பக்கம் எண் :

123

கேட்பித்தற்கண் வந்தது. அறவியு மறவியு மல்லையாயின் என்று
பாடமோதுவாரு முளர். படியா பெறா வென்பன எதிர்மறை வினை
யெச்சமுற்று. கைய வென்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று.

     விளக்கம்: பெருங்கயம்: பெருமை, யானைகள் படிதற்குரிய தகுதி
சுற்றிச் சுற்றி வரும் யானையை அலமரல் யானை யென்றார். நீர் இல்வினை
- நன்னீர்மை யில்லாத தொழில் திறத்தல் என்பதற்குத் திறத்தலைச்
செய்வாயாக என்று உரைக்கின்றாராதலால், “செய்யென வொருசொல்
வருவித்துரைக்கப்பட்டது” என்றார். வினையெச்ச வினைக்குறிப்பு முற்று
என்பது குறிப்பு முற்றெச்சம்.

45. சோழன் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும்

     சோழன் நெடுங்கிள்ளி ஆவூரினின்றும் தப்பிப் போந்து தனக்குரிய
உறையூரில் இருக்கையில், அதனை யறிந்த நலங்கிள்ளி போந்து உறையூரை
முற்றுகையிட்டான். சோழர் குடிக் குரியராகிய இருவர் தம்முள்
பகைகொண்டு மாறி மாறிப் போருடற்றித் திரிதல் நன்றன் றென்பதை யறிந்த
கோவூர் கிழார் இப்பாட்டின்கண் இருவரையும் சந்து செய்விக்கின்றார்.

இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
5 ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே
இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனாற்
குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. (45)

     திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி சோழன் நலங்கிள்ளி
உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும்
கோவூர் கிழார் பாடியது.

     உரை: இரும் பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன் -
பெரிய பனையினது வெளிய தோட்டைச் சூடினோ னல்லன்; கருஞ்
சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - கரிய கோட்டினையுடைய
வேம்பினது தாரையுடையோ னல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந்
தன்று - நின்னுடைய கண்ணியும் ஆத்தியால் செறியக் கட்டப்பட்டது;
நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்று - நின்னுடன்
பொருவானுடைய  கண்ணியும்  ஆத்தியாற்  செறியக்
கட்டப்பட்டது; ஒருவீர் தோற்பினும்