பக்கம் எண் :

25

    

யெச்சத்தை நுகரும் என ஒருசொல் வருவித்து முடித்தார். நுகரும் என்பது
அவாய் நிலையான் வந்தது. ஒழுகவும் போகம்  நுகரவும் வேண்டியென்று
கொள்ளுமிடத்தும் நுகரவும் என்பது வருவிக்கப்படும்.

     இனி, “பகல் விளங்குதி” யென்பதைப் “பகல் விளங்கலை” யென்று
பாடங்கொண்டு,  அதற்கேற்பப்  பகலில்  விளக்கம்  செய்யாத  திங்கள்
மண்டிலத்தை “வீங்கு செலல் மண்டிலம்” என்றார்  என்றுகொண்டு, மாறி
வருதி யென்பதற்குத் “தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும்...... உரைப்ப”
என்றார்.   தொல்காப்பிய  வுரைகாரரான   பேராசிரியர்,  இவ்வுரைகாரர்
காட்டியவாறே “பகல் விளங்கலையால்”  என்று  பாடங்கொண்டு, “வீங்கு
செலல் மண்டிலத்தைத்” திங்களாக்கி,  பொழுதென  வரைதி யென்பதற்கு,
“நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி” யென்றும்,  புறக்கொடுத்திறத்தி
யென்பதற்கு, “தோற்றோர்போன்று  ஒளிமழுங்கிச்  செல்கின்றா”யென்றும்,
மாறி வருதி யென்பதற்கு, “மலைசார்ந்த வழித்தோன்றா”யென்றும் பொருள்
கூறுவர்.  வீங்கு  செலல் மண்டிலம் என்பதை விலங்கு செலல் மண்டிலம்
என்று பாடங்கொண்டு, “கடையாயினார் கதியிற் செல்லும் மதியம்” என்று
கூறுவர். இவையெல்லாம் உட்கொண்டே உரைகாரர், “பிறவும் அதற்கேற்ப
வுரைப்ப” என்றார்.

9. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

     இப் பெருவழுதியை இப்பாட்டால் நெட்டிமையாரென்னும் சான்றோர்
சிறப்பிக்கின்றார்.  நெடுந்தொலைவிலுள்ள  பொருளைக்  கூர்ந்து நோக்கி
யறியும் கண்ணை, நெட்டிமையெனச் சிறப்பித்துரைத்த நயங்கருதி இவர்க்கு
இப்பெயருண்டாயிற்று;  இவர்  பஃறுளியாறு   கடல்   கோட்படு  முன்பு
இருந்தவராதலின், கடல் கோட்குப் பின்னர்த்  தோன்றிய  சங்ககாலத்தில்
அப் பாட்டு இறந்துபோயிற்றாதல்  வேண்டும்.  இவரது கண்ணிமை நீண்ட
பண்புடையது; அதனால்  இவர்க்கு இப்  பெயரெய்திற்று  என்று  கூறுவர்.
கண்ணிமை    நீண்டிருத்தல்   அழகன்மையின்,    அதனால்    ஒருவர்
பெயர்படைத்துக்    கொள்வரென்பது    மக்கள்  இயல்பன்று.

     இனி,  இப்  பாட்டின்கண்  பாண்டியன்  முதுகுடுமிப்  பெருவழுதி,
அறத்தாறு    நுவலும்   பூட்கையும்   யானைமேற்   கொடி   காட்டிய
சிவிகையமைத்து  இவர்ந்து  வரும்  பெருமிதமும்  உடையன்  என்றும்,
இவனுடைய    முன்னோனாகிய    பாண்டியன்    நெடியோனென்பான்
பஃறுளியாறு   கடலிற்   கலக்குமிடத்தே  முந்நீர்  விழா   ஆற்றினான்
என்றும்,  அவ்வியாற்று  மணலினும்  பல  வாண்டுகள் இப் பாண்டியன்
முதுகுடுமி  வாழ்வானாக  என்றும்  வாழ்த்துகின்றார்.

  ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
 5.எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென