| உயர்ச்சி குறித்து நிற்பதாயிற்று. கருங்கை யென்ற விடத்துக் கருமை வன்மை குறித்து நின்றது. பகைவர் தன்னூர்க் கடிமிளைக்குட் புகுந்து கடி பரம் தடியு மோசை தன் கோயிலிற் கேட்கவும், போர்க்கெழாது கோயிற்கண்ணே இனிதிருப்ப தென்பது மானமுடைய வேந்தரெவர்க்கும் இயலாத செயலாயிருப்ப, இனிதிருந்தானென்றமையின் மான மின்றி யினி திருந்த என வுரை கூறினார். இனிதிருந்த என்புழி இனிமை இன்னாமை யுணர்த்தி நிற்றலின், இதனைக் குறிப்புமொழி யென்றார். இள மகளிர் தெற்றி யாடும் அத்துணையண்மையில் போர் வந்த வழியும், அதனை ஏறட்டுப் பொருதற்கு நினையாத அவ் வேந்தனது இழிநிலை இதனால் விளக்கப்படுகிறது. கடி மரங்களைப் பகைவர் தடியக் காணுமிடத்தே அச்சமின்றிச் சென்று தெற்றியாடும் இள மகளிர்க்குள்ள மனவலியும் இவ் வேந்தன்பால் இல்லை யென்றற்கு இளமகளிர் செயலை யெடுத்தோதினார். ஆன்பொருந்தம் இப்போது அமராவதி யென வழங்குகிறது. 37. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
மாறோக்கத்து நப்பசலையார் இப் பாட்டின்கண், புள்ளின் புன் கண் தீர்த்த செம்பியன் மருக, நல்லர ணமைந்த மூதூர்க்கண் வேந்தன் இருத்தலை யறிந்து போரின்கண் அந்நகரை யஞ்சாது சிதைக்கும் ஆற்றலுடையை யெனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது வாகை நலத்தைப் பாராட்டுகின்றார்.
மாறோக்கம் என்பது மாறோகம் என்றும் வழங்கும். இது பாண்டி நாட்டிற் கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். நப்பசலையார் என்பது இவரதியற்பெயர். இவர் இச் சோழனையே யன்றி, மலையமான் திரு முடிக்காரி, மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன், கடுந்தேர் அவியன் என்போரைப் பாடியுள்ளார். இவருள் இச் சோழனைப் பற்றி மட்டில் பல பாட்டுக்கள் பாடியுள்ளார். இச் சோழனைப் பாடுமிடத்து இவன் முன்னோர் புள்ளுறு புன்கண் தீர்த்த வரலாற்றினை ஒருமுறைக் கிருமுறை வற்புறுப்பர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் வரலாற்றினையும் குறிப்பர். உறையூர் நல்லவைக்கண் அறம் நிலை நிற்பதும், சேரர் இமயத்தில் விற்பொறி வைத்ததும் இவரால் சிறப்புறக் குறிக்கப்படுகின்றன. இவர், இக் கிள்ளி வளவன் இறந்தகாலத்து உண்டாகிய தீ நிமித்தங்களை நிரலே தொடுத்துரைப்பதும், அவன் உயிரைக் கொண்டு கூற்றுவனை இகழ்ந்துரைப்பதும் நயமுடையவாகும்.
| நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த வேக வெந்திற னாகம் புக்கென விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப் பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப் | 5. | புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் | | சினங்கெழு தானைச் செம்பியன் மருக கராஅங் கலித்த குண்டுகண் ணகழி இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி |
|