| திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல். அவனை அவர் பாடியது.
உரை: அளிது பாரியது பறம்பு - இரங்கத்தக்கது பாரியுடைய பறம்பு; நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் - பெருமையைக்கொண்ட முரசினையுடைய நீயிர் மூவேந்தரும் சூழினும்; உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து - உழவரால் உழுது விளைக்கப்படாதன நான்கு விளையுளை யுடைத்து; ஒன்று - அவற்றுள் முதலாவது; சிறி இலை வெதிரின் நெல் விளையும் - சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும்; இரண்டு - இரண்டாவது; தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும் - இனிய சுளையையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும்; மூன்று - மூன்றாவது; கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும் - கொழுவிய கொடியையுடைய வள்ளிக் கிழங்கு தாழ விருக்கும்; நான்கு - நான்காவது; அணி நிற ஓரி பாய்தலின் - அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலான்; மீ தழிந்து - அதன் மேற் பவர் அழிந்து; திணி நெடுங் குன்றம் தேன் சொரியும் - கனத்த நெடியமலை தேனைப் பொழியும்; வான் கண் அற்று அவன் மலை - அகல நீள வுயரத்தால் வானிடத்தை யொக்கும் அவனது மலை; வானத்து மீன் கண் அற்று அதன் சுனை - அவ்வானத்தின்கண் மீனை யொக்கும் அம்மலையின்கட் சுனை; ஆங்கு அவ்விடத்து; மரந் தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் - மரந்தோறும் கட்டப்பட்ட யானையை யுடையீராயினும்; புலந் தொறும் பரப்பிய தேரினிராயினும் - இடந்தோறும் பரப்பப்பட்ட தேரை யுடையீராயினும்; தாளில் கொள்ளலிர் - உங்கள் முயற்சியாற் கொள்ளமாட்டீர்; வாளில் தாரலன் - நுமது வாள் வலியால் அவன் தாரான்; யான் அறிகுவன் - அது கொள்ளுமாறு யான் அறிவேன் அதனைக் கொள்ளும் பரிசை; சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி - வடித்து முறுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்து; விரை யொலி கூந்தல் நும் விறலியர் பின் வர - நறு நாற்றத்தையுடைய தழைத்த கூந்தலையுடைய நும் விறலியர் பின்னே வர; ஆடினிர் பாடினிர் செலின் - ஆடினிராய்ப் பாடினிராய்ச் செல்லின்; நாடும் குன்றும் ஒருங்கு ஈயும் - அவன் நுமக்கு நாட்டையும் மலையையும் கூடத் தருவன் எ-று.
அளிதோ வென்பது, ஈண்டு வியப்பின்கண் வந்தது. ஓரி யென்பது தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீல நிறம்; முசுக்கலை யெனினு மமையும். குன்றம் தேன் சொரியு மென இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. நான்கு பயனுடைத்தென்று வைத்து, நெல் விளையும், பழம் ஊழ்க்கும், கிழங்கு வீழ்க்கும், தேன் சொரியும் என்று அவற்றின் செய்கை தோன்றக் கூறினா ரெனினும், கருதியது நெல்லும் பழமும் கிழங்கும்
|