பக்கம் எண் :

151

அவனது செய லென்பது தோன்ற; நினக்கென்ற வழி, அவ்வொன்று
பிறரதாகலும் கூடும். இறங்கு கதிர்க் கழனி - முற்றி விளைந்து வளைந்து நிற்கும்
கதிர்களையுடைய நெல் விளையும் கழனி. பாடஞ் செய்தலாவது, வடித்துத் தீட்டி
நெய் பூசி உறையிலிட்டு வைத்தல். கடிமரந் தடிந்தாலன்றி வென்றி
நிரம்பாதாகலின், அதனைச் செய்யற்க வென்றது, கழனியைக் கவர்தல் முதலிய
செயல் தண்ட மாத்திரையே பகைவர் பணிந்து திறைபகரலுறுவர்; அதனை
யேற்றுப் போரைத் தவிர்த்து அவரை யருளுதல் வேண்டும் என்பதுபட
நிற்றலின், “சந்து செய்விக்கும் நினைவாற்” கூறியவாறாயிற்று; ஆகவே, இது
துணைவஞ்சி யாயிற்றென வறிக.

58. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும்,

     பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்
சோழன் பெருந் திருமாவளவன் குராப்பள்ளி யென்னும் இடத்தே உயிர்
துறந்தமை கருதிப் பிற்காலத்தான்றோர் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்
திருமாவளவன் எனச் சிறப்பித்தனர். இவன் போருடற்றுவதில் தலைசிறந்தவன்.
தன் காலத்தே வாழ்ந்த சேரமன்னன் கொங்கு நாட்டவர் துணைபெற்று
இவனோடு பகை கொண்டானாக, இவன் அக் கொங்கரை வென்று சேரனாடு
புகுந்து, அதன் தலைநகராகிய வஞ்சி நகரையே போர்க்களமாகக் கொண்டு
போருடற்றி வென்றி யெய்தினான். இவன், “பகைவர் புகழ்ந்த ஆண்மையும்
நகைவர்க்குத், தாவின் றுதவும் பண்பும்” உடைய னெனக் கோவூர் கிழார்
பாடுகின்றார். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு முன்னோ பின்னோ
அடுத்திருந்தவன். ஏனையோர் போலாது தனது ஆட்சி நிலைபெறுதற்குச்
சோழனொடு நட்புற்றிருப்பதே வேண்டுவதெனத் துணிந்து சோழன் குராப்பள்ளித
் துஞ்சிய பெருந் திருமாவளவனது நட்பைப் பெற்று இனிதிருந்தான். ஒருகால்
இருவரும் ஒருங்கிருப்பக்கண்ட காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனா
ரென்னும் சான்றோர் இப் பாட்டால், “நீவிர் இருவீரும் ஒருவர்க்கொருவர் உதவி
நட்பு மாறா தொழுகுவீராயின், இந் நிலவுலகு முற்றும் நும் கையகப்படுவது
பொய்யாகாது” என வற்புறுத்தினார். சோழனிலும் பாண்டியனையே சிறப்புற
வெடுத்தோதி இப் பாட்டின் கண் வற்புறுத்துவதால், சோழன் அவர் கருத்துக்கு
இனி தியைந்திருப்பதும் பாண்டியன் தெருட்டப்பட்ட வேண்டியிருப்பதும் நன்கு
விளங்குகின்றன.

நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
5. நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே