பக்கம் எண் :

199

80. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி

     இக்கிள்ளி, முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியின் வேறுபடுத்தற்குச்
சான்றோரால் இவ்வாறு கூறப்பட்டான். இவன் பெயரில் போரவை யென்பது
போர்வை யெனக் காணப்படுவது ஏடுபெயர்த் தெழுதினோரால் நேர்ந்த பிழை.
இவன் தந்தை தித்தன் எனப்படுவன். அவன் செயலிடத்தே வெறுப்புற்ற இவன்
வேறோர் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் கட்டிளமையும் போர் வன்மையும்
உடையன். ஒருகால், இவன் முக்காவல் நாட்டு ஆமூர் சென்று, அங்கே
மல்லன் ஒருவனை மற்போரில் வென்று மேம்பட்டான். இவனுடைய ஆண்மை
அழகு முதலிய பண்புகளில் பேரீடுபாடுற்ற நக்கண்ணையார் என்பார்
இவன்பாற் பெருங்காதல் கொண்டார். அவர் அக்கிள்ளி சென்று தங்கிய
ஆமூரில் இருந்தவர். பெருங்கோழி நாய்கன் என்பாற்கு மகளாராவர்;
நல்லிசைப் புலமையும் வாய்ந்தவர். அவர்க்குக் காதல் பெரிதாயிருந்ததேயன்றி,
அவன் அவர்பாற் காதல் கொண்டொழுகிய குறிப்பொன்றும் கிடைத்திலது.
பின்னர் இவன் எவ்வாறு முடி வேந்த னாயினன் என்றும், நக்கண்ணையார்
என்னாயின ரென்றும் தெரிந்தில.

     போரவைக் கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர்
மல்லனொடு பொருது வென்று நின்ற காலத்துச் சாத்தந்தையார் என்னும்
சான்றோர் உடனிருந்து நேரிற் கண்டார். அக்காட்சி அவருள்ளத்தைக்
கவர்ந்தமையின், இப்பாட்டின்கண் அம் மற்போரை விரித்துரைக்கின்றார்.

சாத்தந்தையார் என்பது சாத்தன் தந்தையார் எனப் பொருள்படுமாயின்
ஈண்டு இயற்பெயராகவே யுளது. சாத்தன் தந்தை யென்பது பொருளாயின்,
இவரது இயற்பெயர் கூறப்படவேண்டும். இவர் இக்கிள்ளியின்பால் இளமை
தொட்டே பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். பெருநற்கிள்ளி தந்தையை
வெறுத்து முக்காவல் நாட்டு ஆமூரையடைந்திருக்கையில் தாமும் உடனிருந்து
இவன் செயல்களைக் குறித்துக் கொண்டுள்ளார். ஆமூர் மல்லனை வென்றதும்,
பிற போர்களில் வீரரை வென்றதும் இவனது போர்த் திறமும் இவரால் விரியக்
கூறப்பட்டுள்ளன. போரில் மடியும் மள்ளர் உம்பருலகில் அமர மகளிரை
மணப்பர் என்று இவர் கூறுகின்றார். அம்பு தைப்பினும், வேல் பிறழினும்,
யானைக்கோட்டு நுதி மடுத் தூன்றினும் அடிபெயர்த்தோடாமை
பீடுடையாளர்க்குச் சிறப்பெனக் கருதுவர்.

இன்கடுங் கள்ளி னாமூ ராங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே யொருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
5.நல்கினு நல்கா னாயினும் வெல்போர்ப்
போரருந் தித்தன் காண்கதி லம்ம
பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை யொசிய வெற்றிக்
களம்புகு மல்லற் கடந்தடு நிலையே