| கடற்குப்பெயருண்டானதற்கு இவ் வுரைகாரர் கூறும் காரணத்தை மறுத்து, மண்ணைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய முச்செய்கையை யுடைய நீர் முந்நீர்; ஆகுபெயரால் அது கடற்காயிற்றென அடியார்க்கு நல்லார் (சிலம்.17) கூறுவர்; அவர் கூறியதையே நச்சினார்க்கினியாரும் (பெரும்பாண்.441) மேற்கொள்வர்.நிலத்திற்கு முன்னாகிய நீர் நிலத்திற்கு முன்னே யுண்டாகிய நீர்; முதுநீர்ப் பௌவம் கதுமெனக் கலங்க (பெருங்.3. 24:140) என்று பிறரும் இக் கருத்துத் தோன்ற உரைப்பது நோக்கத்தக்கது. முன்னிலைப்பெயரும் படர்க்கைப்பெயரும் விரவி முன்னிலைவினை கோடற்குத் தனியே விதி கூறப்படாமையால், அதிகாரப் புறனடையாற் கொள்ளவேண்டி யிருத்தல்கொண்டு,முன்னிலைவினையான் முடிதல்......கொள்ளப்படும் என்றார்.
பாண்டியன் நெடியோன் காலத்திருந்த பஃறுளியாற்றை நெட்டிமையார் எடுத்தோதி அதன் மணலினும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துதலால், அப் பஃறுளியாறு நெட்டிமையார் காலத்தும் உளதாதல் பெறப்படும்; படவே, இவரும் இவராற் பாடப்பெற்ற பாண்டியனும் கடல்கோட் காலத்துக்கு முற்பட்டவர் என்பது விளக்கமாம். 10. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி நெய்தலங்கானல் என்பது இச் சோழன் பிறந்த வூராகும். நெய்தலங்கானல் நெடியோய்என்று ஊன்பொதி பசுங்குடையார் கூறுவர். இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் மேம்பட்டவன். இரப்போர்க்கு வரையாது வழங்கும் வண்மையுடையவன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி யென்னுமிடத்தும் பகைவரை வென்று முறையே பாமுளூரெறிந்த இளஞ்சேட் சென்னி யென்றும் செருப்பாழி யெறிந்த இளஞ்சேட் சென்னியென்றும் கூறப்படுகின்றான். பாமுளூர் சேரர்கட் குரியது. இவன் நெய்தலங் கானலிலிருந்த போதும், பாமுளூரெறிந்தபோதும், செருப்பாழி யெறிந்தபோதும் ஊன்பொதி பசுங்குடையார் இவனைப்பாடி பரிசில் பெற்றிருக்கின்றார் ஊன் பொதி பசுங்குடையாரது இயற்பெயர் தெரிந்திலது. பனையினது பச்சோலையால் உட்குடைவுடையதாகச் செய்யப்படுவது பனங்குடை உணவுண்டற்கும் பூப்பறித்தற்கும் மக்கள் பயன்படுத்துவர்; எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசு வெள்ளமலை, இரும்பனங் குடையின் மிசையும் (புறம்.177) என்றும், அவல் வகுத்த பசுங்குடையாற் , புதல் முல்லைப் பூப்பறிக் குந்து (புறம்.352) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. வேண்டுமாயின் இதனிடத்தே சோறு பொதிந்துகொண்டும் போவது மரபு; ஆறு சென்மாக்கள் சோறுபொதி வெண்குடை (அகம்.121) என வருவது காண்க. இதனிடத்தே ஊன் பொதிந்துகொண்டு செல்வதை வியந்து, இவ் வாசிரியர், ஊன்பொதி பசுங்குடை யென்று பாடிய சிறப்பால், இவர் ஊன் பொது பசுங் குடையார் எனப்படுகின்றார். இவர் பாட்டில் நகைச்சுவையும், இயற்கை நவிற்சியும், அறவுணர்வும் விரவி இவரது பருமாண்புலமை நலத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன.
இப் பாட்டின்கண், இளஞ்சேட்சென்னி நெய்தலங்கானலிடத்தே யிருக்குங்கால் தன்னை வழிபடுவோரைத் தழுவிக்கோடலும், பிறர் பழி
|