| 141. வையாவிக் கோப்பெரும் பேகன்
பண்டைத் தமிழகத்துக் குறுநில மன்னர்களில் எவ்வியர் குடி, ஆவியர் குடி, அதியர் குடியெனப் பல குடிகள் உண்டு. வேள் பாரி எவ்வி குடியிலும் அதியமான் நெடுமானஞ்சி அதியர் குடியினும் பிறந்து பிறங்கினாற் போல, வையாவிக் கோப்பெரும் பேகன் ஆவியர் குடியிற் பிறந்து சிறந்தவன். ஆவியர் முதல்வனான வேள் ஆவி யென்பான் பண்டைப் பொதினி நகர்க்கண் இருந்து அரசு புரிந்தவன். அப் பொதினி பிற்றை நாளில் பழனி யென்றும், பின்பு வையாவி யென்பது வையா புரியென்றும் மருவி வழங்கலாயின. இது திரு ஆவி நன்குடி யெனவும் வழங்கும். வையாவிக் கோப்பெரும் பேகன் பெருவள்ளலாவன். ஒரு கால் மயிலொன்று கார்முகில் வரக்கண்டு களித்துத் தன் தோகையை விரித்தாட, அதுகண்ட பேகன், அதன் ஆடலை வியந்தும் குளிரால் நடுங்குகின்றதென நினைந்தும் தனக்கு உடையும் போர்வையுமாகிய உயரிய ஆடையை யளித்துப் புலவர் பாடும் புகழ் மேம்பட்டான். இத்தகைய அருணிரம்பிய வள்ளலாகிய பேகனுக்குத் திண்ணிய கற்பமைந்த மனைவியார் ஒருவர் உண்டு. அவர் பெயர் கண்ணகியென்பது. கண்ணகியாரோடு கூடிக்காதல் வாழ்வு நடாத்தும் பேகனுக்கு, அவன் நாட்டு நல்லூரின்கண் வாழ்ந்த பரத்தை யொருத்திபால் புறத்தொழுக்க முளதாயிற்று. நாளடைவில் அப்புறத் தொழுக்கம் முறுகி வளரவே, அவன் கண்ணகியைக் கைதுரந் தொழுக லுற்றான். கண்ணகியார்க்குக் கலக்கம் பெரிதாயிற்று. இதன் விளைவு தீதா மென்றறிந்த அக்கண்ணகியார் பெரிதும் வருந்தலுற்றார். அவர் பொருட்டுக் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்கிழார் முதலியோர் பேகன்பாற் சென்று தகுவன கூறித் தெருட்டலுற்றனர். பின்னர் அவனும் தேறித் தன் மனைவியாரொடு கூடி இனிதிருந்து நல மெய்தினான்.
ஆசிரியர் பரணர், வையாவிக் கோப்பெரும் பேகன் களிமயிற்குப் போர்வை யளித்துப் புகழ் மேம்படுவது கேள்வியுற்று அவனைக் காணச் சென்றார். அவனும் அவர் வரிசை யறிந்து பெரும் பொருள் நல்கிச் சிறப்பித்தான். அதனைப் பெற்றுக்கொண்டு வருங்கால், அவர் வழியில் பரிசில் தருவாருளரோ வென வறுமையுற்று வருந்தி வரும் பாணனொருவனைக் கண்டார். அவனும் இவரை, நீவிர் யார்? என வினவ, இவர், அவனைப் பேகன்பால் ஆற்றுப்படுப்பாராய், தம்மை யொரு பாணனாக நாட்டிக் கொண்டு, இரவல, யாமும் வள்ளல் பேகனைக் காணாமுன் நின்னினும் புல்லியேமாயிருந்தேம். அவனைக் கண்டபின் இத்தன்மையேமாயினேம். நீயும் அவன்பாற் செல்க. அவன் மஞ்ஞைக்குப் படாம் ஈந்தவன்; எத்துணையாயினும் இரப்பார்க் கொன்று ஈதல் நன்று என்றுகருதுபவன்; அவன் கொடை மறுமைப்பயன் நோக்குவ தன்று; பிறர் எய்தி வருந்தும் வறுமைத் துன்பத்தைப் போக்குவதையே நோக்கி நிகழ்வது. ஆதலால், நீ அவன்பால் இன்னே செல்வாயாக என்ற கருத்துப்படப் பாடினார். அப்பாட்டே இது.
| பாணன் சூடிய பசும்பொற் றாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர் |
|