| 57. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன் இப்பாண்டிவேந்தன்,ஒருகால்பகைவர்மேற்போர்குறித்துச் செல்லலுற்றானாக, அவனைக் காணப் போந்திருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால், வேந்தே, நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க; ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக; நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க; அவர் கடிமரங்களை மட்டும் தடியாமல் விடுக; அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல என்று பாடுகின்றார்.
இக் காரிக்கண்ணனார், காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் சிறந்த செய்யுள் செய்யும் செந்நாப் புலவர். இவர் காலத்தே இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருவரை யொருவர் அடுத்து வாழ்ந்தனர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் இவர் காலத்தவன். இச் சோழன் நம் கண்ணனார்பால் நன்மதிப்புக்கொண்டு, அவர் சொல்வழி நின்று சீர்த்தியுற்றான். அங்கே காவிரி கடலொடு கலக்கும் நீர்த்துறைக்கண் போந்து பரவும் கடலோதம், தான் வருங்கால் இறாமீனைக் கொணர்ந்தெற்றி மீண்டு செல்லும்போது மகளி ரெறிந்த கோதைகளைக் கொண்டேகு மெனத் தமக்குரிய நகரின் சிறப்பை யெடுத்தோதுவர். ஒருகால் இவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டார். கண்டவர், இருவரது ஒற்றுமையால் உண்டாகும் நலத்தை வியந்து, இருவீரும் உடனிலை திரியீராயின், இமிழ் திரைப் பௌவ முடுத்த இப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யாகாதே என்று கூறி, என்றும் இன்றே போல்கநும் புணர்ச்சி யென வற்புறுத்திப் பெருஞ் சிறப்புற்றார். பிட்டங் கொற்றன் என்பவனுடைய வண்மையைப் புகழ்ந்து பாடிய இவர், அவன் உள்ளடி, முள்ளும் உறாற்க தில்ல என்றும், ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே என்றும் வாழ்த்துவர். ஆஅய் அண்டிரன் இரவலர் வருவதுணர்ந்து அவர்க்கு யானைகளைத் தொகுத்து வைத்தளிப்ப னென்றும், கோச ரென்பார் படைப்பயிற்சி செய்யுமிடத்து, முருக்கமரத்துப் பெருங் கம்பத்தை நிறுத்திப் பயிலுவ ரென்றும் கூறுவர்.
| வல்லா ராயினும் வல்லுந ராயினும் புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின் | 5. | நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட் | | டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க நனந்தலைப் பேரூ ரெரியு நக்க மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல் ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம் |
|