| ஆகுபெயருமாம் என்றும் கூறினார். இவ் வியைபு குறித்தே சில உரைகாரர், இதனை அன்மொழித்தொகை யாகுபெயரென்றும் கூறுகின்றனர். தடவரல் - வளைவு. வரிப் பொருண்மையாவது, அவரவர் பிறந்த நிலத்தன்மையும், பிறப்பிற்கேற்ற தொழிற் றன்மையும் தோன்றக் கூறுதல். இது வரிக் கூத்து. வரிப்பாட்டாவது, தெய்வஞ் சுட்டியும் மக்கட் சுட்டியும் பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியன்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆற னியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியும் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வருவது. படுமலை ஒருவகைப் பண்; இது கைக்கிளை குரலாக நிறுத்துப் பாடுவது என்ப. யாழை ஒருபுடைத் தழீஇக் கொண்டதான் உள்ளம் தளர்ந்ததற்குக் காரணம் கூறாராயினும், நெடுவரையருவிடர்ச் சிறுநெறி யேறிவந்த தென்பது விறலிக்குக் கூறியவாற்றால் துணியப்படும். பரிசிலர் தொடக்கத்தே மன்றத்தே தங்கிப் பின்னரே மறுகுதோறும் சென்று பாடுபவாதலின், மன்றுபடு பரிசிலர் என்றார். தொடுத்தல், வளைத்துக் கொள்ளுதல். பொதுவாக யாவராலும் மேலாய சொற்களாற் பாராட்டப்படும் புகழ் பொதுமீக் கூற்ற மெனப்பட்டது; மீக்கூறுதல், புகழ்தல்; மீக்கூறும் மன்னனிலம் (குறள்-386). பொதியில், சான்றோர் யாவராலும் மீக்கூறப்படும் சிறப்புடையதாதலால், பொதுமீக்கூற்றம் பொதியிலுமாம் என்றார். பொதியிலாயினும் இமயமாயினும்...ஒடுக்கம் கூறார் உயர்ந்தோ ருண்மையின் என அடிகள் கூறுதல் காண்க.
136. வேள் ஆய் அண்டிரன்
துறையூர் என்பது காவிரிக் கரைக்கண் உள்ளதோ ரூர். இவ்வூரில் ஓடை கிழார் என்னும் சான்றோர் வாழ்ந்தனர். இவர் வறுமை மிக்குப் பொதியின்மலைக் கிழவனாகிய ஆய் அண்டிரனைப் பாடிப் பரிசில் பெறக் கருதி, அவனது ஆய் குடிக்குச் சென்று அவனைக் கண்டார். அப்போது அவர் தமது வறுமைத் துன்பத்தை இப் பாட்டில் அமைத்து, வேந்தே, என் உடையிலுள்ள தையலில் வாழும் சீலைப்பேன் ஒருபால் என்னைப் பகைத்துத் துன்புறுத்துகிறது; உணவின்றி வருந்தும் என் சுற்றத்தோடு என்னை வருத்தும் பசிநோய் ஒருசார் துன்புறுத்துகிறது; எவரிடத்தேனும் பரிசில் பெற்றுச் செல்லின், வழியில் ஆறலைத்து அதனையும் பறித்துக்கொள்ளும் கள்வரது அச்சம் ஒருமருங்கு வருத்தத்தைச் செய்கிறது. இத் துன்பங்களனைத்தையும் போக்கி எம்மை அருளவல்லவன் ஆய் அண்டிரன் என்று கேட்டு அவன் புகழை விரும்பியாங்கள் நெடுஞ்சுரங் கடந்து வந்துள்ளோம். எங்கட்கு ஈபவரே ஒரு பயனும் கருதாது பிறர்க்கு ஈபவராவர்; ஒரு பயன் கருதிப் பிறர்க்கீபவர் தமக்கே ஈபவராவர்; இவ்வளவே யான் சொல்வேனாக, நீ நின் தகுதிக்கேற்ப வேண்டுவன வழங்குக. யாங்கள் அப் பரிசிலைக்கொண்டு எம துறையூரின்கண்ணே யிருந்து உண்டு மகிழ்ந்து, எம்மூர்த் துறையிடத்து மணலினும் பல யாண்டு நீ வாழ்வாயாக என வாழ்த்தி மகிழ்வோம் என்று பாடியுள்ளார்.
யாழ்ப்பத்தர்ப் புறங்கடுப்ப இழைவலந்த பஃறுன்னத் |
|