| விளக்கம்: மைபடு மருங்குல் என்புழி மருங்குல் பக்க மாதலால், மைபடு பக்க மெனக் கொண்டார்; மை, கருமை. இதற்குக் காரணம் கருமரத்தாற் செய்யப்பட்டது என்கின்றார். பொலங் குழை யுழிஞை, பொன்னாற் செய்யப்பட்ட உழிஞை யென்றும், குழை யென்பது அதற்கு அடையென்றும் கொள்ளலாம். பொற்றளிரையுடைய உழிஞை யென்பர் உரைகாரர். உழிஞைப்பூ பொன்னிறமுடையது. முரசுறை கடவுட்குக் குருதிப் பலி தருதல் மரபாதலால், குருதி வேட்கை யுருகெழு முரசம் என்றார். தெறுதல், வெகுளுதல், சாமரை வீசுவது தண்ணென்ற காற்றெழுப்புங் குறிப்பினாலாதலால், தண்ணென வீசியோய் என்றார். வெகுட்சியால் வெம்மை செய்தற்குரிய நீ, சாமரையால் தண்ணென வீசினாய் என்பதாம். இம்மையிற் புகழுடையோர்க் கல்லது மறுமைக்கண் துறக்கவாழ் வில்லை யென்பதுபற்றி, இவணிசை யுடையோர்க் கல்லது அவணது உயர்நிலை யுலகத் துறையுள் இல்லை யென்பது ஈண்டுக் கூறப்படுகிறது. தமிழ் முழுதும் என்றது, இய லிசை நாடக மென்ற முத்தமிழையும் குறித்து நின்றது. தமிழ் நாடு முழுவதும் என்று கூறலும் பொருந்தும் என்றற்குத் தமிழென்பதற்குத் தமிழ் நாடெனினு மமையும் என்றார். தண்ணென வென்பதற்கு வேறாக, எண்ணென வென்றும் எண்ணி யென்றும் பாடமுண்டு. அக்காலை, எண்ணென்பது கருத்தெனவுமாம்; எண்ணி யென்று பாடமாயின் கருதி யென்க என்று கூறுக வென்றார். 51. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி கூடகார மென்பது பாண்டிநாட்டி லிருந்ததோர் ஊர். இவ் வேந்தன் தன் நாட்டிற்கு வடக்கிலிருந்த வேந்தருடன் பெரும்போருடற்றி வெற்றி மேம்பட்டவன். இவனுடைய போர்த் திறலை வியந்து, ஐயூர் முடவனார். மதுரை மருதனிள நாகனார் என்ற இரு சான்றோரும் அழகிய பாட்டுக்களைப் பாடியிருக்கின்றனர். இவன் காலத்தே, சோழ நாட்டைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி புரிந்து வந்தான். இவ் வழுதிக்குப் பின் வந்த பாண்டி வேந்தன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில்மலைத் தலைவனான வள்ளுவனும் இவன் காலத்தவனே. ஆசிரியர் முடவனார் ஐயூர் என்னு மூரினர். இவர், முடவ ரெனப் படுதலால், நடந்து செல்ல இயலாதவரென்றும், இதனால் இவர் தாமான் தோன்றிக்கோன் என்பானை யடைந்து வண்டியிழுத்தற்குப் பகடு பல தரப்பெற்றன ரென்றும் கூறுவர். தாம் கிள்ளிவளவனைக் காணச் சென்றதாகவும், இடை வழியில் மாட்டாமை வந்துற, கிள்ளி வளவனுள்ளியவற் படர்ந்தும், செல்லேன் செல்லேன் பிறர்முக நோக்கேன் என்று வருந்தி ஒருபால் இருப்ப, அதனை யறிந்த தோன்றிக்கோன் இவர்க்குச் சிறப்புச் செய்தாகவும்; இவர் அவனை, கடுந்தேர் அள்ளற் கசாவா நோன்சுவல், பகடே யத்தை யான் வேண்டி வந்ததுவென விரும்பியதாகவும், அவன் விசும்பின் மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை, ஊர்தியொடு நல்கினா னெனவும் இவரே பிறிதோரிடத்திற் (புறம்:399) பாடியுள்ளார். இப்பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்து வருகையில், தன் னேவல் வழிநின்று திறை செலுத்தி வாழ்தலின்றிப் பகைத்துப் போருடற்றிய வேந்தரது வலியினை யழித்துத் தன்னாணையே அவர் நாட்டினும் செல்வித்தான். அதுகண்ட ஆசிரியர் ஐயூர் முடவனார், வேந்தே, நீர் மிகின்
|