பக்கம் எண் :

143

55. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

இப் பாண்டியன், இலவந்திகைப் பள்ளிக்கண் இறந்ததுபற்றிப் பிற்காலச்
சான்றோரால் இவன் இவ்வாறு கூறப்படுகின்றான். இவன் மிக்க பேராண்மை
யுடையவன்; இவனைப் பாடிய சான்றோர் பலரும் இவனுடைய போர்
வன்மை முதலிய பேராற்றல்களையே பெரிதெடுத்து மொழிந்திருக்கின்றனர்.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், “வல்லா ராயினும் வல்லுந
ராயினும், புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன, உரைசால் சிறப்பின் புகழ்
சால் மாற” என்றும், நக்கீரனார், “ஓங்குவாள் மாற” என்றும்
பாராட்டியிருக்கின்றனர். ஒருகால் இவனை ஆவூர் மூலங் கிழாரும், வடம
வண்ணக்கன் பேரிசாத்தனாரும் தனித் தனியே காணச் சென்றபோது
அவர்கட்கு இவன் பரிசில் தர நீட்டித்தான். அதுகண்டு அவர்கள் வெகுண்டு
பாடியன மிக்க பெருமிதம் தோற்றுவிப்பனவாகும். இவன் புதல்வர் பலரை
யுடையவன்: “நோயிலராக நின் புதல்வர்” என ஆவூர் மூலங் கிழாரும்,
“நின்னோ ரன்ன நின் புதல்வர்” என வடம வண்ணக்கன் பேரிசாத்
தனாரும் இவன் மக்கள் நலத்தைக் குறித்துரைப்பது நோக்கத்தக்கது.

ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
5.பிறைநுதல் விளங்கு மொருகண் போல
வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும்என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
10. அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
அதனால், நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
15. வானத் தன்ன வண்மையு மூன்றும்
உடையை யாகி யில்லோர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
20. கடுவளி தொகுப்ப வீண்டிய
வடுவா ழெக்கர் மணலினும் பலவே. (55)