பக்கம் எண் :

105

யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம்
10. கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச்
செம்புறழ் புரிசைச் செம்மன் மூதூர்
வம்பணி யானை வேந்தகத் துண்மையின்
நல்ல வென்னாது சிதைத்தல்
வல்லையா னெடுந்தகை செருவத் தானே. (37)

     திணை: வாகை. துறை: அரசவாகை; முதல் வஞ்சியுமாம்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து
நப்பசலையார் பாடியது.

     உரை: நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த வேக
வெந்திறல் நாகம் புக்கென - நஞ்சுடைத்தாகிய வெளிய
பல்லினையுடைய ஐந்து படம் பொருந்திய தலையைச் சுமந்த சினம்
பொருந்திய வெய்ய திறலையுடைய பாம்பு புக்கதாக; விசும்பு
தீப்பிறப்பத்திருகி - வானம் தீப் பிறக்கும் பரிசு முறுகி; பசுங்
கொடிப் பெருமலை விடரகத்து - பசிய கொடியினையுடைய பெரிய
மலை முழையின்கண்ணே;உரும் எறிந் தாங்கு - இடியேறு
எறிந்தாற்போல; புள்ளுறு புன்கண் தீர்த்த - புறவுற்ற துயரத்தைக்
கெடுத்த; வெள் வேல் சினங் கெழு தானைச் செம்பியன் மருக -
வெள்வேலொடு சினம்பொருந்திய படையையுடைய செம்பியன்
மரபிலுள்ளாய்; கராஅம் கலித்த குண்டு கண் அகழி - கராம்
செருக்கிய குழிந்த இடத்தையுடைய அகழியினையும்; இடம் கருங்
குட்டத்து - இடம் கரிதாகிய ஆழத்தின்கண்; உடன் தொக்கு ஓடி -
சேரத் திரண்டோடி; யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் -
இடையாமத்து ஊர் காப்பாருடைய விளக்கு நிழலைக் கவரும்; கடு
முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி - கடிய மாறுபாடு பொருந்திய
முதலையையுடைய நீர் மிக்க மடு வினையும்;செம்பு உறழ் புரிசை -
செம்பு பொருவும் மதிலையுமுடைய; செம்மல் மூதூர் - தலைமை
பொருந்திய பழைய வூரினுள்ளே; வம்பு அணி யானை வேந்து அகத்
துண்மையின் - கச்சணிந்த யானையையுடைய அரசு உண்டாகலின்;
நல்ல என்னாது - அவற்றை நல்லவென்று பாராது; செருவத்தான்
சிதைத்தல் வல்லை - போரின்கண் அழித்தலை வல்லையா
யிருந்தாய்; நெடுந் தகை - பெருந் தகாய் எ-று.

     இலஞ்சியையுடைய அகழி யென மாறிக் கூட்டினும் அமையும்.
இப்பொருட்கும் கராம் கலித்தலை அகழிக் கடையாக்குக. கராம் -
முதலையுள் ஒரு சாதி.

     செம்பியன் மருக, நெடுந் தகாய், விட ரகத்து நாகம் புக்கென,
உருமெறிந் தாங்கு மூதூரகத்து வேந்துண்மையின், செருவத்துச் சிதைத்தல்
வல்லை யென மாறிக் கூட்டுக.