12. செறுக்கும் - அடைக்கும்; ‘‘செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார்” (நாலடி. 222) மு. ‘இப்பாட்டினை வஞ்சித்திணைக்குரிய எரிபரந்தெடுத்தலென்னுந் துறைக்கு உதாரணமாகக் காட்டினர்; தொல். புறத். சூ. 8, ந. (7) 8 | வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக் | | 5 | கடந்தடு தானைச் சேர லாதனை யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி மாறி வருதி மலைமறைந் தொளித்தி அகலிரு விசும்பி னானும் | | 10 | பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே.
|
திணை - பாடாண்டிணை; துறை - இயன்மொழி; பூவைநிலையுமாம். சேரன்மான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. (இ - ள்.) உலகத்தைக் காக்கும் அரசர் வழிபாடு சொல்லிநடக்க நுகரும் இன்பத்தை விரும்பிப் பூமி பிறவேந்தருக்கும் பொதுவென்னும் வார்த்தைக்குப் பொறாது தன் நாடு இடஞ்சிறிதென்னும் மேற்கோள் செலுத்த மடியாத, உள்ளத்தையும் பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும் வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையையுமுடைய சேரலாதனை எவ்வாறொப்பை? மிக்க செலவையுடைய மண்டிலமே! நீ பகற்பொழுதை நினக்கெனக் கூறுபடுப்பை; திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போதி; தெற்கும் வடக்குமாகிய இடங்களில் மாறிமாறி வருவை; மலையின்கண்ணே வெளிப்படாது கரப்பை; அகன்ற பெரிய ஆகாயத்தின்கண்ணும் பகற்பொழுது விளங்குவை, பல கிரணங்களையும் பரப்பி - எ - று. மாறிவருதி (8) என்பதற்கு இராசிதோறும் மாறிவருதி யெனினுமமையும். வீங்குசெலன்மண்டிலமே! வரைதி; இறத்தி; வருதி; ஒளித்தி; நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறைபாடெல்லாமுடைய நீ சேரலாதனை யாங்கன மொத்தியோவெனக் கூட்டி வினைமுடிவுசெய்க.
|