பக்கம் எண் :

192

76. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

     பாண்டியன் நடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவில் தன்னை
யெதிர்த்த முடி வேந்தர் இருவரும் குறுநில மன்னர் ஐவருமாகிய எழுவரும்
தோற்றோடுமாறு தான் ஒருவனே வென்ற சிறப்பை மதுரை நக்கீரர்,
ஆலம்பேரி சாத்தனார், கல்லாடனார் முதலிய சான்றோர் பலர்
புகழ்ந்திருக்கின்றனர். அவருள், இடைக்குன்றூர்கிழார் என்னும் சான்றோர்
இச் செழியன் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தவர். அவர் இச் செழியன்
ஒருவனாய் இருந்து பொருது வென்றதை, “ஒருவரை யொருவர் அடுதலும்,
ஒருவர்க் கொருவர் தொலைதலும் இவ்வுலகத்தே தொன்றுதொட்டு வருவன;
அவ்வாறு அடுதலும் தொலைதலும் நிகழுமிடத்து வெற்றி பெற்றோர் பலரும்
பலருடைய துணைபெற்று அதனைப் பெற்றது கேள்வி யுற்றுள்ளோமேயல்லது
ஒருவனே தனித்து நின்று பலராய்க் கூடி யெதிர்ப்போரை வென்றது
கேட்டிலம்; பாண்டியன் ஒருவனாய் நின்று தம் பீடும் செம்மலும் அறியாமல்
எதிர்த்த எழுவர். நல்வலம் அடங்க வென்றது, இன்றுகாறும் யாம்
கேட்டதன்று” என இப்பாட்டின்கண் வியந்து கூறியுள்ளார்.

இடைக்குன்றூர் என்பது இவரதூர். இவர் வேளாளர். இவர் பாண்டியன்
நெடுஞ்செழியன் ஒருவனால் எழுவரை வென்ற செய்தியை வியந்தும், போர்
செய்த திறத்தைப் புகழ்ந்தும், பகைவர் கருத்தழிந்த வகையைக் கட்டுரைத்தும்,
அவன் போர்க்குச் சென்ற நலத்தைப் பாராட்டியும் பாடியுள்ளார். சுருங்கச்
சொல்லின், தலையாலங்கானப் போர் நிகழ்ச்சியை நேரிற் கண்டுரைக்கும்
சான்றோருள் இவர் சிறந்தவர் என்பது மிகையாகாது.

ஒருவனை யொருவ னடுதலுந் தொலைதலும்
புதுவ தன்றிவ் வுலகத் தியற்கை
இன்றி னூங்கோ கேளலந் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை யொண்டளிர்
5.நெடுங்கொடி யுழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியன் மாலையொடு பொலியச் சூடிப்
பாடின் றெண்கிணை கறங்கக் காண்டக
நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
10.பீடுஞ் செம்மலு மறியார் கூடிப்
பொருது மென்று தன்றலை வந்த
புனைகழ லெழுவர் நல்வல மடங்க
ஒருதா னாகிப் பொருதுகளத் தடலே.
(76)

     திணை: வாகை. துறை: அரசவாகை. பாண்டியன்
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர்
கிழார் பாடியது.