| மட மொழி - மெல்லிய மொழியினையு முடைய; அரிவை தோள் அளவு அல்லது - அரிவையுடைய தோள் மாத்திரையல்லது; நினது என இலை - நின்னுடையதென்று சொல்ல ஒன்றுடைய யல்லையாயிருக்கவும்; நீ பெருமிதத்தை - நீ பெரிய செருக்கினை யுடையையாயிராநின்றாய், இதற்குக் காரணமென்னையோ எ-று.
ஏத்தினர் தரூஉ மென்று பன்மையாற் கூறியது, அவ்வேந்தன் அமைச்சரை, மூவருள் யானொருவன் எனக்குத் துப்பாகியர் என அம் மூவரும் ஏத்தினர் தரூஉ மென் றுரைப்பினு மமையும்.
நாடு அந்தணரது; கூழ் இரவலரது; அரிவை தோள் அளவல்லதை நினக்கு உரித்தாகக் கூறுதற்கு யாதும் இல்லையாயிருந்தது; நீ பெருமிதத்தை யுடையையாயிருந்தா யென வியந்து கூறியவாறு.
விளக்கம்:காரியின் மலைநாடு உள்நாட்டதாகலின், கடல் கொளப்படாது என்றும், முடிவேந்தர் மூவரும் துணையாக விரும்பும் பெருவலி படைத்தவனாதலின், உடலுநர் ஊக்கார் என்றும் கூறினார். திருந்தடி என வாளாது கூறினமையின், இலக்கணத்தால் திருந்திய அடி என உரை கூறப்பட்டது. துணை வலியாக வேண்டுமென வேந்தர் விடுப்ப வரும் பொருளைக்கொண்டு இரவலர் பசிப்பிணி தீர்த்தலின், அதனைக் கூழ் என்றார். மூவருள் ஒருவன் துப்பாகியர் என்றதற்கு மூவேந்தருள் ஒருவனுக்கு வலியாக வேண்டும் எனப் பொருள் கூறினமையின், வேறு வகையாகக் கூறப்படும் பொருளை, மூவருள்.....அமையும் என்றார். பண்டைத் தமிழ்மக்கள் தம் தாளாற்றலால் ஈட்டிய பொருளை இரவலர்க்கீத்துப் பெறும் புகழையே புகழாகக் கருதுவர்; தாயத்தாற் பெற்ற செல்வத்தை வழங்கிப்பெறும் புகழை விரும்புவதிலர். இந்நூன் முழுதும் தாளாற்றலாற் பெற்ற பொருளே பரிசிலர்க்கு வழங்கப்படுவதை யெடுத்தோதுவதைப் படிப்பவர் நன்கறிவர். பொருளை யீட்டியது போலத் தம் ஆண்மை நலத்தால் மணந்து கொள்ளப்பட்டாராயினும், மகளிர் வாழ்க்கைத் துணையாகக் கருதப் பட்டமையின், கொடைக்குரியராகார் என்பது தமிழ் நூன் மரபு. அதனால், தன்னிற் பிரித்துப் பிறர்க்கு நல்கக்கூடிய பொருளன்மையின், அரிவைதோ ளளவல்லதை நினதென இலை என்றார். மனைவியை விலைப்பொருளாகக் கருதி விற்றலும், பிறர்க் கீத்தலும் வடநூன் மரபு.
123. மலையமான் திருமுடிக்காரி
ஒருகாற் புலமை நலஞ் சான்ற நல்லோரிடையே வள்ளல்களின் கொடைநலம் பற்றிப் பேச்சு நிகழ்ந்தபோது, நாநலம் சிறந்த கபிலர், நாட்காலையிற் கள்ளுண்டு களிக்குங்கால் இரவலர் புகழுரை கேட்டு அவர்க்குத் தேர்கள் பலவற்றை வழங்குவது எத்தகைய வள்ளல்கட்கும் எளிதில் இயல்வதாம்; எனவே, அவரது கொடை, கள் மகிழ்ச்சியில் நிகழ்வதனால் செயற்கையாம். மலையமான் திருமுடிக்காரி களியாப் போழ்தில் வழங்கும் தேர்களை நோக்கின், |