பக்கம் எண் :

253

 

ஏந்தெழில் மழைக்கண் - மிக்க அழகையுடைய குளிர்ந்த
கண்ணினையும்; இன்னகை மகளிர் - இனிய முறுவலையுமுடைய
மகளிர்; புல் மூசு கவலைய - புல் மொய்த்த கவலையை
யுடையனவாகிய; முள் மிடை வேலி - முள்ளால் நெருங்கிய
வேலியையும்; பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் - பஞ்சு பரந்த
முற்றத்தையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்; பீரை நாறிய சுரை
இவர் மருங்கின் - பீர்க்கு முளைத்த சுரை படர்ந்த விடத்தில்;
ஈத்திலைக் குப்பை ஏறி - ஈத்திலையையுடைய குப்பையின்கண்ணே
ஏறி; உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப - உமணர் உப்புச்
செலுத்தும் சகடத்தை யெண்ணுவர்; நோகோ யான் - நோவேன்
யான்; காலை தேய்கமா - எனது வாழ்நாள் கெடுவதாக; பயில்
பூஞ்சோலை மயில் எழுந் தாலவும் - பயின்ற பூவையுடைய
சோலைக்கண் மயிலெழுந் தாடவும்; பயில் இருஞ் சிலம்பில் கலை
பாய்ந்து உகளவும் - பயின்ற மலையின்கண்ணேயேறி முசுக்கலை
தாவி யுகளவும்; கலையுங் கொள்ளா வாக - அம்முசுக்கலையும்
நுகர்ந்து வெறுத்தலாற் கொள்ளாவாம் பரிசு; காலமன்றியும் மரம்
பலவும் பயம் பகரும் - காலமன்றாகவும் மரங்கள் பலவும் காயும்
பழமு முதலாயினவற்றை விளைந்து கொடுக்கும்; யாணர் அறாஅ
வியன் மலை அற்று - புது வருவாயொழியாத அகன்ற மலையைப்
போலும்; அண்ணல் நெடு வரை ஏறி - தலைமையையுடைய வுயர்ந்த
வரையின் கண்ணேயேறி; தந்தை பெரிய நறவின் கூர் வேல் பாரியது
- தம்முடைய தந்தையாகிய மிக்க மதுவினையும் கூரிய
வேலினையுமுடைய பாரியது; அருமை யறியார் - பெறுதற்கருமையை
யறியாராய்; போர் எதிர்ந்து வந்த - போரேற்று வந்த; வலம்படு
தானை வேந்தர் - வென்றிப்பட்ட சேனையையுடைய அரசரது;
பொலம் படைக் கலிமா எண்ணுவோர் - பொன்னாற் செய்யப்பட்ட
கல முதலியவற்றையுடைய மனஞ் செருக்கிய குதிரையை
யெண்ணுவோர் எ-று.

     வியன்மலை யென்றது, அரை மலையை; நெடுவரை யென்றது உச்சி
மலையை. இன் னகை மகளிர், நெடு வரை யேறி முன்பு வேந்தர் கலிமாவை
யெண்ணுவோர், இப்பொழுது ஈத்திலைக் குப்பையேறி உமணர் உப்பொய்
ஒழுகையை எண்ணுவர்; இதற்கு நோவேன் யான்; எனது வாழ்நாள்
கெடுவதாக வென வினைமுடிவு செய்க. அன்றே யெண்ணு மேகாரம்
அசைநிலை. வியன்மலை அத்தன்மைத்தெனப் பிறிதொரு தொடராக்கி
உரைப்பினு மமையும்.

     விளக்கம்: குவளைக் கூம்பவிழ் முழு நெறி யென்றவிடத்துக் குவளை,
செங்கழுநீர்; செங்கழு நீரின் முகை யவிழ்ந்து புறவித ழொடிக்கப்பட்ட பூ
ஈண்டு முழுநெறி யெனப்பட்டது. இனி, அடியார்க்கு நல்லார், “முழு நெறிக்
குவளை” (சிலப். 2, 14) என்பதற்கு இதழொடிக்கப்படாத குவளை யென்ற
பொருள்பட, “இதழொடிக்கப்படா தெனவே செவ்வி கூறிற்று” என்று கூறி
இவ்வடிகளை யெடுத்துக் காட்டினர்.