பக்கம் எண் :

125

     உரை: நீயே - நீதான்; புறவின் அல்லல் அன்றியும் - புறாவுற்ற
துன்ப மன்றியும்; பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை -
பிறவு முற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழன் மரபினுள்ளாய்;
இவர் - இவர்தாம்; புலன் உழு துண்மார் புன்கண் அஞ்சி -
அறிவான் உழுதுண்ணும் கற்றோரது வறுமையை யஞ்சி; தமது
பகுத்துண்ணும் தண் ணிழல் வாழ்நர் - தம்முடைய பொருளைப்
பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலை யுடையராய் வாழ்வாரது
மரபினுள்ளார்; களிறு கண்டழூஉம் - இவர் இப்பொழுது களிற்றைக்
கண்டு தம் இளமையால் தாம் முன்பு வெருவி யழுகின்ற; அழாஅல்
மறந்த புன் றலைச் சிறாஅர் - அழுகையை மறந்த புல்லிய
தலையையுடைய சிறு பிள்ளைகள்; மன்று மருண்டு நோக்கி - மன்றை
வெருவிப் பார்த்து; விருந்திற் புன்கண் நோவுடையர் - முன்பு
அறியாத புதியதொரு வருத்தத்தை யுடையர்; கேட்டனை யாயின் -
இது கேட்டா யாயின்; நீ வேட்டது செய்ம்மே - நீ விரும்பியதைச்
செய்வாயாக எ-று.

     தண்ணிழல் வாழ்நர் சிறாஅரென வியைப்பினு மமையும். அழால்
களிறு கண்டு மறந்த வெனக் கூட்டுக. நீ புறா முதலாயினவற்றின் துயர்
தீர்த்தற்கு உயிர்க் கொடை பூண்டோன் மருக னாதலானும், இவர் கற்றோர்
வறுமை யஞ்சிப் பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் மரபினுள்ளாராதலானும்
இவர் நின்னால் அருளத் தகி னல்லது முனியத்தகா ரென்பதாம்.

இதுவும் இவரைக் கொல்லாமற் சந்து செய்வித்தலின், துணை வஞ்சியாயிற்று.

விளக்கம்: களிறு கண்டழுதற்குக் காரணம் விளக்குதற்கு, இளமையால்
வெருவி யழும் என்றுரைத்தார். உயிரிழக்கும் துன்பமாதலின் அதனை
“விருந்திற் புன்கண்” என்றார். அழூஉம் அழாஅல் - அழுகின்ற அழுகை;
அழாஅல்: தொழிற்பெயர் செய்ம்மே என்றது, ஈற்றுமிசை யுகரங்கெட்ட
செய்யுமென் முற்றன்று; அது முன்னிலைக்கண்செல்லாது, “நின்மே”
யென்றாற்போல ஏவற்பொருட்கண் வந்தது.

47. சோழன் நெடுங்கிள்ளி

ஆசிரியர் கோவூர் கிழார், இந்த நெடுங்கிள்ளி, சோழன்
நலங்கிள்ளியிடத்திலிருந்து போந்த இளந்தத்த னென்னும் புலவரை
அவருடைய ஒற்றனெனக் கருதிக் கொல்லப் புகுந்தானாகக் கண்டு,
இப்பாட்டால் அப் புலவரை உய்விப்பாராய், “வேந்தே, வரிசை நோக்கி
வாழும் புலவரது பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீங்கு செய்வ தன்று;
வள்ளியோரை நாடிச் சென்று அவரைப் பாடி அவர் தரும் பொருள்
கொண்டு பகுத்துண்டு பல்லுயி ரோம்புவது பரிசிலர் செயல்; மண்ணாளும்
செல்வமுடைய நும் போலும் வேந்தரை யொப்பக் கல்வியால்
மாறுபட்டோரைத் தம்