| மலையின் கண்ணே வெளிப்படாது கரப்பை; அகல் இருவிசும் பினானும் அகன்ற பெரிய ஆகாயத்தின்கண்ணும்; பகல் விளங்குதி பல்கதிர் விரித்து - பகற்பொழுது விளங்குவை பல கிரணங்களையும் பரப்பி எ-று.
மாறி வருதி யென்பதற்கு, இராசிதோறும் மாறி வருதி யெனினுமமையும். வீங்கு செலல் மண்டிலமே, வரைதி, இறத்தி, வருதி, ஒளித்தி, நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக் குறைபாடெல்லாமுடைய நீ சேரலாதனை யாங்ஙன மொத்தியோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஒழுகவென்னு மெச்சம், நுகரு மென ஒரு சொல் வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப்பட்டது. ஒழுகவும் போக நுகரவும் வேண்டி யெனினு மமையும். வேண்டி, பொறாது, துரப்ப என நின்ற வினை யெச்சங்கள் ஒடுங்கா வென்னும் பெயரெச்ச மறையோடு முடிந்தன. இனி, பகல் விளங்கலை யென்னும் பாடத்திற்குத் திங்கண் மண்டிலமாக்கி மாறி வருதியென்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும்அதற்கேற்ப வுரைப்ப.
விளக்கம் : திங்கள் தோறும் மேடம் முதலாகக் கூறப்படும் இராசி தோறும் நின்று ஞாயிறு விளக்கம் செய்யும் என்னும் சோதிட நூன்முறைப்படி மாறிவருதி யென்பதற்கு இராசிதோறும் மாறி வருதியெனினு மமையும் என்றார். சேரலாதன் போல ஞாயிற்று மண்டிலமும் மிக்க செலவினை யுடைமைபற்றி, அவற்கு அதனை ஒப்பாகக் கூறுப; அதனை யாராயுமிடத்து, வீங்கு செலல் மண்டிலம் பல குறைபாடுகளை யுடைத்தாதலால், அவ்வொப்புமை பொருந்தாதென்பார், யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம் என அம் மண்டிலத்தையே கேட்கின்றார். ஞாயிறு விளங்கும் காலம் பகற்பொழுதை நினக்கெனக் கூறுபடுப்பை என்றுரைத்தார். ஞாயிறு மறையத் திங்கள் தோன்றித் திகழ்வதால், திங்களுக்கு முதுகிட்டுப் போதி யென்றார்; திங்கள் முதுகிடுதல் இல்லை; ஞாயிறு எழுதற்குமுன் மறைதலும், எழுந்தபின் மறைதலும் திங்கட்குண்மையின். பகல் விளங்குதி யென்றதற்குப் பகற்பொழுது விளங்குவை யென்று கூறுதலால் பொழுதென வரைதி யென்பதற்குக் காலத்தைப் பல பொழுதுகளாக (சிறுபொழுது பெரும்பொழுதுகளாக) வகுத்தற்கு ஏதுவாகுவை யென்றுரைப்பினும் அமையும். உரைகிடந்தவாறே கொள்ளுமிடத்து, பகற்பொழுது நினக்கென்கூறுபடுக்கும் நீ அப்பகற்போதிற்றான் பல்கதிர்களையும் பரப்பி விளங்குவை யென்றதாகக் கொள்க. இவற்றிற்கு மாறாகச் சேரலாதனது ஒளி, இரவு பகலென வரையறையின்றி யெக்காலத்தும் திகழும் என்றும், கடந்தடுதானையை யுடையனாதலால்,இவன் பிறர்க்குப் புறங்கொடுத்தல் இலன்என்றும், போரில் வஞ்சிக்கும் இயல்பிலனாதலால், இடமாறுதலும், பகைவர் படைக்கு மாறுதலும் இவன்பால் இல்லையென்றும், அத்தகிரியில் மறைந்தொளிக்கும் ஞாயிறு போலாது எங்குந் தன் புகழே விளக்க மிக்குத்தோன்றுகின்றானென்றும், விண்ணும் மண்ணும் தன் புகழே பரப்பி விளங்குகின்றனென்றும் சேரலாதன் மிகுதி கூறியதாகக் கொள்க. காவலர் வழிமொழிந் தொழுகலால், அரம்பும் குறும்பும் பகையும் பிறவும் நாட்டில் இல்லையாக, சேரலாதன் போகநுகர்ச்சி மேற்கொண்டிருந்தமையின், வழியொழுக நுகரும் போகம் வேண்டி யென ஒழுகவென்னும் வினை
|