவாய்,
பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்,
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட,
5மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க,
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,
ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது,
சேறு சுவைத்து, தம் செல் உயிர் தாங்கும்
புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ் சுரம்
10எல்வளை! எம்மொடு நீ வரின், யாழ நின்
மெல் இயல் மே வந்த சீறடி, தாமரை
அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போல,
கல் உறின், அவ் அடி கறுக்குந அல்லவோ?
நலம் பெறும் சுடர்நுதால்! எம்மொடு நீ வரின்,
15இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்
துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ?
கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின்,
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட,
20முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ?
என ஆங்கு,
அனையவை காதலர் கூறலின், ‘வினைவயிற்
பிரிகுவர்’ எனப் பெரிது அழியாதி, திரிபு உறீஇ;
25கடுங் குரை அருமைய காடு எனின், அல்லது,
கொடுங்குழாய்! துறக்குநர்அல்லர்
நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய தலைமகள், ‘யான் நும்மோடு போதுவல்’ என்றாட்கு, தலைவன் அவளது மென்மையும் காட்டின் கடுமையும் கூறி,உடம்படானாக, ஆற்றாளாய தலைவியைத் தோழி, ‘அவர் நம்மோடு நகையாடிச் சொன்னார், பிரிவரல்லர்’ என வற்புறுத்தியது(12)

14
தோழி கூற்று

‘அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்,
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண்,
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல்,
மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல்,
5அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல்,
சில நிரை வால் வளை, செய்யாயோ!’ என,
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது,
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே
10‘பொருள் அல்லால் பொருளும் உண்டோ?’ என, யாழ நின்
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ?
‘காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு? என,
ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ?
செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள்
15இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ?
அதனால்,
எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள் நாம்
கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து
அவவுக் கைவிடுதம்; அது மனும் பொருளே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகற்கு ‘முன்னையின் சிறப்ப எம்வயின் பாராட்டியதெல்லாம் எம்வயின் பிறந்த வெறுப்பு என்பது இப்பொழுது அறிந்தேன்; இவ் வகைப்பட்ட போக்கு நினக்கு எவ் வகையான் வந்தது?’ என,அவன் செலவு அழுங்கச் சொல்லியது(13)

15
தோழி கூற்று

அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்
புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால்
இணைப் படைத் தானை அரசோடு உறினும்
கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின்,
5எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,
உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர்,
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு
அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம்
10புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்?
பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
15மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்?
பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ
20புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா,
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்?
என ஆங்கு,
அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்;
வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள்
25முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த
இளமையும் தருவதோ, இறந்த பின்னே?

பிரிவு உணர்த்திய தலைமகற்கு, தோழி, தலைமகளது ஆற்றாமையும், இளமையது அருமையும் கூறி, ‘நீர் பிரிந்து செய்யக் கருதியவை எக் காலத்தும் செய்யலாம்;பொருளால் கழிந்த இளமை மீட்கலாமோ?’ எனக் கூறியது.

16
தோழி கூற்று

பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க,
வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர,
ஆடு எழில் அழிவு அஞ்சாது, அகன்றவர்திறத்து, இனி
நாடுங்கால், நினைப்பது ஒன்று உடையேன்மன்? அதுவும்தான்
5தொல் நலம் தொலைபு, ஈங்கு, யாம் துயர் உழப்பத் துறந்து, உள்ளார்,
துன்னி, நம் காதலர், துறந்து ஏகும் ஆர் இடை,
'கல்மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு!' என,
இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ?
புனையிழாய்! ஈங்கு நாம் புலம்புற, பொருள் வெஃகி,
10முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடை,
‘சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக!’ என,
கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?
ஒளியிழாய்! ஈங்கு நாம் துயர் கூர, பொருள்வயின்,
அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை,
15‘முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக!’ என,
வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ?
என ஆங்கு,
செய் பொருட் சிறப்பு எண்ணிச் செல்வார்மாட்டு, இனையன
தெய்வத்துத் திறன் நோக்கி, தெருமரல் தேமொழி!
20‘வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள்
நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு’ என,
அறன் ஓடி விலங்கின்று, அவர் ஆள்வினைத் திறத்தே

தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, அவன் போகிய காட்டது கடுமை நினைந்து ஆற்றாளாகிய தலைமகள், ‘அவர் பொருட்டாக நாம் இவ் வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?’ என, கேட்ட தோழி, ‘அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவல வேண்டா’ எனக் கூறியது(15)

17
தோழி கூற்று

படை பண்ணிப் புனையவும், பா மாண்ட பல அணை
புடை பெயர்ந்து ஒடுங்கவும், புறம் சேர உயிர்ப்பவும்,
‘உடையதை எவன் கொல்?’ என்று ஊறு அளந்தவர்வயின்
நடை செல்லாய், நனி ஏங்கி நடுங்கற்காண் நறுநுதால்!
5‘தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப, துறந்து நீ,
வல் வினை வயக்குதல் வலித்திமன்; வலிப்பளவை,
நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது,
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ?
ஆற்றல் நோய் அட, இவள் அணி வாட, அகன்று நீ,
10தோற்றம் சால் தொகு பொருள் முயறிமன்; முயல்வளவை,
நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக்
கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ?
வகை எழில் வனப்பு எஞ்ச, வரை போக வலித்து நீ,
பகை அறு பய வினை முயறிமன்; முயல்வளவை,
15தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின்
முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ?’
என ஆங்கு,
பொருந்தி யான் தான் வேட்ட பொருள்வயின் நினைந்த சொல்,
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
20மருந்து போல், மருந்து ஆகி, மனன் உவப்ப
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே

பகைவர் திறை தந்த நாடு காத்தற்கு (தலைவன்) பிரிகின்றமை உணர்ந்து, தலைவி வேறுபட்டமை கண்டு, தோழி அவனை எதிர்ப்பட்டு, அவளது ஆற்றாமையும் இளமையது அருமையும் கூறிச் செலவு அழுங்குவித்தமை தலைமகட்குக் கூறியது

18
தோழி கூற்று

அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப,
பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ,
என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின்
மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்:
5சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது;
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்;
இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார்
வளமை விழைதக்கது உண்டோ? உள நாள்,
ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை
10ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரேஆயினும்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ,
சென்ற இளமை தரற்கு!

‘ஒன்றாத் தமரினும்’ என்னும் சூத்திரத்தில் ‘நாளது சின்மையும், இளமையதுஅருமையும், தாளாண் பக்கமும், தகுதியது அமைதியும், இன்மையது இழிவும், உடைமையது உயர்ச்சியும், அன்பினது அகலமும், அகற்சியது அருமையும்’ எனக் கூறிய எட்டினையும் தலைவன் கூறக் கேட்ட தோழி, அவற்றை ‘நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே’ என்னும் விதியால் தலைவற்குக் கூறிச் செலவு அழுங்குவித்தது.(17)

19
தோழி கூற்று

செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்
பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!
அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,
5பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;
மகன் அல்லை மன்ற, இனி
செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,
அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்
பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை
10என் திறம் யாதும் வினவல்; வினவின்,
பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,
தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்
அவலம் படுதலும் உண்டு

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி செலவு விலக்கவும், பிரிவின்மேல் சென்ற உள்ளத்தன் ஆயினானை, 'நீ பிரியின், இவள் இறந்துபடும்' எனச் சொல்லிய வாய்பாட்டான் மறுத்தது.

21
தோழி கூற்று

‘பால் மருள் மருப்பின், உரல் புரை பாவு அடி,
ஈர் நறுங் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து,
பொருள்வயிற் பிரிதல் வேண்டும்’ என்னும்
5அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே;
நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி,
நின்னின் பிரியலன், அஞ்சல் ஓம்பு’ என்னும்
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே:
அவற்றுள் யாவோ வாயின? மாஅல் மகனே!
10‘கிழவர் இன்னோர்’ என்னாது, பொருள்தான்,
பழ வினை மருங்கின் பெயர்பு பெயர்பு உறையும்;
அன்ன பொருள்வயிற் பிரிவோய் நின் இன்று
இமைப்புவரை வாழாள் மடவோள்
அமைக் கவின் கொண்ட தோள் இணை மறந்தே

தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அவனை நெருங்கி, களவுக் காலத்து ஒழுக்கம் எடுத்துக் காட்டலால் தெளிவுபட மொழிந்ததூஉம், பொருளது நிலையின்மையும்,அவளது ஆற்றாமையும், கூறிச் செலவு மறுத்தது

22
தோழி கூற்று

உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும், தாம்
கொண்டது கொடுக்குங்கால் முகனும், வேறாகுதல்
பண்டும் இவ் உலகத்து இயற்கை; அஃது இன்றும்
புதுவது அன்றே புலனுடை மாந்திர்!
5தாய் உயிர் பெய்த பாவை போல,
நலன் உடையார் மொழிக்கண் தாவார்; தாம் தம் நலம்
தாது தேர் பறவையின் அருந்து, இறல் கொடுக்குங்கால்,
ஏதிலார் கூறுவது எவனோ, நின் பொருள் வேட்கை?
நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த
10செறி முறை பாராட்டினாய்; மற்று, எம் பல்லின்
பறி முறை பாராட்டினையோ? ஐய!
நெய் இடை நீவி மணி ஒளி விட்டன்ன
ஐவகை பாராட்டினாய்; மற்று, எம் கூந்தல்
செய்வினை பாராட்டினையோ? ஐய!
15குளன் அணி தாமரைப் பாசரும்பு ஏய்க்கும்
இள முலை பாராட்டினாய்; மற்று, எம் மார்பில்
தளர் முலை பாராட்டினையோ? ஐய!
என ஆங்கு,
அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாட,
20சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எங்கண்
படர் கூற நின்றதும் உண்டோ? தொடர் கூர,
துவ்வாமை வந்தக்கடை?

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, அதற்கு உடம்படாது, தலைமகனை நெருங்கி, களவுக் காலத்து ஒழுக்கம் எடுத்துக் காட்டி ஆற்றுவித்து, உடம்பட்ட வாய்பாட்டான் மறுத்தது

25
தோழி கூற்று

வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்,
‘ஐவர்’ என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா,
கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு,
5களி திகழ் கடாஅத்த கடுங் களிறு அகத்தவா,
முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல்,
ஒள் உரு அரக்கு இல்லை வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல,
எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம்,
10அழுவம் சூழ், புகை அழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்து போம், குன்று அழல் வெஞ் சுரம்
இறத்திரால், ஐய! மற்று இவள் நிலைமை கேட்டீமின்:
மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய், சிறிது நீர்
தணக்குங்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ
15சிறப்புச் செய்து உழையராப் புகழ்பு ஏத்தி, மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்?
ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்குங்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ
செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு, மற்று அவர்
20ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல்?
ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து, ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால், பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல்?
25என ஆங்கு,
யாம் நிற் கூறுவது எவன் உண்டு? எம்மினும்
நீ நற்கு அறிந்தனை; நெடுந் தகை! வானம்
துளி மாறு பொழுதின், இவ் உலகம் போலும் நின்
அளி மாறு பொழுதின், இவ் ஆயிழை கவினே

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, 'நீ பிரிந்தால் பீடிலார் தொடர்பு போல,நும்மை அலர் தூற்றுவன இவ் வகைப்பட்டன சில உள' எனத் தலைவி ஆற்றாமை கூறி, செலவு அழுங்குவித்தது.

26
தோழி கூற்று

‘ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,
பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,
மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,
ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,
5ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்கு,
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல,
போது அவிழ் மரத்தொடு பொருகரை கவின் பெற,
நோ தக வந்தன்றால், இளவேனில் மே தக
பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்து,
10தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
வெல் புகழ் உலகு ஏத்த, விருந்து நாட்டு உறைபவர்
திசை திசை தேன் ஆர்க்கும் திருமருதமுன்துறை,
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார்
15நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கி, தம்
இசை பரந்து, உலகு ஏத்த, ஏதில் நாட்டு உறைபவர்
அறல் சாஅய் பொழுதோடு, எம் அணி நுதல் வேறாகி,
திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார்
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி,
20ஆறு இன்றிப் பொருள் வெஃகி, அகன்ற நாட்டு உறைபவர்’
என, நீ
தெருமரல் வாழி, தோழி! நம் காதலர்,
பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர்
செரு மேம்பட்ட வென்றியர்;
25‘வரும்’ என வந்தன்று, அவர் வாய்மொழித் தூதே

‘மேவிய சிறப்பின் ஏனோர்’ என்னும் சூத்திரத்தில், பகைமேற் சென்ற அரசன் திறை பெற்ற நாடு காத்து, அதன்கண் தன் நெறி முறைமை அடிப்படுத்து வருதற்குப் பிரிவன் என்றலின், பிரிவின்கண் தலைவன் இளவேனிற் காலம் குறித்துப் பிரிய,அக் கால வரவின்கண் தலைவி ஆற்றாளாய், ‘அவர் நமக்கு அருளும் காலையில் அருளார் காண்’ என்றாட்கு, தோழி, ‘அவர் வரவிற்கு இக் காலம் தூதாயன்றே வந்தது; நீ ஆற்றுவாயாக’ என வற்புறுத்தியது(25)

27
தோழி கூற்று

‘ஈதலில் குறை காட்டாது, அறன் அறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம் போல், தீம் கரை மரம் நந்த;
பேதுறு மட மொழி, பிணை எழில் மான் நோக்கின்;
மாதரார் முறுவல் போல், மண மௌவல் முகை ஊழ்ப்ப;
5காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு
தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை பெற;
பேதையோன் வினை வாங்க, பீடு இலா அரசன் நாட்டு,
ஏதிலான் படை போல, இறுத்தந்தது, இளவேனில்
நிலம் பூத்த மரமிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள,
10நலம் பூத்த நிறம் சாய, நம்மையோ மறந்தைக்க;
கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய,
புலம் பூத்து, புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்கொல்?
கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற,
தொல் நலம் நனி சாய, நம்மையோ மறந்தைக்க;
15ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு நீர் மா கொன்ற,
வென் வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்?
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள,
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க;
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
20வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்?’
என ஆங்கு,
நோய் மலி நெஞ்சமோடு இனையல், தோழி!
நாம் இல்லாப் புலம்பாயின், நடுக்கம் செய் பொழுதாயின்,
காமவேள் விழவாயின், ‘கலங்குவள் பெரிது’ என,
25ஏமுறு கடுந் திண் தேர் கடவி,
நாம் அமர் காதலர் துணை தந்தார், விரைந்தே

தலைவன் குறித்துப் பிரிந்த இளவேனில் வரவின்கண், ‘எம்மையோ மறக்க; இக்காலத்து, இவ் ஊரின்கண், தாம் விளையாடும் விளையாட்டும் மறந்தாரோ?’ எனச் சொல்லி ஆற்றாளாய தலைவிக்கு, தோழி தலைவன் வரவு உணர்ந்து, கழி உவகையால் கூறியது.(26)

28
தோழி கூற்று

‘பாடல் சால் சிறப்பின் சினையவும், சுனையவும்
நாடினர் கொயல் வேண்டா, நயந்து தாம் கொடுப்ப போல்,
தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார்கண்
தோடுறத் தாழ்ந்து, துறை துறை கவின் பெற,
5செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு,
தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல்
வையை வார் அவிர் அறல், இடை போழும் பொழுதினான்
விரிந்து ஆனா மலராயின், விளித்து ஆலும் குயிலாயின்,
பிரிந்து உள்ளார் அவராயின், பேதுறூஉம் பொழுதாயின்,
10அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது
வருந்த, நோய் மிகுமாயின் வணங்கிறை! அளி என்னோ?
புதலவை மலராயின், பொங்கரின வண்டாயின்,
அயலதை அலராயின், அகன்று உள்ளார் அவராயின்,
மதலை இல் நெஞ்சொடு மதனிலள் என்னாது
15நுதல் ஊரும் பசப்பாயின் நுணங்கிறை! அளி என்னோ?
தோயின அறலாயின், சுரும்பு ஆர்க்கும் சினையாயின்,
மாவின தளிராயின், மறந்து உள்ளார் அவராயின்,
பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது
பாயல் நோய் மிகுமாயின் பைந்தொடி! அளி என்னோ?'
20என ஆங்கு,
ஆயிழாய்! ஆங்கனம் உரையாதி; சேயார்க்கு
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா; நம்மினும்
தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்,
பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே?

இளவேனில் வரவின்கண் ஆற்றாத தலைவி தூது விடக் கருத, தோழி, ‘அவர் பிரிந்திருத்தலை நம்மினும் தாம் வல்லரல்லர்’ எனச் சொல்லி, வற்புறுத்தியது

29
தோழி கூற்று

‘தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின்,
அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல்,
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம்
புல்லிய புனிறு ஒரீஇப் புது நலம் ஏர்தர;
5வளையவர் வண்டல் போல், வார் மணல் வடுக் கொள;
இளையவர் ஐம்பால் போல், எக்கர் போழ்ந்து அறல் வார;
மா ஈன்ற தளிர்மிசை, மாயவள் திதலை போல்,
ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர;
மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்கண்
10சேயார்கண் சென்ற என் நெஞ்சினை சின்மொழி!
நீ கூறும் வரைத்து அன்றி, நிறுப்பென்மன்? நிறை நீவி,
வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பல் மலர் தீண்டி,
நோய் சேர்ந்த வைகலான், வாடை வந்து அலைத்தரூஉம்
போழ்து உள்ளார் துறந்தார்கண் புரி வாடும் கொள்கையைச்
15சூழ்பு ஆங்கே சுடரிழாய்! கரப்பென்மன்? கைநீவி
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இருந் தும்பி
யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம்
தொடி நிலை நெகிழ்த்தார்கண் தோயும் என் ஆர் உயிர்
வடு நீங்கு கிளவியாய்! வலிப்பென்மன்? வலிப்பவும்,
20நெடு நிலா, திறந்து உண்ண, நிரை இதழ் வாய் விட்ட
கடி மலர் கமழ் நாற்றம், கங்குல் வந்து, அலைத்தரூஉம்’
என ஆங்கு,
வருந்தினை வதிந்த நின் வளை நீங்க, சேய் நாட்டுப்
பிரிந்து செய் பொருட் பிணி பின் நோக்காது ஏகி, நம்
25அருந் துயர் களைஞர் வந்தனர்
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே

பருவ வரவின்கண் ஆற்றாத தலைவியைத் தோழி வற்புறுப்ப, வன்புறை எதிர் அழிந்தாட்கு, தோழி அவன் வரவு உணர்ந்து கழி உவகையால் கூறியது

31
தோழி கூற்று

‘கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற,
நெடுங் கயத்து அயல் அயல் அயிர் தோன்ற, அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக,
பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீய, காதலர்ப்
5புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன,
மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால்,
கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுதுமன்
"பொய்யேம்" என்று, ஆயிழாய்! புணர்ந்தவர் உரைத்ததை
மயங்கு அமர் மாறு அட்டு, மண் வௌவி வருபவர்,
10தயங்கிய களிற்றின்மேல், தகை காண விடுவதோ
பயங் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு,
வயங்கு இழை தண்ணென, வந்த இவ் அசை வாடை?
தாள் வலம்பட வென்று, தகை நன் மா மேல்கொண்டு,
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
15நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு,
தோள் அதிர்பு அகம் சேர, துவற்றும் இச் சில் மழை?
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர்
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ
புகை எனப் புதல் சூழ்ந்து, பூ அம் கள் பொதி செய்யா
20முகை வெண் பல் நுதி பொர, முற்றிய கடும் பனி?'
என ஆங்கு,
வாளாதி, வயங்கிழாய்! ‘வருந்துவள் இவள்’ என,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
மீளி வேல் தானையர் புகுதந்தார்
25நீள் உயர் கூடல் நெடுங் கொடி எழவே

‘இளவேனிற் காலத்து வருவல்; அத்துணையும் ஆற்றியிரு’ என்று மண் நசையால் வேந்தன் சென்றவழி, முன்பனிக் காலமும் பின்பனிக் காலமும் வந்து வருத்தலின்,ஆற்றாத தலைவியைத் தோழி, ‘வருவர்’ என வற்புறுப்பவும், வன்புறை எதிர் அழிந்த வழி, தலைவன் ‘யாம் குறித்த பருவம் வரும்துணையும் ஆற்றியிராள்’ எனப் பின்பனிக் காலத்து வருகின்ற வரவு உணர்ந்து, தோழி கழி உவகையால் கூறியது(30)

32
தோழி கூற்று

எஃகு இடை தொட்ட, கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல்
மை அற விளங்கிய, துவர் மணல் அது; அது
ஐதாக நெறித்தன்ன அறல் அவிர் நீள் ஐம்பால்
அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல்,
5பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொள
துணி நீரால், தூ மதி நாளால், அணி பெற
ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும்,
ஆன்றவர் அடக்கம் போல் அலர்ச் செல்லாச் சினையொடும்,
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும்,
10நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும்,
உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும்,
புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும்
நயந்தார்க்கோ நல்லைமன், இளவேனில்! எம் போல?
பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து, நம்
15இன் உயிர் செய்யும் மருந்தாகி, பின்னிய
காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப்
போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும்
தூது வந்தன்றே தோழி!
துயர் அறு கிளவியோடு: அயர்ந்தீகம் விருந்தே

கால வரவு கண்டு ஆற்றாளாயின இடத்து, தோழி காலத்தை நோக்கி, ‘அழகிதாகச் செய்தாய், வந்து’ எனச் சொல்லி, தலைவிக்கு, "நம் காதலர் வருகின்றார்" எனச் சொல்லி வந்த தூது காண் இது; நாம் விருந்து அயர்கம்’ எனச் சொல்லியது

33
தோழி கூற்று

‘வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய
யாறு கண் விழித்த போல், கயம் நந்திக் கவின் பெற,
மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போல,
பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உக,
5துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப,
மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய,
காதலர்ப் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது,
தாது அவிழ் வேனிலோ வந்தன்று; வாரார், நம்
போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர்!
10எரி உரு உறழ இலவம் மலர,
பொரி உரு உறழப் புன்கு பூ உதிர,
புது மலர்க் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்ப,
தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி, முனிய வந்து,
ஆர்ப்பது போலும் பொழுது; என் அணி நலம்
15போர்ப்பது போலும் பசப்பு
நொந்து நகுவன போல் நந்தின, கொம்பு; நைந்து உள்ளி
உகுவது போலும், என் நெஞ்சு; எள்ளி,
தொகுபு உடன் ஆடுவ போலும், மயில்; கையில்
உகுவன போலும், வளை; என் கண் போல்
20இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார்;
மிகுவது போலும், இந் நோய்
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல்
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத
தூது அவர் விடுதரார் துறப்பார்கொல்? நோதக,
25இருங் குயில் ஆலும் அரோ.’
என ஆங்கு,
புரிந்து நீ எள்ளும் குயிலையும், அவரையும், புலவாதி
நீல் இதழ் உண்கணாய்! நெறி கூந்தல் பிணி விட,
நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி,
30மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார்
கால் உறழ் கடுந் திண் தேர் கடவினர் விரைந்தே

பருவ வரவின்கண் வன்புறை எதிரழிந்து ஆற்றாளாயினாளைத் தோழி, தலைவனது வரவு உணர்ந்து கூறி ஆற்றுவித்தது

34
தோழி கூற்று

‘மன் உயிர் ஏமுற, மலர் ஞாலம் புரவு ஈன்று,
பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி, இறந்த பின்,
சில் நீரால் அறல் வார, அகல் யாறு கவின் பெற,
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
5பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர் போல்,
பல் மலர் சினை உக, சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப,
இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்
விரி காஞ்சித் தாது ஆடி இருங் குயில் விளிப்பவும்,
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
10கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி,
எரி பொத்தி, என் நெஞ்சம் சுடும்ஆயின், எவன் செய்கோ?
பொறை தளர் கொம்பின்மேல் சிதரினம் இறை கொள,
நிறை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு,
15பொறை தளர்பு பனி வாரும் கண்ஆயின், எவன் செய்கோ?
தளை அவிழ் பூஞ் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும்,
கொளை தளராதவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும்,
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று,
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள்ஆயின், எவன் செய்கோ?’
20என ஆங்கு,
நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல்; எல்லா! நாம்
எண்ணிய நாள்வரை இறவாது, காதலர்
பண்ணிய மாவினர் புகுதந்தார்
கண் உறு பூசல் கை களைந்தாங்கே

பருவம் கண்டு வன்புறை எதிரழிந்து ஆற்றாளாய தலைவிக்குத் தோழி அவன் வரவு உணர்ந்து, கழி உவகையால் கூறியது

35
தோழி கூற்று

‘மடியிலான் செல்வம் போல் மரன் நந்த, அச் செல்வம்
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப;
மாயவள் மேனி போல் தளிர் ஈன, அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர்மிசைத் தாது உக;
5மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப,
அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார;
நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால்,
துறந்து உள்ளார் அவர்’ எனத் துனி கொள்ளல் எல்லா! நீ
‘வண்ண வண்டு இமிர்ந்து, ஆனா வையை வார் உயர் எக்கர்,
10தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுதன்றோ
கண் நிலா நீர் மல்கக் கவவி, நாம் விடுத்தக்கால்,
ஒண்ணுதால்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து, அவர்,
வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுதன்றோ
15"வலன் ஆக, வினை!" என்று வணங்கி, நாம் விடுத்தக்கால்,
ஒளியிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார்
புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ
பல நாடு நெஞ்சினேம் பரிந்து, நாம் விடுத்தக்கால்,
20சுடரிழாய்! நமக்கு அவர் "வருதும்" என்று உரைத்ததை?
என ஆங்கு,
உள்ளுதொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பாகி,
எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல்
காமர் கடுந் திண் தேர்ப் பொருப்பன்
25வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே

வற்புறுத்தும் தோழிக்குத் தலைவி, ‘இக் காலம் அல்லவோ, அவர் வருதும் எனச் சொன்ன காலம்?’ என வன்புறை எதிர் அழிந்தாளை, ‘நீ துனி கொள்ளல்; அவர் வந்தார்’ எனத் தலைவன் வரவு உணர்ந்து, தோழி ஆற்றுவித்தது

36
தோழி கூற்று

‘கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல், மராத்து
நெடுமிசைச் சூழும் மயில் ஆலும் சீர,
வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்ப,
தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர,
5இயன் எழீஇயவை போல, எவ் வாயும் இம்மென,
கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத,
மலர் ஆய்ந்து வயின் வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப,
இருங் குயில் ஆல, பெருந் துறை கவின் பெற,
குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும்
10சீரார் செவ்வியும், வந்தன்று;
வாரார், தோழி! நம் காதலோரே
பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று, நுதல்;
சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன, தோள்
நனி அறல் வாரும் பொழுது என, வெய்ய
15பனி அறல் வாரும், என் கண்
மலையிடைப் போயினர் வரல் நசைஇ, நோயொடு
முலையிடைக் கனலும், என் நெஞ்சு
காதலின் பிரிந்தார்கொல்லோ? வறிது, ஓர்
தூதொடு மறந்தார்கொல்லோ? நோதக,
20காதலர் காதலும் காண்பாம்கொல்லோ?
துறந்தவர் ஆண்டு ஆண்டு உறைகுவர்கொல்லோ? யாவது?'
"நீள் இடைப் படுதலும் ஒல்லும்; யாழ நின்,
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி!
நாள் அணி சிதைத்தலும் உண்டு" என நய வந்து,
25கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே’

காலம் கண்டு ஆற்றாத தலைவியது நிலைமை கண்டு, ஆற்றாத தோழி தான் ஆற்றாளாய்,அவட்குக் கூறியது.

37
தோழி கூற்று

கய மலர் உண்கண்ணாய்! காணாய்: ஒருவன்
வய மான் அடித் தேர்வான் போல, தொடை மாண்ட
கண்ணியன் வில்லன், வரும்; என்னை நோக்குபு,
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தான் உற்ற
5நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல் நாளும்;
பாயல் பெறேஎன், படர் கூர்ந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயர் உழப்பேன்; ஆயிடைக்
கண் நின்று கூறுதல் ஆற்றான், அவனாயின்;
பெண் அன்று, உரைத்தல், நமக்காயின்; ‘இன்னதூஉம்
10காணான் கழிதலும் உண்டு' என்று, ஒரு நாள், என்
தோள் நெகிழ்பு உற்ற துயரால் துணிதந்து, ஓர்
நாண் இன்மை செய்தேன்: நறுநுதால்! ஏனல்
இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல்,
ஊசல் ஊர்ந்து ஆட, ஒரு ஞான்று வந்தானை,
15‘ஐய! சிறிது என்னை ஊக்கி’ எனக் கூற,
‘தையால்! நன்று! என்று அவன் ஊக்க, கை நெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன் மார்பின்; வாயாச் செத்து,
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்; மேல்
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்மன்; ஆயிடை
20மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென,
‘ஒண்குழாய்! செல்க’ எனக் கூறி விடும் பண்பின்
அங்கண் உடையன் அவன்

‘நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும், செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும், புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம், உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை,’ தன்னை அவள் மறையாமை காரணமாக, ‘மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது, பல் வேறு கவர் பொருள் நாட்டத்தான்’ தலைமகட்குத் தோழி கூறியது(1)

38
தோழி கூற்று

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்
உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக,
ஐ இரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து, அம் மலை
5எடுக்கல்செல்லாது உழப்பவன் போல
உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை
நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய், தன்
கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்:
10ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால்,
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள், வைகறை,
கார் பெற்ற புலமே போல், கவின் பெறும்; அக் கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால்,
15பொருளில்லான் இளமை போல் புல்லென்றாள், வைகறை,
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும்; அவ் அணி
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல், உரைத்தைக்காண்
மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால்,
அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள், வைகறை,
20திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும்; அத் திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல், உரைத்தைக்காண்
என ஆங்கு,
நின் உறு விழுமம் கூறக் கேட்டு,
வருமே, தோழி! நல் மலை நாடன்
25வேங்கை விரிவு இடம் நோக்கி,
வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே

இரவுக்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழி தலைவியது நிலைமை கூறி அவனை வரைவு கடாவ, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு வரைவு மலிந்து கூறியது

39
தோழி கூற்று


தோழி தான் அறத்தொடு நின்றமை தலைவிக்குக் கூறி, தாங்கள்

ஆடும் குரவையுள் கொண்டுநிலை பாட, அவளை வேண்டுதல்

‘காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்,
தாமரைக்கண் புதைத்து, அஞ்சித் தளர்ந்து, அதனோடு ஒழுகலான்,
நீள் நாக நறுந் தண் தார் தயங்கப் பாய்ந்து, அருளினால்,
பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம்
5வரு முலை புணர்ந்தன என்பதனால், என் தோழி
அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே
அவனும்தான், ஏனல் இதணத்து அகிற் புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரை சேரின், அவ் வரை,
"தேனின் இறால்" என, ஏணி இழைத்திருக்கும்
10கான் அகல் நாடன் மகன்
சிறுகுடியீரே! சிறுகுடியீரே!
வள்ளி கீழ் வீழா; வரைமிசைத் தேன் தொடா;
கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர்
அல்ல புரிந்து ஒழுகலான்
15காந்தள் கடி கமழும், கண் வாங்கு, இருஞ் சிலம்பின்
வாங்கு அமை மென் தோட் குறவர் மட மகளிர்
தாம் பிழையார், கேள்வர்த் தொழுது எழலால், தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்'
என ஆங்கு,
20அறத்தொடு நின்றேனைக் கண்டு, திறப்பட
என்னையர்க்கு உய்த்து உரைத்தாள், யாய்
அவரும் தெரி கணை நோக்கி, சிலை நோக்கி, கண் சேந்து,
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து, ஆறி,
‘இருவர்கண் குற்றமும் இல்லையால்’ என்று,
25தெருமந்து சாய்த்தார் தலை
தெரியிழாய்! நீயும் நின் கேளும் புணர,
வரை உறை தெய்வம் உவப்ப, உவந்து
குரவை தழீஇ யாம் ஆட, குரவையுள்
கொண்டுநிலை பாடிக்காண்

தலைவியின் மறுமொழி

30நல்லாய்!
நல் நாள் தலைவரும் எல்லை, நமர் மலைத்
தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர்கொல்?
புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில்,
நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ?
35நனவில் புணர்ச்சி நடக்கலும், ஆங்கே
கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ?

தோழி கூற்று

விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள்
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்மன் கொலோ?
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழங் கேண்மை
40கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்மன் கொலோ?
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல்
கையால் புதை பெறூஉம் கண்களும் கண்களோ?

தலைவியின் மறுமொழி

என்னை மன் நின் கண்ணால் காண்பென்மன், யான்

மீண்டும் தோழி உரைத்தல்

நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக, என் கண் மன!
45என ஆங்கு,
நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇ,
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனமாக,
வேய் புரை மென் தோட் பசலையும், அம்பலும்,
மாயப் புணர்ச்சியும், எல்லாம் உடன் நீங்க,
50சேய் உயர் வெற்பனும் வந்தனன்;
பூ எழில் உண் கணும் பொலிகமா, இனியே!

‘முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகைப், புரை தீர் கிளவி தாயிடைப் புகுப்பினும்’ என்னும் விதி பற்றித் தமர் வரைவு மறுத்துழி, தோழி தாயர்க்கு அறத்தொடு நிற்ப, அவள் நற்றாய்க்கு அறத்தொடு நிற்ப, அவள் தன்னையர் முதலியோர்க்கு அறத்தொடு நிற்ப, அவரும் ஒருவாற்றான் உடன்பட்டமை தோழி, தலைவிக்குக் கூறி, ,தானும் அவளும், வரைவு கடிதின் முடிதற் பொருட்டு, வரை உறை தெய்வத்திற்குக் குரவை ஆட, அவன் வரைய வருகின்றமை தோழி தலைவிக்கு உரைத்தது(3)

40
தோழி கூற்று


‘பாடுவோம்’ என்ற தோழியை நோக்கித் தலைவி உடம்பட்டுக் கூறுதல்

‘அகவினம் பாடுவாம், தோழி!’ ‘அமர் கண்
நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
5வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சி,
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்’

தோழியின் மறுமொழி

ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்,
தேன் நாறு கதுப்பினாய்! யானும் ஒன்று ஏத்துகு
10வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை

தலைவி இயற்படப் பாடாமையின் தோழி பாடுதல்

கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்காந்தள்
தொடுத்த தேன் சோர, தயங்கும் தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை
15கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லற்படுவான் மலை

தலைவி இயற்பழித்துப் பாடுதல்

புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத்
20தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்
விண் தோய் வரை, பந்து எறிந்த அயா வீட,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே
பெண்டிர் நலம் வௌவி, தண் சாரல் தாது உண்ணும்
25வண்டின் துறப்பான் மலை

தோழி இயற்பட மொழிதல்

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ்சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை

தலைவன் வரைவொடு புகுந்தமையைத் தோழி தலைவிக்கு அறிவித்தல்

30என நாம்,
தன் மலை பாட, நயவந்து கேட்டு, அருளி,
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெற,
செம்மலை ஆகிய மலைகிழவோனே

தோழியும் தலைமகளும் தலைமகனது மலையை வாழ்த்திப் பாடுகின்ற வள்ளைப்பாட்டில்,தோழி இயற்பட மொழிய, தலைமகள் இயற்பழித்தமை தலைமகன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைய வருகின்றமை தோழி, தலைமகட்கு உரைத்தது

41
தோழி கூற்று


வள்ளைப் பாட்டுப் பாட, தலைவியைத் தோழி அழைத்தல்

பாடுகம், வா வாழி, தோழி! வயக் களிற்றுக்
கோடு உலக்கையாக, நல் சேம்பின் இலை சுளகா,
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்
பாடுகம், வா வாழி தோழி! நல் தோழி! பாடுற்று
5இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடு நாள்,
கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து,
பிடியொடு மேயும் புன்செய் யானை
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடு வரை ஆசினிப் பணவை ஏறி,
10கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்,
இறு வரை வேங்கை ஒள் வீ சிதறி,
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா,
தேன் செய் இறாஅல் துளைபடப் போகி,
நறு வடி மாவின் பைந் துணர் உழக்கி,
15குலையுடை வாழைக் கொழு மடல் கிழியா,
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்
பாடுகம், வா வாழி, தோழி! நல் தோழி! பாடுற்று

தலைவி

இலங்கும் அருவித்து; இலங்கும் அருவித்தே;
வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற
20சூள் பேணான் பொய்த்தான் மலை

தோழி

பொய்த்தற்கு உரியனோ? பொய்த்தற்கு உரியனோ?
‘அஞ்சல் ஓம்பு’ என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ?
குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின்,
திங்களுள் தீத் தோன்றியற்று

தலைவி

25இள மழை ஆடும்; இள மழை ஆடும்;
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை
வளை நெகிழ வாராதோன் குன்று

தோழி

வாராது அமைவானோ? வாராது அமைவானோ?
வாராது அமைகுவான் அல்லன் மலைநாடன்
30ஈரத்துள் இன்னவை தோன்றின், நிழற் கயத்து
நீருள் குவளை வெந்தற்று

தலைவி

மணி போலத் தோன்றும்; மணி போலத் தோன்றும்;
மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத்
துன்னான் துறந்தான் மலை

தோழி

35துறக்குவன் அல்லன்; துறக்குவன் அல்லன்;
தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன்
தொடர்புள் இனையவை தோன்றின், விசும்பில்
சுடருள் இருள் தோன்றியற்று

தந்தை வரைவு உடம்பட்டமையைத் தலைவிக்குத் தோழி அறிவித்தல்

என ஆங்கு
40நன்று ஆகின்றால் தோழி! நம் வள்ளையுள்
ஒன்றி நாம் பாட, மறை நின்று கேட்டு அருளி,
மென் தோட் கிழவனும் வந்தனன்; நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து,
மணம் நயந்தனன், அம் மலைகிழவோற்கே

இருவரும் இவ் வகையால் பாடிய வள்ளைப் பாட்டு, தலைவன் சிறைப்புறமாகக் கேட்டு, வரைவு வேண்டிவிட, தந்தையும் வரைவு உடம்பட்டமை தோழி, தலைவிக்கு உரைத்தது

43
தோழி கூற்று


தோழி வள்ளைப் பாட்டுப் பாடத் தலைவியை அழைத்தல்

வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து
ஏந்து மருப்பின், இன வண்டு இமிர்பு ஊதும்
சாந்த மரத்தின், இயன்ற உலக்கையால்,
ஐவன வெண் நெல் அறை உரலுள் பெய்து, இருவாம்,
5ஐயனை ஏத்துவாம் போல, அணிபெற்ற
மை படு சென்னிப் பய மலை நாடனை,
தையலாய்! பாடுவாம், நாம்

தோழியின் பாடல்

தகையவர் கைச் செறித்த தாள்போல, காந்தள்
முகையின்மேல் தும்பி இருக்கும் பகை எனின்,
10கூற்றம் வரினும் தொலையான், தன் நட்டார்க்குத்
தோற்றலை நாணாதோன் குன்று

தலைவியைப் பாடுமாறு தோழி வேண்டுதல்

வெருள்பு உடன் நோக்கி, வியல் அறை யூகம்,
இருள் தூங்கு இறு வரை ஊர்பு இழிபு ஆடும்
வருடைமான் குழவிய வள மலை நாடனைத்
15தெருள தெரியிழாய்! நீ ஒன்று பாடித்தை

தலைவி

நுண் பொறி மான் செவி போல, வெதிர் முளைக்
கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே
மாறு கொண்டு ஆற்றார்எனினும், பிறர் குற்றம்
கூறுதல் தேற்றாதோன் குன்று

தோழி

20புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட
புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின்
வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை
மணம் நாறு கதுப்பினாய்! மறுத்து ஒன்று பாடித்தை

தலைவி

கடுங் கண் உழுவை அடி போல வாழைக்
25கொடுங் காய் குலைதொறூஉம் தூங்கும் இடும்பையால்
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால்,
தன் மெய் துறப்பான் மலை

தோழி

என ஆங்கு
கூடி அவர் திறம் பாட, என் தோழிக்கு
30வாடிய மென் தோளும் வீங்கின
ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே

வரைவு நீட ஆற்றாளாயின இடத்து, தோழி தானும் தலைவியும் வள்ளைப் பாடலுள் முருகனைப் பாடுவார் போல இருவர்க்கும் ஏற்பத் தலைவனைப் பாட, தலைவி ஆற்றினமை தோழி தன்னுள்ளே கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகக் கூறியது.

44
தோழி கூற்று

கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனஞ் சாரல்
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,
முதிர்இணர் ஊழ் கொண்ட முழவுத்தாள் எரிவேங்கை,
5வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதர,
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!
தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு,
10நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி,
கூரும் நோய் சிறப்பவும் நீ, செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள், என் தோழி அது கேட்டாங்கு,
‘ஓரும் நீ நிலையலை’ எனக் கூறல் தான் நாணி
நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை
15ஆயமும் மறைத்தாள், என் தோழி அது கேட்டு,
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி,
என ஆங்கு
இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,
அனை அரும் பண்பினான், நின் தீமை காத்தவள்
20அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்
மருந்து ஆகிச் செல்கம், பெரும! நாம் விரைந்தே

வரையாது வந்து ஒழுகும் தலைவனைத் தோழி, தலைவியது கற்பு மிகுதியும்,இவ் ஒழுக்கம் அலராகின்றமையும், அவளது ஆற்றாமையும், கூறி வரைவு கடாயது

45
தோழி கூற்று

விடியல் வெங் கதிர் காயும் வேய் அமல் அகல் அறை,
கடி சுனை கவினிய காந்தள் அம் குலையினை,
அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்து,
பெரும் மலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் கனை பெயல்
5உருமுக் கண்ணுறுதலின், உயர் குரல் ஒலி ஓடி,
நறு வீய நனஞ் சாரல் சிலம்பலின், கதுமென,
சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப!
கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின்
மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ
10புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி
பல் இதழ் மலர் உண்கண் பசப்ப, நீ சிதைத்ததை?
புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின்
அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ
கடை எனக் கலுழும் நோய் கைம்மிக, என் தோழி
15தடையின திரண்ட தோள் தகை வாட, சிதைத்ததை?
சுடர் உற உற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த
விடர் வரை எரி வேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ?
யாமத்தும் துயிலலள் அலமரும் என் தோழி
காமரு நல் எழில் கவின் வாட, சிதைத்ததை?
20என ஆங்கு,
தன் தீமை பல கூறிக் கழறலின், என் தோழி
மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான்,
பிறை புரை நுதல்! அவர்ப் பேணி நம்
உறை வரைந்தனர், அவர் உவக்கும் நாளே

வரைவிடை ஆற்றாத தலைவிக்கு, தோழி தான் தலைவனை நெருங்கி வரைவு கடாவ,அது கேட்ட தலைவன் வரைவு முயற்சியான் வருதல் இடையிட்டதூஉம், தமர் வரைவு எதிர்ந்ததூஉம், கூறி, அவளை ஆற்றுவித்தது

46
தோழி கூற்று

வீயகம் புலம்ப, வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,
5‘வேங்கை அம் சினை’ என விறற் புலி முற்றியும்,
பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும்,
வலி மிகு வெகுளியான் வாள் உற்ற மன்னரை
நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல், மறிதரும்
அயம் இழி அருவிய அணி மலை நல் நாட!
10ஏறு இரங்கு இருள் இடை இரவினில் பதம் பெறாஅன்,
மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும், தான் என்ப
கூடுதல் வேட்கையான், குறி பார்த்து, குரல் நொச்சிப்
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக
அருஞ் செலவு ஆர் இடை அருளி, வந்து அளி பெறாஅன்,
15வருந்தினென் எனப் பல வாய்விடூஉம், தான் என்ப
நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு, தன்மாட்டுப்
பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக
கனை பெயல் நடு நாள் யான் கண் மாற, குறி பெறாஅன்,
புனையிழாய்! என் பழி நினக்கு உரைக்கும், தான் என்ப
20துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின், தன்
அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக
என ஆங்கு,
கலந்த நோய் கைம்மிக, கண் படா என்வயின்
புலந்தாயும் நீ ஆயின், பொய்யானே வெல்குவை
25இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச்
சிலம்பு போல், கூறுவ கூறும்,
இலங்கு ஏர் எல் வளை, இவளுடை நோயே

அல்ல குறிப் பட்டுத் தலைவன் மீள, அதனை ‘என் பிழையாகக் கருதுவன்’ எனக்கவன்று ஆற்றாளாகி, ‘தன் குறி தள்ளிய தெருளாக் காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்களம் நோக்கி, தன் பிழைப்பாகத் தழீஇத் தேறிய’ தலைவியது நிலைமை தோழி தலைவற்குக் கூறி, "இவ் இடையீடு நின் தோழியின் ஆயிற்று" என, எனது பிழைப்பு ஆக்கி, அவளை ஆற்றுவிப்பாய்; நீ உரைத்ததே உரையாம் அவட்கு' என அவளது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது(10)

47
தோழி கூற்று

ஒன்று, இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும்; உலகம்
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன்;
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல்,
நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்;
5இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன்;
அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு, என்னைச்
சொல்லும் சொல், கேட்டீ சுடரிழாய்! பல் மாணும்:
‘நின் இன்றி அமையலேன் யான்’ என்னும் அவன் ஆயின்,
10அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிதுஆயின்,
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உளகொல்லோ? நறுநுதால்!
‘அறியாய் நீ; வருந்துவல் யான்’ என்னும் அவன் ஆயின்,
தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிதுஆயின்,
அளியரோ, எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார்?
15‘வாழலேன், யான்’ என்னும் ‘நீ நீப்பின்’ அவன் ஆயின்,
‘ஏழையர்’ எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின்,
சூழுங் கால், நினைப்பது ஒன்று அறிகலேன், வருந்துவல்;
சூழுங்கால், நறுநுதால்! நம்முளே சூழ்குவம்
‘அவனை,
20நாண் அட, பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது;
"பேணினர்" எனப்படுதல் பெண்மையும் அன்று; அவன்
வௌவினன் முயங்கும் மாத்திரம் வா’ எனக்
கூறுவென் போலக் காட்டி,
மற்று அவன் மேஎவழி மேவாய், நெஞ்சே!

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி, அவன் தன்மையும், அவன் தனக்குக் கூறுவனவும்,அக் கூற்றுத் தன்னால் பொறுக்கவொண்ணாதவாறும், அவன் கருத்தும், தலைவிக்குக் கூறி, அவன் குறை நயப்ப, தன்னுள்ளே சொல்லியது

48
தோழி கூற்று

ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போல,
தே மூசு, நனை கவுள், திசை காவல் கொளற்கு ஒத்த,
வாய் நில்லா வலி முன்பின், வண்டு ஊது புகர் முகப்
படு மழை அடுக்கத்த, மா விசும்பு ஓங்கிய,
5கடி மரத் துருத்திய, கமழ் கடாம் திகழ்தரும்
பெருங் களிற்றினத்தொடு, வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட!
வீழ்பெயற் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்,
வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ
10தாழ் செறி கடுங் காப்பின் தாய் முன்னர், நின் சாரல்
ஊழ் உறு கோடல் போல், எல் வளை உகுபவால்?
இனைஇருள் இது என ஏங்கி, நின் வரல் நசைஇ,
நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ
‘இனையள்’ என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர், நின் சுனைக்
15கனை பெயல் நீலம் போல், கண் பனி கலுழ்பவால்?
பல் நாளும் படர், அட பசலையால் உணப்பட்டாள்,
பொன் உரை மணி அன்ன, மாமைக்கண் பழி உண்டோ
இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள், நின் சோலை
மின் உகு தளிர் அன்ன, மெலிவு வந்து உரைப்பதால்?
20என ஆங்கு
பின் ஈதல் வேண்டும், நீ பிரிந்தோள் நட்பு என நீவிப்
பூங் கண் படுதலும் அஞ்சுவல்; தாங்கிய
அருந் துயர் அவலம் தூக்கின்,
மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே

வரையாது வந்தொழுகும் தலைவற்குத் தோழி, தலைவி ஆற்றாமையும் இவ் ஒழுக்கம் புறத்தார் அறியப்படுகின்றமையும், கூறி, வரைவு கடாயது

49
தோழி கூற்று

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுமென வெரீஇ,
5புதுவதாக மலர்ந்த வேங்கையை
‘அது’ என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட!
10போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே,
மின் ஓரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய்,
இன்னது ஓர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன
15அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து,
அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
இருள் உறழ் இருங் கூந்தல் இவள்மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
20ஒளிறு வேல் வலன் ஏந்தி, ‘ஒருவன் யான்’ என்னாது,
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை
அதனால்
இரவின் வாரல், ஐய! விரவு வீ
அகல் அறை வரிக்கும் சாரல்,
25பகலும் பெறுவை, இவள் தட மென் தோளே

‘நீர் இவ்வாறு வருகின்ற வரவு எமக்குத் துன்பத்திற்குக் காரணமாகாநின்றது’எனக் கூறி, இரவு வருவானைத் தோழி, ‘பகல் வருக’ என்றது

50
தோழி கூற்று

வாங்குகோல் நெல்லொடு வாங்கி, வருவைகல்,
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி,
தூங்கு இலை வாழை நளி புக்கு, ஞாங்கர்
வருடை மட மறி ஊர்வு இடைத் துஞ்சும்
5இருள் தூங்கு சோலை, இலங்கு நீர், வெற்ப!
அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த
உரவு வில்மேல் அசைத்த கையை, ஓராங்கு
நிரைவளை முன்கை என் தோழியை நோக்கி,
படி கிளி பாயும் பசுங் குரல் ஏனல்
10கடிதல் மறப்பித்தாய்ஆயின், இனி நீ
நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும்; இவளே
பல் கோட் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி
அல்கு அறைக் கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி
நல்கூர்ந்தார் செல்வ மகள்
15நீயே, வளியின் இகல் மிகும் தேரும், களிறும்
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு
அளியொடு கைதூவலை
அதனால்,
கடு மா கடவுறூஉம் கோல் போல், எனைத்தும்
20கொடுமை இலையாவது அறிந்தும், அடுப்பல்
வழை வளர் சாரல் வருடை நன் மான்
குழவி வளர்ப்பவர் போல, பாராட்டி,
உழையின் பிரியின், பிரியும்,
இழை அணி அல்குல் என் தோழியது கவினே

‘புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்’ தோழி கூறியது. அது தோழியிற் கூட்டம் நிகழ்ந்தபின், முற்காலத்துப் பணிந்து பின்னின்றோனைத் தோழி தானே பணிந்து ஒழுகுதலாம்

52
தோழி கூற்று

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செற்று,
மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்
குறங்கு அறுத்திடுவான் போல், கூர் நுதி மடுத்து, அதன்
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,
5 மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,
கல் உயர் நனஞ் சாரல், கலந்து இயலும் நாட! கேள்:
தாமரைக் கண்ணியை, தண் நறுஞ் சாந்தினை,
நேர் இதழ்க் கோதையாள் செய்குறி நீ வரின்,
‘மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம்
10அணங்கு’ என அஞ்சுவர், சிறுகுடியோரே
ஈர்ந் தண் ஆடையை, எல்லி மாலையை,
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீ வரின்,
ஒளி திகழ் ஞெகிழியர், கவணையர், வில்லர்,
'களிறு' என ஆர்ப்பவர், ஏனல் காவலரே
15ஆர மார்பினை, அண்ணலை, அளியை,
ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின்,
'கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப்
புலி' என்று ஓர்க்கும், இக் கலி கேழ் ஊரே
என ஆங்கு
20 விலங்கு ஓரார், மெய் ஓர்ப்பின், இவள் வாழாள்; இவள் அன்றி,
புலம் புகழ் ஒருவ! யானும் வாழேன்;
அதனால், பொதி அவிழ் வைகறை வந்து, நீ குறை கூறி,
வதுவை அயர்தல் வேண்டுவல், ஆங்கு,
புதுவை போலும் நின் வரவும், இவள்
25வதுவை நாண் ஒடுக்கமும், காண்குவல், யானே

இரவுக்குறி வந்த தலைவனை எதிர்ப்பட்டு, தோழி, இரவுக்குறியதுஏதமும்,ஏதத்தால் வரும் துன்பமும், தன் உள்ளத்து விழைவும், கூறி, வரைவு கடாயது

53
தோழி கூற்று

வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ் சாரல்
விறல் மலை வியல் அறை, வீழ் பிடி உழையதா,
மறம் மிகு வேழம், தன் மாறுகொள் மைந்தினான்,
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல,
5உயர் முகை நறுங் காந்தள் நாள்தோறும் புதிது ஈன,
அயம் நந்தி அணிபெற, அருவி ஆர்த்து இழிதரும்
பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப!
மறையினின் மணந்து, ஆங்கே மருவு அறத் துறந்தபின்,
இறை வளை நெகிழ்பு ஓட, ஏற்பவும் ஒல்லும்மன்
10அயல் அலர் தூற்றலின், ஆய் நலன் இழந்த, கண்;
கயல் உமிழ் நீர் போல, கண் பனி கலுழாக்கால்?
இனிய செய்து அகன்று, நீ இன்னாதாத் துறத்தலின்,
‘பனி இவள் படர்’ என பரவாமை ஒல்லும்மன்
ஊர் அலர் தூற்றலின், ஒளி ஓடி, நறு நுதல்
15பீர் அலர் அணி கொண்டு, பிறை வனப்பு இழவாக்கால்?
‘அஞ்சல்’ என்று அகன்று, நீ அருளாது துறத்தலின்,
நெஞ்சு அழி துயர் அட, நிறுப்பவும் இயையும்மன்
நனவினால் நலம் வாட, நலிதந்த நடுங்கு அஞர்
கனவினால் அழிவுற்று, கங்குலும் அரற்றாக்கால்?
20என ஆங்கு,
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி, நின் மலை
முளிவுற வருந்திய முளை முதிர் சிறு தினை
தளி பெறத் தகைபெற்றாங்கு, நின்
அளி பெற நந்தும், இவள் ஆய் நுதற் கவினே

ஒருவழித் தணந்து வந்து தலைவற்குத் தோழி, தலைவி ஆற்றாமையும் ஆற்றுவித்தலது அருமையும் சொல்லி, வரைவு கடாயது

60
தோழி கூற்று


தோழி

சுணங்கு அணி வன முலை, சுடர் கொண்ட நறு நுதல்,
மணம் கமழ் நறுங் கோதை மாரி வீழ் இருங் கூந்தல்,
நுணங்கு எழில், ஒண் தித்தி, நுழை நொசி மட மருங்குல்,
வணங்கு இறை வரி முன்கை, வரி ஆர்ந்த அல்குலாய்!
5‘கண் ஆர்ந்த நலத்தாரை, கதுமென, கண்டவர்க்கு
உள் நின்ற நோய் மிக, உயிர் எஞ்சு துயர் செய்தல்
பெண் அன்று, புனையிழாய்!’ எனக் கூறி தொழூஉம்; தொழுதே,
கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்!
என் செய்தான் கொல்லோ இஃது ஒத்தன் தன்கண்
10பொருகளிறு அன்ன தகை சாம்பி உள்உள்
உருகுவான் போலும், உடைந்து?

தலைவி

தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு, நீ,
வாரணவாசிப் பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வது; எவன்?

தோழி

15‘அலர்முலை ஆய்இழை நல்லாய்! கதுமென,
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ!
நின் முகம் காணும் மருந்தினேன்’ என்னுமால்;
20நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்!
என் செய்வாம்கொல், இனி நாம்?

தலைவி

பொன் செய்வாம்
ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன்
25கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம்,
‘தேறல், எளிது’ என்பாம் நாம்

தோழி

‘ஒருவன் சாம் ஆறு எளிது’ என்பாம், மற்று

தலைவி

சிறிது, ஆங்கே ‘மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க’ என,
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி

தோழி

30பூண் ஆகம் நோக்கி இமையான், நயந்து, நம்
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப் பெயர்த்த நயவரவு இன்றே

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளோடு உறழ்ந்து, அவனது குறை நயப்பக் கூறியது

61
தோழி கூற்று


தலைவன் வருகை கண்டு, தோழி தலைவியை நோக்கிக் கூறுதல்

எல்லா! இஃது ஒத்தன் என் பெறான்? கேட்டைக் காண்:
செல்வம் கடைகொள, சாஅய், சான்றவர்
அல்லல் களை தக்க கேளிருழைச் சென்று,
சொல்லுதல் உற்று, உரைகல்லாதவர் போல
5பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும்; மற்று யான் நோக்கின்,
மெல்ல இறைஞ்சும் தலை

தலைவன் எதிர் சென்று, அவனை நோக்கித் தோழி வினாவுதல்

எல்லா! நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய்போல் காட்டினை;
நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய்!
என், நீ பெறாதது? ஈது என்?

தலைவன்

10சொல்லின், மறாதீவாள் மன்னோ, இவள்?
செறாஅது ஈதல், இரந்தார்க்கு ஒன்று, ஆற்றாது வாழ்தலின்,
சாதலும் கூடுமாம் மற்று

தோழி

இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும், விழுப் பொருள்; யாது, நீ வேண்டியது?

தலைவன்

பேதாய்! பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை; யாழ
15மருளி மட நோக்கின் நின் தோழி என்னை
அருளீயல் வேண்டுவல், யான்

‘அன்னையோ?’ என, அறியாதாள் போன்று, தலைவனுக்குத் தோழி கூறி, அவன் நீங்கிய பின்னர், தலைவியொடு உசாவுதல்

"அன்னையோ?" மண்டு அமர் அட்ட களிறு அன்னான்தன்னை ஒரு
பெண்டிர் அருளக் கிடந்தது எவன்கொலோ?'

தோழி தலைவியை நோக்கிக் குறை நயப்பித்தல்

ஒண்தொடீ! நாண் இலன் மன்ற இவன்
ஆயின், ஏஎ!
20‘பல்லார் நக்கு எள்ளப்படு மடல்மா ஏறி,
மல்லல் ஊர் ஆங்கண் படுமே, நறும் நுதல்
நல்காள் கண்மாறிவிடின்’ எனச் செல்வானாம்
எள்ளி நகினும் வரூஉம்; இடைஇடைக்
கள்வர் போல் நோக்கினும் நோக்கும்; குறித்தது
25கொள்ளாது போகாக் குணன் உடையன், எந்தை தன்
உள்ளம் குறைபடாவாறு

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவனோடு உறழ்ந்து சொல்லி, அவனது நீக்கத்துக்கண் அவன் குறை மறாமைக்கு ஏற்பன சொல்லி, தலைமகளைக் குறை நயப்பித்தது

63
தோழி கூற்று


தோழி

நோக்குங்கால், நோக்கித் தொழூஉம், பிறர் காண்பார்
தூக்கு இலி; தூற்றும் பழி எனக் கை கவித்துப்
போக்குங்கால், போக்கு நினைந்து இருக்கும்; மற்று நாம்
காக்கும் இடம் அன்று, இனி
5எல்லா! எவன் செய்வாம்?
பூக்குழாய்! செல்லல் அவனுழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல்; என் தோள்மேல்
கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல்; ‘ஈங்கு ஆக
இருந்தாயோ?’ என்று ஆங்கு இற
10அவன் நின் திருந்துஅடிமேல் வீழ்ந்து இரக்கும், நோய் தீர்க்கும்
மருந்து நீ ஆகுதலான்

தலைவி

இன்னும், கடம் பூண்டு, ஒருகால் நீ வந்தை; உடம்பட்டாள்
என்னாமை என் மெய் தொடு

தோழி

இஃதோ? அடங்கக் கேள்:
15நின்னொடு சூழுங்கால், நீயும் நிலம் கிளையா,
என்னொடு நிற்றல் எளிது அன்றோ? மற்று அவன்
தன்னொடு நின்று விடு

தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி அவன் நிலைமை தலைமகட்குக் கூறி, அவள் உரைத்த மாற்றத்தால் அவள் குறிப்பு அறிந்து, ‘இவ் வகையான தலைவற்குக் கூறு என அவளுடன் நகையாடி, கூட்டம் உண்மை தான் அறிந்தமை தோற்றுவித்தது

65
தோழி கூற்று

திருந்திழாய்! கேளாய், நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை! அல்கல் நிகழ்ந்தது: ஒருநிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இருங் கங்குல்,
அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ், நம்
5இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக
தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே,
10பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி,
யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன்
பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்
15வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி,
‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான்
ஏனைப் பிசாசு; அருள்; என்னை நலிதரின்,
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்’
எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப
20முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது,
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,
ஒடுங்கா வயத்தின், கொடுங் கேழ், கடுங்கண்,
இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர்
25ஏதில் குறு நரி பட்டற்றால்! காதலன்
காட்சி அழுங்க, நம் ஊர்க்கு எலாஅம்
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன்
வாழ்க்கை அதுவாகக் கொண்ட முது பார்ப்பான்
வீழ்க்கைப் பெருங் கருங் கூத்து

‘இரவுக் குறி அலராம்’ என்று அஞ்சி, தலைவனை நீக்கி நிறுத்தக் கருதிய தோழி,‘அல்லகுறிப் படுதலும் அவள்வயின் உரித்தே, அவன் குறி மயங்கிய அமைவொடு வரினே’என்னும் சூத்திரத்தான், அல்லகுறிப்படுதல் தனக்கும் உரித்தாகலின், அவன் செய்த குறி அறிதற்குப் புறத்துச் சென்ற வழி, ஆண்டுப் பிறந்தது ஓர் செய்தியாக, ஒரு பொய்யை நாடக வழக்கும் உலகியல் வழக்கு்மாகப் புனைந்துரை வகையால் படைத்துக் கொண்டு, பிற்றை ஞான்று தலைவன் சிறைப் புறமாகத் தலைவிக்குக் கூறியது. இதனை, ‘இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி, நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும், வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும், நல் வகை உடைய நலத்தில் கூறியும், பல் வகையானும் படைக்கவும் பெறுமே’ எனப் பொருள் இயல் சூத்திரத்து,'பொய் தலைப்பெய்தலையும் படைக்கவும் பெறும்' என வழு அமைத்தவாற்றால் கொள்க.

70
தோழி கூற்று

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென,
கதுமென, காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீருள் கண்டு, அது என உவந்து ஓடி,
5துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணி,
பல் மலரிடைப் புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்:
நலம் நீப்பத் துறந்து எம்மை, நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
10மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே
அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண்கண், எம்
புதல்வனை மெய் தீண்ட, பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே
15வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே
என ஆங்கு
20மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலை போல்,
எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர்
இல்லின் எழீஇய யாழ் தழீஇ, கல்லா வாய்ப்
பாணன் புகுதராக்கால்!

பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் தோழியை வாயில் வேண்ட, அவள் வாயில் நேர்வாள் நெருங்கிக் கூறியது

82
தலைவி கூற்று


தலைவி

ஞாலம் வறம் தீரப் பெய்ய, குணக்கு ஏர்பு,

காலத்தில் தோன்றிய கொண்மூப் போல், எம் முலை

பாலொடு வீங்கத் தவ நெடிதாயினை;

புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு

5

புக்க வழி எல்லாம் கூறு


தோழி

கூறுவேன்; மேயாயே போல வினவி, வழிமுறைக்

காயாமை வேண்டுவல், யான்


தலைவி

காயேம்.

தோழி கூற்றும், தலைவி புதல்வனைக் கடிதலும்

10

மடக் குறு மாக்களோடு ஓரை அயரும்

அடக்கம் இல் போழ்தின்கண், தந்தை காமுற்ற

தொடக்கத்துத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மருப்புப் பூண் கையுறையாக அணிந்து,

'பெருமான், நகைமுகம் காட்டு!' என்பாள் கண்ணீர்

15

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன; மற்றும்,

வழிமுறைத் தாயுழைப் புக்காற்கு, அவளும்

மயங்கு நோய் தாங்கி, மகன் எதிர் வந்து,

முயங்கினள் முத்தினள் நோக்கி, நினைந்தே,

'நினக்கு யாம் யாரேம் ஆகுதும்?' என்று,

20

வனப்பு உறக் கொள்வன நாடி அணிந்தனள்,

ஆங்கே, 'அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும்

பெருமான் பரத்தைமை ஒவ்வாதி' என்றாள்;

அவட்கு இனிதாகி விடுத்தனன் போகித்

தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்

25

புலத் தகைப் புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு

கோல் தா; நினக்கு அவள் யார் ஆகும்? எல்லா!

வருந்தி யாம் நோய் கூர, நுந்தையை என்றும்

பருந்து எறிந்தற்றாகக் கொள்ளும்; கொண்டாங்கே,

தொடியும் உகிரும் படையாக நுந்தை

30

கடியுடை மார்பின் சிறு கண்ணும் உட்காள்,

வடுவும் குறித்தாங்கே செய்யும். விடு, இனி;

அன்ன பிறவும், பெருமான் அவள்வயின்

துன்னுதல் ஓம்பி, திறவது இல் முன்னி, நீ

ஐயம் இல்லாதவர் இல் ஒழிய, எம் போலக்

35

கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல்;

அமைந்தது, இனி நின் தொழில்


புத்தேளிர் கோட்டம் வலம் செய்வித்துக்கொண்டு வருதற்குச் சேடியருடன் மகற்போக்கிய தலைமகள்,அவன் நீட்டித்து வந்தவழி, 'தாயார் கண்ணிய நல் அணிப் புதல்வனை, மாயப் பரத்தை உன்னிய வழி'யால், தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது (17)

101
தோழி கூற்று


தோழி தலைவிக்கு ஏறு தழுவுதலைச் சுட்டிக்காட்டுதல்

தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய, முட் புறப் பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும்;
5 மணி புரை உருவின காயாவும்; பிறவும்;
அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர், இயைபுடன் ஒருங்கு
10 அவ் வழி, முழக்கு என, இடி என, முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு, வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்ப,
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறையுளி பராஅய், பாய்ந்தனர், தொழூஉ
15மேற் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண்
நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி,
கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண்
அம் சீர் அசைஇயல் கூந்தற் கை நீட்டியான்
நெஞ்சம் பிளந்து இட்டு, நேரார் நடுவண், தன்
20வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி
விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடி,
குடர் சொரியக் குத்தி, குலைப்பதன் தோற்றம் காண்
படர் அணி அந்தி, பசுங் கட் கடவுள்
25 இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டு,
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக்
கதன் அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாடி,
நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண்
30ஆர் இருள் என்னான் அருங் கங்குல் வந்து, தன்
தாளின் கடந்து அட்டு, தந்தையைக் கொன்றானைத்
தோளின் திருகுவான் போன்ம்

அது கண்டு தலைவி கொண்ட அச்சம் போக்க, தோழி நல் நிமித்தம் கண்டு கூறுதல்

என ஆங்கு
அணி மாலைக் கேள்வற் தரூஉமார், ஆயர்
35 மணி மாலை ஊதும் குழல்
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை, ஆயின்; படாஅகை
ஈன்றன, ஆய மகள் தோள்
பகலிடக் கண்ணியன், பைதற் குழலன்,
40 சுவல்மிசைக் கோல் அசைத்த கையன், அயலது;
கொல் ஏறு சாட இருந்தார்க்கு, எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம், யாம்
'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆனுள்,
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு, ஒரு நாள்,
45 கேளாளன் ஆகாமை இல்லை; அவற் கண்டு
வேளாண்மை செய்தன கண்
ஆங்கு, ஏறும் வருந்தின; ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இருங் கூந்தற் பொதுமகளிர் எல்லாரும்
முல்லைஅம் தண் பொழில் புக்கார், பொதுவரோடு,
50எல்லாம் புணர் குறிக் கொண்டு

'ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப் பெயர், ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே' என்னும் சூத்திரத்தில், 'திணை நிலைப் பெயராகிய கிழவரும் கிழத்தியரும் உளர்' என்னும் விதியால் கொண்ட அத் தலைவிக்கு அவள் தோழி ஆயர் ஏறு தழுவுகின்றமை காட்டி, அவள் அது கண்டு வருந்தாமல், ஆண்டுப் பெற்ற நல் நிமித்தம் கூறித் தெளிவித்து,அதனை அவ் விதியால் கொண்ட தலைவற்கும் கூறி, மீட்டும் அத்தலைவிக்குத் தம் சுற்றத்தார் கூறியிறுக்கும் கூற்றினையும் கூறி, 'தலைவனும் இன்னும் ஒரு ஞான்று ஏறு தழுவி நம்மை வரைந்து கொள்வன்' என்று ஆற்றுவித்தது (1)

103
தோழி கூற்று


பொதுவர் ஏறு தழுவுதல்

மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும், பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்
கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
5பல ஆன் பொதுவர், கதழ் விடை கோள் காண்மார்
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனங் குழைக் காதினர்,
நல்லவர் கொண்டார், மிடை
10அவர் மிடை கொள
மணி வரை மருங்கின் அருவி போல
அணி வரம்பு அறுத்த வெண் காற் காரியும்,
மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல்
வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும்,
15கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடு அணி சேயும்,
பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து
அரிமாவும், பரிமாவும், களிறும், கராமும்,
பெரு மலை விடரகத்து, ஒருங்கு உடன் குழீஇ,
20படு மழை ஆடும் வரையகம் போலும்
கொடி நறை சூழ்ந்த தொழூஉ
தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின, ஏறு
ஏற்றின் அரி பரிபு அறுப்பன, சுற்றி,
25எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண்
உருவ மாலை போல,
குருதிக் கோட்டொடு குடர் வலந்தன

தோழி தலைவிக்குக் காட்டல்

கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்,
ஆடி நின்று, அக் குடர் வாங்குவான், பீடு காண்
30செந் நூற் கழி ஒருவன் கைப் பற்ற, அந் நூலை
முந் நூலாக் கொள்வானும் போன்ம்
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
கோட்டினத்து ஆயர் மகன் அன்றே மீட்டு ஒரான்
போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு,
35தார் போல் தழீஇயவன்?
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்;
கோவினத்து ஆயர் மகன் அன்றே ஓவான்
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி, துறை அம்பி
ஊர்வான் போல் தோன்றுமவன்?
40தொழீஇஇ! காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை
ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு, அட்டு, அதன்
மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை
ஏற்றெருமை நெஞ்சம் வடிம்பின் இடந்து இட்டு,
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று, இன்னன்கொல்
45கூற்று என: உட்கிற்று, என் நெஞ்சு
இகுளை! இஃது ஒன்று கண்டை; இஃது ஒத்தன்:
புல்லினத்து ஆயர் மகன் அன்றே புள்ளி
வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள்
மறுப் போல் பொருந்தியவன்?
50ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
சேஎச் செவி முதற் கொண்டு, பெயர்த்து ஒற்றும்
காயாம்பூங் கண்ணிப் பொதுவன் தகை கண்டை
மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய் பகுத்து இட்டு, புடைத்த ஞான்று, இன்னன்கொல்
55மாயோன் என்று: உட்கிற்று, என் நெஞ்சு

'குரவை ஆடுவோருடன் கூடி, ஆடிப் பாடித் தெய்வம் பரவுவோம்' எனத் தோழி தலைவியை அழைத்தல்

ஆங்கு, இரும் புலித் தொழுதியும் பெருங் களிற்றினமும்
மாறுமாறு உழக்கியாங்கு உழக்கி, பொதுவரும்
ஏறு கொண்டு, ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டாங்கே
மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழ
60பயில் இதழ் மலர் உண்கண்
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்றுத்
தாது எரு மன்றத்து அயர்வர், தழூஉ
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்
65அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து
நைவாரா ஆய மகள் தோள்
வளியர் அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
70எளியவோ, ஆய மகள் தோள்?
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்
கொலை ஏற்றுக் கோட்டிடை, தாம் வீழ்வார் மார்பின்
முலையிடைப் போல, புகின்
ஆங்கு,
75குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி,
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே!

ஆயர் ஏறு தழுவி நின்றமையைத் தோழி தலைவிக்குத் தனித்தனியே காட்டி,பின்னர், அவர் ஏறு தழுவிவிட்டுக் குரவை ஆடுகின்றமையும் கூறி, 'ஆண்டு யாமும் சென்று, நின்னை ஏறு தழுவிக் கோடற்கு நிற்கின்ற தலைவன் கேட்டு, ஏறு தழுவிக் கொள்ளுமாறு, நமக்குச் சுற்றத்தார் கூறிக் கிடக்கின்ற முறைமையைப் பாட்டிலே தோன்றப் பாடி, குரவை ஆடி, ''வழுதி வாழ்க!'' என்று தெய்வம் பராவுதும்' நீயும் அங்ஙனம் பாடுதற்குப் போதுவாயாக!' எனக் கூறியது (3)

104
தோழி கூற்றும் தலைவி கூற்றும்



மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்
5தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர், ஒருங்கு தொக்கு, எல்லாரும்
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப்
பால் நிற வண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும்,
பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித்
10திரு மறு மார்பன் போல் திறல் சான்ற காரியும்,
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல்
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும்,
மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர்
வேல் வல்லான் நிறனே போல் வெரு வந்த சேயும், ஆங்கு அப்
15பொரு வரும் பண்பினவ்வையும், பிறவும்
உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போல,
புரிபு புரிபு புகுத்தனர், தொழூஉ
அவ் வழி, 'முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும், இது ஓர்
வெள் ஏற்று எருத்து அடங்குவான்
20ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில் பெறும், வை மருப்பின்
காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி
வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாட் பெறூஉம், இக்
குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான். வரிக் குழை
வேய் உறழ் மென் தோள் துயில் பெறும், வெந் துப்பின்
25சேஎய் சினன் அஞ்சான் சார்பவன்' என்று ஆங்கு
அறைவனர், நல்லாரை, ஆயர் முறையினால்,
நாள்மீன் வாய் சூழ்ந்த மதி போல், மிடைமிசைப்
பேணி நிறுத்தார் அணி
அவ் வழி, பறை எழுந்து இசைப்ப, பல்லவர் ஆர்ப்ப,
30குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த
நறை வலம் செய விடா இறுத்தன ஏறு
அவ் ஏற்றின்
மேல் நிலை மிகல் இகலின், மிடை கழிபு இழிபு, மேற்சென்று,
வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான்,
35பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை
நோனாது குத்தும் இளங் காரித் தோற்றம் காண்
பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும்
நீல் நிற வண்ணனும் போன்ம்
இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன் பலர் நீங்க,
40வரி பரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தி, தன்
கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும்
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை, இஃது ஒன்று
வெரு வரு தூமம் எடுப்ப, வெகுண்டு
திரிதரும் கொல் களிறும் போன்ம்
45தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச் சென்று,
தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,
கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,
மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள்
வாள் அகப்பட்டானை, 'ஒவ்வான்' எனப் பெயரும்
50மீளி மறவனும் போன்ம்
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சார,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப,
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப
55பாடு ஏற்றுக் கொள்பவர், பாய்ந்து மேல் ஊர்பவர்,
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ
60தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புக, தண்டாச் சீர்,
வாங்கு எழில், நல்லாரும் மைந்தரும், மல்லல் ஊர்
ஆங்கண் அயர்வர், தழூஉ

தலைவியையும் ஆயத்தையும் தன்னுடன் பாடத் தோழி அழைத்தல்

பாடுகம், வம்மின் பொதுவன் கொலை ஏற்றுக்
கோடு குறி செய்த மார்பு

தலைவி

65நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில்,
செற்றார் கண் சாய, யான் சாராது அமைகல்லேன்;
பெற்றத்தார் கவ்வை எடுப்ப, அது பெரிது
உற்றீயாள், ஆயர் மகள்
தொழீஇஇ! ஒருக்கு நாம் ஆடும் குரவையுள், நம்மை
70அருக்கினான் போல் நோக்கி, அல்லல் நோய் செய்தல்,
'குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன், யான்' என்னும்
தருக்கு அன்றோ ஆயர் மகன்?

தோழி

நேரிழாய்! கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்
காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே,
75ஆர்வுற்று, எமர், கொடை நேர்ந்தார் அலர் எடுத்த
ஊராரை உச்சி மிதித்து
ஆங்கு,
தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
80ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்! எனவே

'நாடக வழக்கினும்' என்னும் சூத்திரத்து, 'பாடலுள் அமையாத' என்றதனால்,ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்கு காட்டிக் கூறி, 'இக் குரவையுள் அவனைப் பாடுகம் வா' என்றாட்கு, அவள் உடம்பாட்டினுள், தான் அலர் அச்சம் நீங்கினமையும், அவவன் தன்னை வருத்தினமையும், கூறிப் பாடிப், பின்னர், தோழி, 'நமர் அவற்கு நின்னைக் கொடை நேர்ந்தார்' எனக் கூறியது (4)

105
தோழி கூற்றும் தலைவி கூற்றும்


ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறுதல்

அரைசு படக் கடந்து அட்டு, ஆற்றின் தந்த
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப்
பார் வளர், முத்தமொடு படு கடல் பயந்த
5ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி,
'தீது இன்று பொலிக!' எனத் தெய்வக் கடி அயர்மார்,
வீவு இல் குடிப் பின் இருங் குடி ஆயரும்,
தா இல் உள்ளமொடு துவன்றி, ஆய்பு உடன்,
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத்
10தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும்,
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப்
பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும்,
பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல
இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,
15அணங்குடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும்
கணம் கொள் பல் பொறிக் கடுஞ் சினப் புகரும்,
வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப
வாலிது கிளர்ந்த வெண் காற் சேயும்,
கால முன்பின் பிறவும், சால
20மடங்கலும், கணிச்சியும், காலனும், கூற்றும்,
தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய,
உடங்கு கொட்பன போல் புகுத்தனர், தொழூஉ
அவ்வழி,
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க,
25ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க,
நேர் இதழ் நிரைநிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்ப,
சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின், சினப் பொதுவர்
தூர்பு எழு துதை புதை துகள் விசும்பு உற எய்த,
ஆர்பு, உடன் பாய்ந்தார், அகத்து
30மருப்பில் கொண்டும், மார்பு உறத் தழீஇயும்,
எருத்திடை அடங்கியும், இமில் இறப் புல்லியும்,
தோள் இடைப் புகுதந்தும், துதைந்து பாடு ஏற்றும்,
நிரைபு மேல் சென்றாரை நீள் மருப்பு உறச் சாடி,
கொள இடம் கொள விடா நிறுத்தன, ஏறு
35கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டுவாய்ச் சாக் குத்தி,
கொள்வார்ப் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா
செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,
உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
பாடு ஏற்றவரைப் படக் குத்தி, செங் காரிக்
40கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா
நகை சால் அவிழ் பதம் நோக்கி, நறவின்
முகை சூழும் தும்பியும் போன்ம்!
இடைப் பாய்ந்து எருத்தத்துக் கொண்டானோடு எய்தி,
மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா
45வாள் பொரு வானத்து, அரவின் வாய்க் கோட்பட்டுப்
போதரும் பால் மதியும் போன்ம்!
ஆங்க, ஏறும் பொதுவரும் மாறுற்று, மாறா
இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற
பொரு களம் போலும், தொழூஉ

தோழி தன் நெஞ்சோடு தலைவி விரும்பக் கூறியது

50வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல், துதை புதை துளங்கு இமில்
நல் ஏறு கொண்ட, பொதுவன் முகன் நோக்கி,
பாடு இல, ஆய மகள் கண்

தலைவியை நோக்கித் தோழி கூறுதல்

நறுநுதால்! என்கொல் ஐங் கூந்தல் உளர,
சிறு முல்லை நாறியதற்குக் குறு மறுகி,
55ஒல்லாது உடன்று, எமர் செய்தார், அவன் கொண்ட
கொல் ஏறு போலும் கதம்?
நெட்டிருங் கூந்தலாய்! கண்டை இஃது, ஓர் சொல்:
கோட்டினத்து ஆயர் மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர்; பொறாதார்
60தம் கண் பொடிவது எவன்?

தலைவி

ஒண்ணுதால்!
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக்
கண்ணுடைக் கோலள் அலைத்ததற்கு, என்னை
மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி,
65அலர் செய்து விட்டது இவ் ஊர்?
ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்ளிழாய்!
இன்று எவன், என்னை எமர் கொடுப்பது அன்று, அவன்
மிக்குத் தன்மேல் சென்ற செங் காரிக் கோட்டிடைப்
புக்கக்கால் புக்கது, என் நெஞ்சு?

தோழி

70என,
பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய
ஆடு கொள் நேமியாற் பரவுதும் 'நாடு கொண்டு,
இன் இசை முரசின் பொருப்பன், மன்னி
அமை வரல் அருவி ஆர்க்கும்
75இமையத்து உம்பரும் விளங்குக!' எனவே

ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறி, அவள் ஏறு தழுவிய தலைவனை விருப்பொடு நோக்கியவாற்றைத் தன்னுள்ளே கூறி, முன்னர்க் களவின்கண் தமர் கோபித்ததனையும் அயலார் பொறாதிருந்த தன்மையினையும் தலைவிக்குக் கூற, அவளும், 'அவர் அலர் கூறியது நன்று' என்று கூறி,'அன்றே என் நெஞ்சு கலந்து விட்டது; இனி அவர் கொடுப்பதாகக் கூறிய நாளில் செய்வது என்?' என மகிழ்ந்துகூற, அது கேட்ட தோழி, 'யாம் அங்ஙனம் கூடி இனிது இருக்குமாறு காக்கின்ற பாண்டியன் நீடு வாழுமாறு தெய்வத்தைப் பரவுகம் வா' எனக் கூறியது (5)

107
தோழி கூற்று


தலைவி

எல்லா! இஃது ஒன்று கூறு குறும்பு இவர்
புல்லினத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், 'எம்
கொல் ஏறு கோடல் குறை' என, கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ
5தொழுவத்து,
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லைக்
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்
10அதனை, கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது
கேட்டனள், என்பவோ, யாய்?

தோழி

கேட்டால், எவன் செய்ய வேண்டுமோ? மற்று, இகா!
அவன் கண்ணி அன்றோ, அது?

தலைவி

'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான்
15கை புனை கண்ணி முடித்தாள், என்று, யாய் கேட்பின்,
செய்வது இலாகுமோ மற்று?

தோழி

எல்லாத் தவறும் அறும்

தலைவி

ஓஒ! அஃது அறுமாறு?

தோழி தவறு அன்றாமாறு கூறலும் தலைவி பதிலும்

'ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின்,
20நின் வெய்யன்ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
அன்னை நோதக்கதோ இல்லைமன்' 'நின் நெஞ்சம்,
அன்னை நெஞ்சு, ஆகப் பெறின்'

தோழி

அன்னையோ?
ஆயர் மகனையும் காதலை, கைம்மிக
25ஞாயையும் அஞ்சுதிஆயின், அரிதுஅரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து

தலைவி

மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா!
வருந்துவேன் அல்லனோ, யான்?

தோழி

வருந்தாதி
30மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏற அவன்
கண்ணி தந்திட்டது எனக் கேட்டு, 'திண்ணிதா,
தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு

தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்ப, தமர் வரைவு உடன்பட்டமை அவட்கு அவள் சொல்லியது

115
தலைவி கூற்றும் தோழி கூற்றும்

'தோழி! நாம், காணாமை உண்ட கடுங் கள்ளை, மெய் கூர,
நாணாது சென்று நடுங்க உரைத்தாங்கு,
கரந்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய் நம்
புல்லினத்து ஆயர் மகன் சூடி வந்தது ஓர்
5முல்லை ஒரு காழும் கண்ணியும், மெல்லியால்!
கூந்தலுள் பெய்து முடித்தேன்மன்; தோழி! யாய்
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே,
அன்னையும் அத்தனும் இல்லரா, யாய் நாண,
அன்னை முன் வீழ்ந்தன்று, அப் பூ
10அதனை வினவலும் செய்யாள், சினவலும் செய்யாள்,
நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு,
நீங்கிப் புறங்கடைப் போயினாள்; யானும், என்
சாந்து உளர் கூழை முடியா, நிலம் தாழ்ந்த
பூங் கரை நீலம் தழீஇ, தளர்பு ஒல்கி,
15பாங்கு அருங் கானத்து ஒளித்தேன்.' 'அதற்கு, எல்லா!
ஈங்கு எவன் அஞ்சுவது?
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய்ஆயின், நமரும்
அவன்கண் அடைசூழ்ந்தார், நின்னை; அகன் கண்
வரைப்பில் மணல் தாழப் பெய்து, திரைப்பில்
20வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவேயாம்,
அல்கலும் சூழ்ந்த வினை.'

தலைவி, 'களவு வெளிப்பட்டது' என்று அஞ்சி, தோழிக்குச் சொல்ல, 'நமர் நின்னை அவற்கே கொடுக்கச் சூழ்ந்தார்' எனச் சொல்லி, அச்சம் நீக்கியது

121
தோழி கூற்று

ஒண் சுடர் கல் சேர, உலகு ஊரும் தகையது,
தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம்,
தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தர,
புள்ளினம் இரை மாந்திப் புகல் சேர, ஒலி ஆன்று,
5வள் இதழ் கூம்பிய மணி மருள் இருங் கழி
பள்ளி புக்கது போலும் பரப்பு நீர்த் தண் சேர்ப்ப!
தாங்கருங் காமத்தைத் தணந்து நீ புறம் மாற,
தூங்கு நீர் இமிழ் திரை துணையாகி ஒலிக்குமே
உறையொடு வைகிய போது போல், ஒய்யென
10நிறை ஆனாது இழிதரூஉம், நீர் நீந்து கண்ணாட்கு
வாராய் நீ புறம் மாற, வருந்திய மேனியாட்கு
ஆர் இருள் துணையாகி அசைவளி அலைக்குமே
கமழ் தண் தாது உதிர்ந்து உக, ஊழ் உற்ற கோடல் வீ
இதழ் சோரும் குலை போல, இறை நீவு வளையாட்கு
15இன் துணை நீ நீப்ப, இரவினுள் துணையாகி,
தன் துணைப் பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான், ஒளி சாம்பும்
நண்பகல் மதியம் போல், நலம் சாய்ந்த அணியாட்கு
என ஆங்கு
20எறி திரை தந்திட, இழிந்த மீன் இன் துறை
மறி திரை வருந்தாமல் கொண்டாங்கு, நெறி தாழ்ந்து,
சாயினள் வருந்தியாள் இடும்பை
பாய் பரிக் கடுந் திண் தேர் களையினோ இடனே

தலைவன் ஒருவழித் தணந்த இடத்துத் தலைவி ஆற்றாமை கூறி, வரையக் கருதினாய் ஆயின், 'இஃது இடம்' எனச் சொல்லியது

124
தோழி கூற்று

ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப்
பால் அன்ன மேனியான் அணி பெறத் தைஇய
நீல நீர் உடை போல, தகை பெற்ற வெண் திரை
வால் எக்கர்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!
5ஊர் அலர் எடுத்து அரற்ற, உள்ளாய், நீ துறத்தலின்,
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு, ஆங்கே,
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால்
இணைபு இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
10புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
துணையாருள் தகை பெற்ற தொல் நலம் இழந்து, இனி,
அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால்
இன்று இவ் ஊர் அலர் தூற்ற, எய்யாய், நீ துறத்தலின்,
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்மன்
15வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து, இனி,
நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெருங் கண் அல்லாக்கால்
அதனால்,
பிரிவு இல்லாய் போல, நீ தெய்வத்தின் தெளித்தக்கால்,
அரிது என்னாள், துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர,
20புரி உளைக் கலிமான் தேர் கடவுபு
விரி தண் தார் வியல் மார்ப! விரைக நின் செலவே

'வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று, ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே' என்பதனால்,களவு வெளிப்பட்ட பின், வரையாது, பொருள்வயின் பிரிந்து வந்தானைத் தோழி எதிர்ப்பட்டு நின்று,தலைவியது ஆற்றாமை கூறி, வரைவு கடாயது

125
தோழி கூற்று

'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,
தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,'
5வண் பரி நவின்ற வய மான் செல்வ!
நன்கு அதை அறியினும், நயன் இல்லா நாட்டத்தால்,
'அன்பு இலை' என வந்து கழறுவல்; ஐய! கேள்:
மகிழ் செய் தேமொழித் தொய்யில் சூழ் இள முலை
முகிழ் செய முள்கிய தொடர்பு, அவள் உண்கண்
10அவிழ் பனி உறைப்பவும், நல்காது விடுவாய்!
இமிழ் திரைக் கொண்க! கொடியைகாண் நீ
இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ,
நலம் செல நல்கிய தொடர்பு, அவள் சாஅய்ப்
புலந்து அழ, புல்லாது விடுவாய்!
15இலங்கு நீர்ச் சேர்ப்ப! கொடியைகாண் நீ
இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால்
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்
நுண் வரி வாட, வாராது விடுவாய்!
தண்ணந் துறைவ! தகாஅய்காண் நீ
20என ஆங்கு
அனையள் என்று, அளிமதி, பெரும! நின் இன்று
இறை வரை நில்லா வளையள் இவட்கு, இனிப்
பிறை ஏர் சுடர் நுதற் பசலை
மறையச் செல்லும், நீ மணந்தனை விடினே

வரைவு நீட, ஆற்றாத தலைவி நிலைமை தலைவற்குத் தோழி கூறி, அவனை நெருங்கி,வரைவு கடாயது

126
தோழி கூற்று

பொன் மலை சுடர் சேர, புலம்பிய இடன் நோக்கி,
தன் மலைந்து உலகு ஏத்த, தகை மதி ஏர்தர,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்,
5எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!
அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால், நின் திண் தேர்
மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானற்
புள் என உணர்ந்து, பின் புலம்பு கொண்டு, இனையுமே
10நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால், நின் மார்பில்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
அலர் பதத்து அசைவளி வந்து ஒல்க, கழி பூத்த
மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு, இனையுமே
நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக்கால்,
15தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்; மதித்தாங்கே,
நனவு எனப் புல்லுங்கால், காணாளாய், கண்டது
கனவு என உணர்ந்து, பின் கையற்று, கலங்குமே
என ஆங்கு,
பல நினைந்து, இனையும் பைதல் நெஞ்சின்,
20அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்க,
புது நலம் ஏர்தர, பூண்க, நின் தேரே!

தோழி தலைவியது ஆற்றாமை கூறி, தலைவனை வரைவு கடாயது

127
தோழி கூற்று

தெரி இணர் ஞாழலும், தேம் கமழ் புன்னையும்,
புரி அவிழ் பூவின கைதையும், செருந்தியும்,
வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப, இருந் தும்பி இயைபு ஊத
செரு மிகு நேமியான் தார் போல, பெருங் கடல்
5வரி மணல்வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப!
கொடுங் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை?
10குறி இன்றிப் பல் நாள், நின் கடுந் திண் தேர் வரு பதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிதாக,
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை?
காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,
15யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ
வேய் நலம் இழந்த தோள் விளங்குஇழை பொறை ஆற்றாள்,
வாள் நுதல் பசப்பு ஊர, இவளை நீ துறந்ததை?
அதனால்,
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர,
20'உரவுக் கதிர் தெறும்' என ஓங்கு திரை விரைபு, தன்
கரை அமல் அடும்பு அளித்தாஅங்கு
உரவு நீர்ச் சேர்ப்ப! அருளினை அளிமே

இதுவும் அது

129
தோழி கூற்று

தொல் ஊழி தடுமாறி, தொகல் வேண்டும் பருவத்தால்,
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்,
எல் உறு தெறு கதிர் மடங்கி, தன் கதிர் மாய;
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின்,
5அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா
மெல்லியான் பருவம் போல், மயங்கு இருள் தலை வர;
எல்லைக்கு வரம்பு ஆய, இடும்பை கூர், மருள் மாலை
பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர்ப் பனிக் கடல்!
'தூ அறத் துறந்தனன் துறைவன்' என்று, அவன் திறம்
10நோய் தெற உழப்பார்கண் இமிழ்தியோ? எம் போலக்
காதல் செய்து அகன்றாரை உடையையோ? நீ
மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில்!
'நன்று அறை கொன்றனர், அவர்' எனக் கலங்கிய
என் துயர் அறிந்தனை நரறியோ? எம் போல
15இன் துணைப் பிரிந்தாரை உடையையோ? நீ
பனி இருள் சூழ்தர பைதல் அம் சிறு குழல்!
'இனி வரின், உயரும்மன் பழி' எனக் கலங்கிய
தனியவர் இடும்பை கண்டு இனைதியோ? எம் போல
இனிய செய்து அகன்றாரை உடையையோ? நீ
20என ஆங்கு,
அழிந்து, அயல் அறிந்த எவ்வம் மேற்பட,
பெரும் பேதுறுதல் களைமதி, பெரும!
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்
மருந்து அறைகோடலின் கொடிதே, யாழ நின்
25அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே

தன்னுள் கையாறு எய்திடு கிளவி'யால் தலைவி ஆற்றாளாயினவாறு, தோழி தலைவற்குக் கூறியது

131
தோழி கூற்று


தோழி

பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து, என்
திருந்திழை மென் தோள் மணந்தவன் செய்த
அருந் துயர் நீக்குவேன் போல்மன் பொருந்துபு
பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண்,
5நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும், சாயலாய்! தாக்கி
இன மீன் இகல் மாற வென்ற சின மீன்
எறி சுறா வான் மருப்புக் கோத்து, நெறி செய்த
நெய்தல் நெடு நார்ப் பிணித்து யாத்து, கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப,
10தாழாது உறைக்கும் தட மலர்த் தண் தாழை
வீழ் ஊசல் தூங்கப் பெறின்
மாழை மட மான் பிணை இயல் வென்றாய்! நின் ஊசல்
கடைஇ யான் இகுப்ப, நீடு ஊங்காய், தட மென் தோள்
நீத்தான் திறங்கள் பகர்ந்து
15நாணினகொல், தோழி? நாணினகொல், தோழி?
இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்,
ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம்
கானல், கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப, தோழி! என்
20மேனி சிதைத்தான் துறை
மாரி வீழ் இருங் கூந்தல், மதைஇய நோக்கு எழில் உண்கண்,
தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய்!
தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும்
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை
25பார்த்து உற்றன, தோழி! பார்த்து உற்றன, தோழி!
இரவு எலாம், நல் தோழி! பார்த்து உற்றன என்பவை
'தன் துணை இல்லாள் வருந்தினாள்கொல்?' என,
இன் துணை அன்றில் இரவின் அகவாவே
அன்று, தான் ஈர்த்த கரும்பு அணி வாட, என்
30மென் தோள் ஞெகிழ்த்தான் துறை

தலைவி

கரை கவர் கொடுங் கழி, கண் கவர் புள்ளினம்
திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை,
இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும்
அசை வரல் ஊசல் சீர் அழித்து, ஒன்று பாடித்தை
35அருளினகொல், தோழி? அருளினகொல், தோழி?
இரவு எலாம், தோழி! அருளின என்பவை
கணம் கொள் இடு மணல் காவி வருந்த,
பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும்
மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே
40வணங்கி உணர்ப்பான் துறை

தோழி

என, நாம்
பாட, மறை நின்று கேட்டனன், நீடிய
வால் நீர்க் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை
யான் என உணர்ந்து, நீ நனி மருள,
45தேன் இமிர் புன்னை பொருந்தி,
தான் ஊக்கினன், அவ் ஊசலை வந்தே

வரைவு நீட ஆற்றாளாய தலைவியைத் தோழி அவன் முன் அருமை செய்து அயர்த்த காலத்து,அவன் வரவினை யான் அறிந்து, ஊசல் ஆட நின்னைக் கொண்டு போய் ஆடுகின்ற காலத்து, யான் இயற்பழிக்க,நீ இயற்பட மொழிவது கேட்டு, வந்து, ஊசலை ஊக்கியவன் இக் காலத்து வருந்த விடாது, வருத்தம் அறிந்து, வரைந்து கொள்வன் என ஆற்றுவித்தது (14)

132
தோழி கூற்று

உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர்மேல்,
விரவுப் பல் உருவின வீழ் பெடை துணையாக,
இரை தேர்ந்து உண்டு, அசாவிடூஉம் புள்ளினம் இறை கொள
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப,
5நிரை களிறு இடை பட, நெறி யாத்த இருக்கை போல்
சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி, வினை வாய்த்து,
துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப!
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால்,
'நன்னுதால்! அஞ்சல் ஓம்பு' என்றதன் பயன் அன்றோ
10பாயின பசலையால், பகல் கொண்ட சுடர் போன்றாள்
மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை?
பல் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால்,
'சின்மொழி! தெளி' எனத் தேற்றிய சிறப்பு அன்றோ
வாடுபு வனப்பு ஓடி வயக்கு உறா மணி போன்றாள்
15நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை?
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ. 'மணந்தக்கால்,
கொடுங் குழாய்! தெளி' எனக் கொண்டதன் கொளை அன்றோ
பொறை ஆற்றா நுசுப்பினால், பூ வீந்த கொடி போன்றாள்
மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை?
20என ஆங்கு
வழிபட்ட தெய்வம்தான் வலி எனச் சார்ந்தார்கண்
கழியும் நோய் கைம்மிக அணங்குஆகியது போல,
பழி பரந்து அலர் தூற்ற, என் தோழி
அழி படர் அலைப்ப, அகறலோ கொடிதே

வரைவு நீட்டித்துழிப் பகற்குறி வந்து நீங்கும் தலைவனை எதிர்ப்பட்டு, தோழிஅவனை நாணு நெஞ்சு அலைப்ப, வரைவு கடாயது

133
தோழி கூற்று

மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன்
கானல் அணிந்த உயர் மணல் எக்கர்மேல்,
சீர் மிகு சிறப்பினோன் மரமுதல் கை சேர்த்த
நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப்
5பூ மலர்ந்தவை போல, புள் அல்கும் துறைவ! கேள்:
'ஆற்றுதல்' என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;
'போற்றுதல்' என்பது புணர்ந்தாரைப் பிரியாமை;
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்;
'அன்பு' எனப்படுவது தன் கிளை செறாஅமை;
10'அறிவு' எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்;
'செறிவு' எனப்படுவது கூறியது மறாஅமை;
'நிறை' எனப்படுவது மறை பிறர் அறியாமை;
'முறை' எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்;
'பொறை' எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;
15ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின், என் தோழி
நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க!
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல்;
நின்தலை வருந்தியாள் துயரம்
சென்றனை களைமோ; பூண்க, நின் தேரே!

'வரைவு உடம்பட்டோர்க் கடாவல் வேண்டினும்' என்பதனால், தலைவன் தெருளாதவனைத் தெருட்டி, வரைவு கடாயது

135
தோழி கூற்று

துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி
இணை திரள் மருப்பாக, எறி வளி பாகனா
அயில் திணி நெடுங் கதவு அமைத்து, அடைத்து, அணி கொண்ட
எயில் இடு களிறே போல் இடு மணல் நெடுங் கோட்டைப்
5பயில்திரை, நடு நன்னாள், பாய்ந்து உறூஉம் துறைவ! கேள்:
கடி மலர்ப் புன்னைக் கீழ்க் காரிகை தோற்றாளைத்
தொடி நெகிழ்ந்த தோளளாத் துறப்பாயால்; மற்று நின்
குடிமைக்கண் பெரியது ஓர் குற்றமாய்க் கிடவாதோ?
ஆய் மலர்ப் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை
10நோய் மலி நிலையளாத் துறப்பாயால்; மற்று நின்
வாய்மைக்கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ?
திகழ் மலர்ப் புன்னைக் கீழ்த் திரு நலம் தோற்றாளை
இகழ் மலர்க் கண்ணளாத் துறப்பாயால்; மற்று நின்
புகழ்மைக்கண் பெரியது ஓர் புகராகிக் கிடவாதோ?
15என ஆங்கு,
சொல்லக் கேட்டனை ஆயின், வல்லே,
அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து,
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர
உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு
20இயங்கு ஒலி நெடுந் திண் தேர் கடவுமதி, விரைந்தே

வரையாது வந்து ஒழுகும் தலைவனைத் தோழி நெருங்கி வரைவு கடாயது.

136
தோழி கூற்று

இவர், திமில், எறிதிரை ஈண்டி வந்து அலைத்தக்கால்,
உவறு நீர் உயர் எக்கர், அலவன் ஆடு அளை வரி,
தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்ப,
கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு பூங் கடற் சேர்ப்ப!
5முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால், முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல, நந்தியாள்
அத் திறத்து நீ நீங்க, அணி வாடி, அவ் ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல், வெய் துயர் உழப்பவோ?
முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால், வித்தாயம்
10இடைத் தங்கக் கண்டவன் மனம் போல, நந்தியாள்
கொடைத் தக்காய்! நீ ஆயின், நெறி அல்லாக் கதி ஓடி
உடைப் பொதி இழந்தான் போல், உறு துயர் உழப்பவோ?
நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால்,
மறுவித்தம் இட்டவன் மனம் போல, நந்தியாள்
15அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு, அப் பொருள்
சிறுவித்தம் இட்டான் போல், செறிதுயர் உழப்பவோ?
ஆங்கு
கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய்,
தீண்டற்கு அருளி, திறன் அறிந்து, எழீஇப்
20பாண்டியம் செய்வான் பொருளினும்
ஈண்டுக, இவள் நலம்! ஏறுக, தேரே!

வரைவிடை வைத்துப் பிரியக் கருதிய தலைவனைத் தோழி ஆற்றாமை கூறி,செலவு விலக்கி, வரைவு கடாயது

149
தோழி கூற்று

நிரை திமில் களிறாக, திரை ஒலி பறையாக,
கரை சேர் புள்ளினத்து அம் சிறை படையாக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்:
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
5தப்பித்தான் பொருளேபோல், தமியவே தேயுமால்,
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான்; மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அஃது எறியாது விடாதே காண்
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல், தமியவே தேயுமால்,
10சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின்; மற்று அவன்
வாள் வாய் நன்று ஆயினும், அஃது எறியாது விடாதே காண்
ஆங்கு
அனைத்து, இனி பெரும! அதன் நிலை; நினைத்துக் காண்:
சினைஇய வேந்தன் எயிற்புறத்து இறுத்த
15வினை வரு பருவரல் போல,
துணை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே

வரைவு நீட்டித்துழித் தலைவியது ஆற்றாமை கூறி, தலைவனை வரைவு கடாயது.

150
தோழி கூற்று

அயம் திகழ் நறுங் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல, எவ்வாயும்,
கனை கதிர் தெறுதலின், கடுத்து எழுந்த காம்புத் தீ
மலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
5மயங்கு அதர் மறுகலின், மலை தலைக் கொண்டென,
விசும்பு உற நிவந்து அழலும், விலங்கு அரு, வெஞ் சுரம்
இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்,
அறம் துறந்து ஆயிழாய்! ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம்
10பசந்து, நீ இனையையாய், நீத்தலும் நீப்பவோ?
கரி காய்ந்த கவலைத்தாய், கல் காய்ந்த காட்டகம்,
'வெரு வந்த ஆறு' என்னார், விழுப் பொருட்கு அகன்றவர்,
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கன்ன, நின்
உரு இழந்து இனையையாய், உள்ளலும் உள்ளுபவோ?
15கொதித்து உராய்க் குன்று இவர்ந்து, கொடிக் கொண்ட கோடையால்,
'ஒதுக்கு அரிய நெறி' என்னார், ஒண் பொருட்கு அகன்றவர்,
புதுத் திங்கட் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன, நின்
கதுப்பு உலறும் கவினையாய், காண்டலும் காண்பவோ?
ஆங்கு
20அரும் பெறல் ஆதிரையான் அணி பெற மலர்ந்த
பெருந் தண் சண்பகம் போல, ஒருங்கு அவர்
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே!

பொருள்வயிற் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாத தலைவியைத் தோழி ஆற்றுவித்தது.