| 10. | கடிமரந் தடித லோம்புநின் | | நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே. (57) |
திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
உரை: வல்லா ராயினும் - யாதொரு கல்வியை மாட்டாராயினும்; வல்லுந ராயினும் - அதனை வல்லா ராயினும்; புகழ்தலுற்றோர்க்கு மாயோன் அன்ன - புகழ்தலைப் பொருந்தியவர்கட்கு மாயோனை யொத்த; உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற - சொல்லுத லமைந்த தலைமையையுடைய புகழமைந்த மாற; நின் ஒன்று கூறுவ துடையேன் - நினது ஒரு காரியஞ் சொல்லுத லுடையேன்; என் னெனில் அது யாதெனின்; நீ பிறர் நாடு கொள்ளுங் காலை - நீ நின் பகைவர் நாட்டைக் கொள்ளுங் காலத்து; அவர் நாட்டு இறங்கு கதிர்க் கழனி - அவர் நாட்டின்கண் வளைந்த கதிரையுடைய வயலை; நின் இளையரும் கவர்க - நின்னுடைய வீரரும் கொள்ளை கொள்க; நனந் தலைப் பேரூர் எரயும் நக்க - அகலிய இடத்தையுடைய பெரிய வூரைத் தீயும் சுடுக; மின்னு நிமிர்ந் தன்ன நின் ஒளி றிலங்கு நெடு வேல் - மின் நிமிர்ந்தாற் போன்ற நினது பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல்; ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க - பகைவரை யழிக்கினும் அழிக்க; என்னதூஉம் - யாவதும்; கடி மரந் தடிதலோம்பு - காவன் மரத்தை வெட்டுதலைப் பாதுகாப்பாயாக; நின் நெடு நல் யானைக்குக் கந்தாற்றா - நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு நட்டு நிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டா வாதலான் எ-று.
அவை இளமர மாதலால், நின் நெடுநல் யானைக்குத் றியாதற்குப் பொறையாற்றா வென்று உரைப்பாரு முளர். வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப் புகழ்ந்து முடிய வொண்ணாமையான், மாயோ னன்ன வென்றார். அன்றி, அவ்விருவர்க்கும் ஒப்ப அருள் பண்ணுதலின் அவ்வாறு கூறிற் றெனினு அமையும். மாற, நின் யானைக்குக் கந்து ஆற்றாவாதலால் கடி மரந் தடித லோம்பெனக் கூட்டுக.
நின் யானைக்குக் கந்தாற்றா வாதலால் கடி மரந் தடித லோம்பெனக் கூறுவான்போல் சந்து செய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது துணைவஞ்சி யாயிற்று.
விளக்கம்: வல்லுந ரென்பதற்கு, மறுதலை வல்லாரென் றறிக. வல்லுநரும் வல்லாருமாகிய இருதிறந்தார் புகழினும் மாயோன் ஏற்றுக் கோடலை, ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர் கிளக்குங்கா லவைநினக், கிறும்பூ தன்மை நற்கறிந்தே மாயினும், நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்ப (பரி.4) என்று சான்றோர் கூறுதலா லறிக. நின்னொன்று கூறுவ தென்ற விடத்து நினக் கென்னாது நின தென்றது, கூறுவதாகிய ஒன்று
|