பக்கம் எண் :

294

 

“வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்” என்றார். நாஞ்சில் உழுகின்ற
கலப்பைக்கும் பெயராதலின், நாஞ்சில் மலையை “உழாஅ நாஞ்சில்” என
வெளிப்படுத்தார். பரிசில் உன்னி - பரிசில் கருதிப் போந்து என்று
பொருள் படுதலின், பரிசிற்கு வந்து பொருந்தி யென்றார். பரிசில் துன்னி
என்றும் பாடம் கூறுவர்.கனி பதம் - மனம் அருளாற் கனிந்து நெகிழும்
காலம். வேந்து ஈதலானான் என்றும், அவற்கு நீ சாதல் அஞ்சாய் என்றும்
கூறுதலின், நாஞ்சில் வள்ளுவன் குறுநில மன்னனென்றும், வேந்தென்றது
சேரனை” என்பதனால், இவ் வள்ளுவற்குத் தலைமை வேந்தன் சேரன்
என்றும் அறியலாம். “அருஞ்சமம் வருகுவதாயின்” என்றது, அச்
சமத்தின்கண் ஈடுபடின் நின் செவ்வி எமக்குக் கிடைத்த லரிதாம்;
அதனால் எம் சுற்றத்தின் பசித்துன்பம் நீங்குவது நீட்டிக்கும் என்றவாறு.
“அதனால்...கருத்து” என்பது குறிப்பெச்சம்.

                  140. நாஞ்சில் வள்ளுவன்

      ஒருகால் நாஞ்சில் வள்ளுவனது நாட்டிற்கு ஒளவையார் விறலியர்
பலர்சூழ்வரச் சென்றிருந்தார். அக்காலை அவ்விறலியர் தாம் தங்கியிருந்த
மனைப் பக்கத்தே முளைத்துத் தழைத்திருந்த கீரைகளைப் பறித்துச்
சமைக்கலுற்றனர். அவர்கட்கு அதன் கண்ணுறையாக இடற்குத்துவரை யரிசி
இல்லை. அதனால் அவர் பொருட்டு ஒளவையார் வள்ளுவனிடம் சென்று
சில அரிசி தருமாறு வேண்டினர். அவன் அவரது வரிசையும் தன்
நிலைமையும் சீர்தூக்கி மலைபோல்வதொரு களிறு சுமக்கும் அளவில்
களிற்றின்மேலேற்றி விடுத்தான். ஒளவையார் அவன் கொடை மடத்தை
வியந்து, ஏனைச் சான்றோர்களை நோக்கி, “செந்நாப்புலவீர், நாஞ்சில்
வள்ளுவன் மடவன்போலும். யாம் சில அரிசி வேண்ட, எமக்கு
மலைபோல்வதொரு களிற்றை நல்கினனே! இப்பெற்றிப் பட்டதொரு
கொடை மடமும் உண்டுகொல்! பெரியோர் தமது செய்தற்குரிய கடமையை
முன்பின் ஆராய்ந்து செய்யாரோ? கூறுமின்” என்று இப் பாட்டைப்
பாடியுள்ளார்.

 தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாஞ்சில
5அரிசி வேண்டினெ மாகத் தான்பிற
 வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர்
தேற்றா வீகையு முளதுகொல்
10போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே. (140)

     திணை : அது. துறை : பரிசில் விடை. அவனை ஒளவையார்
பாடியது.