பக்கம் எண் :

254

 

கூம்பு, முகை. பருத்தியிற் கொண்ட பஞ்சினை நூற்றல் மகளிர்
செயலாதலின், “பஞ்சி முன்றில்” என்றார். பறம்பு நாட்டில் வாழும் மகளிர்
இப்போது உமணர் செலுத்தும் சகடத்தை யெண்ணுதல் கண்டு கபிலர்
இரங்குகின்றவர், பாரியிருந்து அரசுபுரிந்த காலத்தே இம்மகளிர் பாரியொடு
போர் வேட்டு வந்த வேந்தருடைய போர்க்குதிரைகளை யெண்ணி
விளையாடியது நினைந்து  வருந்துகின்றார். பகைவேந்தர் வந்த வண்ணம்
இருந்ததற்குக் காரணம் கூறுவார், “பாரியது அருகை யறியார் போரெதிர்ந்து
வந்த வலம் படு தானைவேந்தர்” என்றார். அரை மலை, மலையின்
அடிப்பகுதி. சோலையில் மயிலெழுந்தால, சிலம்பில் கலை பாய்ந்துகள,
மரங்கள் காலமன்றியும் பயம் பகரும் புது வருவாய் ஒழியாத அரை மலை
அத்தன்மைத்தாக, உச்சி மலையில் மகளிர் ஏறி வேந்தருடைய குதிரைகளை
யெண்ணுவர் என்றும் உரை கூறுவ துண்டென்பார், “வியன்மலை
அத்தன்மைத் தெனப் பிறிதொரு தொடராக்கி உரைப்பினு மமையும்”
என்றார். வலம்படு தானை வேந்த ரென்றது, வலம்படு தானையினை
யுடையராகியும், பாரியது அருமை யறியாது போரெதிர்ந்தமையின்
கெட்டனரென்பது விளங்கநின்றது. பாரியைத் தந்தை யென்றார்,
தந்தைபோல நாட்டு மக்களை அவன் பேணிப் புரந்தமை தோன்ற.

                    117. வேள் பாரி

     பாரியது நாடு புன்புலமானது கண்டு வருந்தி வந்த கபிலர் அவன்
மகளிர் இருந்த பார்ப்பார் மனையடைந்து கண்டது கூறலுற்றார்;கூறுபவர்,
“இம் மகளிர்க்குத் தந்தையாகிய வேள் பாரியது நாடு அவன் உளனாகிய
காலத்தில் அவன் செங்கோன்மையால் மழை பிழையாது; சான்றோர் பலர்
நிறைந்திருந்தது; அத்தகைய நாடு இன்று அவனை இழந்து புல்லிதாயிற்”
றென இரங்கிப் பாடினர். அப் பாட்டே இது.

 மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்
வயலக நிறையப் புதற்பூ மலர
மனைத்தலை மகவை யீன்ற வமர்க்கண்
5ஆமா நெடுநிரை நன்பு லாரக்
 கோஒல் செம்மையிற் சான்றோர் பல்கிப்
பெயல்பிழைப் பறியாப் புன்புலத் ததுவே
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
10ஆய்தொடி யரிவையர் தந்தை நாடே. (117)

         திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.