| அவை அவனது முள்ளூர்மலையிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகும். எனவே, இஃது இயற்கைக் கொடை யெனத் தெளிமின் என்று இப்பாட்டால் எடுத்துரைக்கின்றார்.
| நாட்கள் ளுண்டு நாண்மகிழ் மகிழின் யார்க்கு மெளிதே தேரீ தல்லே தொலையா நல்லிசை விளங்கு மலையன் மகிழா தீத்த விழையணி நெடுந்தேர் | 5 | பயன்கெழு முள்ளூர் மீமிசைப் | | பட்ட மாரி யுறையினும் பலவே. (123) |
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: நாட்கள் உண்டு - நாட் காலையே மதுவை யுண்டு; நாள் மகிழ் மகிழின் - நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின்; தேர் ஈதல் யார்க்கும் எளிது - தேர் வழங்குதல் யாவர்க்கும் எளிது; தொலையா நல்லிசை விளங்கும் மலையன் - கெடாத நல்ல புகழ் விளங்கும் மலையன்; மகிழாது ஈத்த - மது நுகர்ந்து மகிழாது வழங்கிய; இழை யணி நெடுந்தேர் - பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர்; பயன் கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட - பயன் பொருந்திய முள்ளூர் மலையுச்சிக்கண் உண்டாகிய; மாரி உறையினும் பல - மழையினது துளியினும் பல எ-று.
இதன் கருத்து, ஏனையோர் கொடை செயற்கை யென்றும் இவன் கொடை இயற்கை யென்றும் கூறியவாறு.
விளக்கம்: செயற்கையாவது, மதுவுண்ட மகிழ்ச்சியால், தன்னால் நல்கப்படும் பொருள்களின் அருமை நோக்கும் இயற்கை யறிவிழந்து ஏற்குநர் ஏற்க வழங்குவது. இயற்கை, மது முதலியவற்றால் அறிவு நலங் குன்றாது ஏற்போர் வரிசை யறிந்து நல்குவது. மகிழ்தல், மது வுண்டு மயங்குதல். மகிழ்ந்ததன் றலையும் நறவுண் டாங்கு (குறுந். 165) எனச் சான்றோர் வழங்குதல் காண்க. மது மகிழ்ச்சியில் பிறர் நல்கும் கொடையளவினும், அம் மயக்கமின்றியே மலையமான் நல்கும் கொடையளவு பெரிதென்பர், மாரி யுறையினும் பல என்றார்.
124. மலையமான் திருமுடிக்காரி
இரவலர் புரவலரை நாடிப் புறப்படுங்கால் நன்னாள் நோக்குதலும் புள்நிமித்தம் காண்டலும் இயல்பு. நாள் செய்வது நல்லோர் செய்யார் என்பது தமிழகத்துப் பண்டுதொட்டே இயன்று வரும் வழக்கு. நாளும் நிமித்தமும் நலமாகாவழிப் பெறக் கருதும் பரிசில் எய்தாதென்று கருதினர். இவ்வண்ணம்கருதிக்கொண்டிருந்த சான்றோர் சிலரைக் கண்ட கபிலர், மலையன் திருமுடியைக் காணச் செல்லும் இரவலர் நாளும் புள்ளும் நோக்கவேண்டுவதிலர்; அவன்பால் அடையினும், |