| திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிள நாகனார் பாடியது.
உரை: ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ -உயர்ந்தமலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக் கொளுத்தி; ஒரு கணைகொண்டு மூவெயில் உடற்றி - ஒப்பில்லாததோ ரம்பை வாங்கிய மூன்றுமதிலையும் எய்து; பெரு விறல் அமரர்க்கு - பெரிய வலியையுடையதேவர்கட்கு; வென்றி தந்த - வெற்றியைக் கொடுத்த; கறை மிடற் றண்ணல்- கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது; காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல - அழகிய திருமுடிப் பக்கத் தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம் போல; வேந்து மேம்பட்ட பூந் தார் மாற - மூவேந்த ருள்ளும் மேம்பட்ட பூந்தாரை யுடைய மாற, கடுஞ்சினத்த கொல் களிறும் - கடிய சினத்தை யுடையவாகிய கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும் விரைந்த செலவை யுடையவாகிய மனஞ் செருக்கிய குதிரையும்; நெடுங் கொடிய நிமிர் தேரும் - நெடிய கொடியை யுடையவாகிய உயர்ந்த தேரும்; நெஞ்சுடைய புகல் மறவரு மென - நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென; நான்குடன் மாண்டதாயினும் - நான்கு படையுங் கூட மாட்சியைப்பட்டதாயினும்; மாண்ட அறநெறி முதற்று அரசின் கொற்றம் - மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி; அதனால்-; நமர் எனக் கோல் கோடாது - இவர் நம்முடைய ரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது; பிறர் எனக் குணம் கொல்லாது - இவர் நமக்கு அயலோ ரென்று அவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற் றன்ன வெந் திறல் ஆண்மையும் - ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்; திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும் - திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும்; வானத் தன்ன வண்மையும் - மழையைப் போன்ற வண்மையுமென்ற; மூன்று முடையை யாகி - மூன்றையு முடையையாகி; இல்லோர் கையற - இல்லாததோர் இல்லையாக; நீ நீடு வாழிய - நீ நெடுங் காலம் வாழ்வாயாக; நெடுந் தகை - நெடுந் தகாய்; தாழ் நீர் வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில் - தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய தலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடு வேள் நிலைஇய - நெடிய முருகவேள் நிலைபெற்ற; காமர் வியன் துறை - அழகிய அகன்ற துறைக்கண்; கடுவளி தொகுப்ப - பெருங் காற்றுத் திரட்டுதலால்; ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பல - குவிந்த வடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் எ-று. |