| கரிய கவர்த்த வழியின் கண்ணே;நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் - நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அது - அங்ஙனம் வருவது; முன்னம் முகத்தின் உணர்ந்து - அவர் மனக்குறிப்பை அவர் முகத்தானறிந்து;அவர் இன்மை தீர்த்தல் வன்மையான் அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான்; எ-று.
நுதலையும் திறலையும் கடாத்தையும் மருங்கையும் பெருங்கையையு முடைய யானைப் பிடர்த்தலையிருந்து, எயிறு படையாக எயிற்கதவிடாக் கூற்றத் தருந்தொழில் சாயாப் பெரும்பெயர் வழுதியென மாறிக்கூட்டுக. காலாலடுதல் கையாலூக்குத லன்றி எயிறு படையாக எயிற்கதவு இடக்கை விடாத பெருங்கை யானையென இயைத் துரைப்பினும்மையும்: எயிற்கதவிடாஅக் கயிறு பிணிக்கொண்ட வென இயைத்துரைப்பாரு முளர். ஊரில்ல, உயவரிய, நீரில்ல, நீளிடையவாகிய உன்னமரத்த கவலை யெனவும், பருந்திருந் துயவும் துன்னருங் கவலை யெனவும் இயையும். மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர், அஃது அவர் இன்மை தீர்த்தல் வன்மையான்; அதனால் நின் சொற்பெயரா தொழில் வேண்டும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. வாழ்த்தியதலாதல் விளங்க, வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்டது.
விளக்கம் : உவாமதி - முழுத்திங்கள். வெண்கொற்றக் குடைக்கு முழுமதி உவமம். நிலவுக் கடல், நிலைபெற்ற கடல்: மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது, விலங்குவளி கடவுந் துளங்கிடுங் கமஞ்சூல் (பதிற். 15) என்று சான்றோர் கூறுதலால் கடற்கு நிலை பேறுண்மையறிக இமிழ்குரன் முரச மூன்று (புறம்.58) என்றவற்றுள்,வீர முரசமாகிய காவன் முரசினை ஈண்ட ஏமமுரச மென்றார். நேஎ - ஈரம்; நேயம், நேச மென்பன இதனடியாகப் பிறந்தன. சேயிழையணிந்த கோப்பெருந்தேவியைச் சேயிழை யென்றார். அருந்தொழில் சாயா என்புழி நான்கனுருபு விரித்துரைக்கப்பட்டது. யானையின் மதம் ஏழிலைப்பாலையின் மணம் கமழும் என்பவாகலின், கமழ்கடாஅத்து என்றார். கருங்கை யென்றவிடத்துக் கருமை, வலிமை குறித்து நின்றது, கருங்கை வினைஞர் (பெரும்.223) என்றாற் போல. இடக்கை-இடத்தல். இடாஅ-இடந்து. கட்புருவத்தின்மேற் கையைக் கவித்துத் தொலைவிற் குறித்த பொருளை நோக்கும் செயல்வகையைக் கவிகண் நோக்கு என்பர். மருந்தில் கூற்றம் என்றும் அருந்தொழில் என்றும் விதந்தோதியது சாதலின் கொடுமை யுணர்த்தி நிற்ப, அதற்குச் சாயாவழுதி யென்றது, வழுதியது சாதலஞ்சாத் தறுகண்மை விளக்கி நின்றது. பெயரல் என்பது அல்லீற் றெதிர்மறை வியங்கோ ளாயினும் வேண்டும் என ஒருசொல் பெய்துரைக்கப்பட்டது; உரைகாரர் வாழ்த்தியலாதல் விளங்க வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்ட தென்றார்.நிலந்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்தசொல் நீ பொய்ப்பறி யலையே (பதிற்.63) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, அரசரது ஆணை, வழியொழுகப்படாது பிறழுமாயின், அரசியல் அறம் பொருளின்பங்கள் நிலவுதற் கரணாகா தொழியு மாதலால், சொல்லென்பதற்கு ஆணையாகிய சொல் லெனப் பொருள் கூறுகின்றார். பாட்டுக கிடந்தபடியே பொருள்கொள்ளாது, எயிறு படையாக வெயிற்கத |