பக்கம் எண் :

200

     திணை: தும்பை: துறை: எருமை மறம். சோழன் போரவைக்
கோப்பெருநற்கிள்ளி முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு
நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.

     உரை: இன் கடுங் கள்ளின் ஆமூ ராங்கண் - இனிய அழன்ற
கள்ளினையுடைய ஆமூரிடத்து; மைந்துடை மல்லன் மதவலி முருக்கி -
வலியையுடைய மல்லனது மிக்க வலியைக் கெடுத்து; ஒருகால் மார்பு
ஒதுங்கின்று - ஒருகால் மண்டியாக மார்பிலே மடித்து வைத்து; ஒருகால்
வருதார் தாங்கி - ஒருகால் அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி;
பின் ஒதுங்கின்று - முதுகின்கண் வளைத்து; பசித்துப் பணை முயலும்
யானை போல - பசித்து மூங்கிலைத் தின்றற்கு முயலும் யானையை
யொப்ப; இருதலை ஒசிய எற்றி - தலையுங் காலுமாகிய இரண்டிடமும்
முறிய மோதி; களம்புகு மல்லன் கடந் தடு நிலை - அக்களத்தின்கட்
புக்க அம் மல்லனை எதிர்ந்து நின்று கொன்ற நிலையை; நல்கினும்
நல்கா னாயினும் - கண்டால் உவப்பினும் உவவானாயினும்;
வெல்போர்ப் போர் அருந் தித்தன் காண்க - இவன் தந்தையாகிய
வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய தித்தன் காண்பானாக எ-று.


     என்றது, தந்தையுடன் வெறுத்துப் போந்தான் அமருட் புகுந்து,
இப்போர் செய்தானை அவன் விரும்பின் உவக்கின்றான், விரும்பாவிடின்
அஞ்சுகின்றா னென்பதாம். “பணைமுயலும் யானை போல ஒரு தலை யொசிய
வொற்றி” என்று பாடமோதி, அம் மல்லன் முற்கூறாயினும் பிற்கூறாயினும்
ஒருதலை முறிய மோதி யென்றுரைப்பாரு முளர். தில்: விழைவின்கண் வந்தது.

     விளக்கம்: கடுங் கள், புளிப்பு மிகுதியால் களிப்புற்றுச் சீறிப் பொங்கும்
கள்; அதனையே “அழன்ற கள்” ளென்றார். தன்மேல் மண்டியாக
இருப்போனைத் தள்ளிக் கீழ்ப்படுத்தற்பொருட்டுச் செய்யப்படும் மற்போர்ச்
சூழ்ச்சி, “உபாயம்” எனப்பட்டது. பணை முயலும் - பணைக்கு முயலும் என
நான்கனுருபு விரிந்தது. பெற்ற தந்தை யாதலின், கண்டால் உவப்பெய்தா
தொழியான் என்ற கருத்தால் “நல்கினும்” என்றும், பெருநற்கிள்ளிபால்
கொண்ட வெறுப்பால் ஒருகால் உவவானாயினும் வன்மை கண்டு நெஞ்சில்
அஞ்சுவன் என்பது தோன்ற, “நல்கானாயினும்” என்றும் கூறினார்.