பக்கம் எண் :

297

 
5யாரீ ரோவென வினவ லானாக்
 காரெ னொக்கற் கடும்பசி யிரலவ
வென்வே லண்ணற் காணா வூங்கே
நின்னினும் புல்லியே மன்னே யினியே
இன்னே மாயினே மன்னே யென்றும்
10உடாஅ போரா வாகுத லறிந்தும்
 படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை யாயினு மீத்த னன்றென
மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே.
(141)

     திணை : அது. துறை : பாணாற்றுப்படை;
புலவராற்றுப்படையுமாம். வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர்
பாடியது.

    உரை : பாணன் சூடிய பசும் பொன் தாமரை - பாணன் சூடிய
ஒட்டற்ற பொன்னாற் செய்யப்பட்ட தாமரைப்பூ; மாணிழை விறலி
மாலையொடு விளங்க - மாட்சிமைப்பட்ட அணியினையுடைய விறலி
யணிந்த பொன்னரி மாலையுடனே விளங்க; கடும் பரி நெடுந்தேர்
பூட்டு விட்டு அசைஇ - கடிய குதிரையைப் பூண்ட நெடிய தேரைப்
பிணிப்புவிட்டு இளைப்பாறி; ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் -
ஊரின்கண் இருந்தீர் போலச் சுரத்திடை இருந்தீர்; யாரீரோ என -
நீர் யாவிர் பாணரோ என; வினவலானா - எம்மைக் கேட்டலமையாத;
காரென் ஒக்கல் கடும் பசி இரவல - புல்லென்ற சுற்றத்தையும் மிக்க
பசியையுமுடைய இரவலனே; வென் வேல் அண்ணல் காணா
ஊங்கு - வென்றி வேலையுடைய தலைவனைக் காண்பதன் முன்;
நின்னினும் புல்லியேம் மன் - யாம் நின்னினும் வறியேம்; இனி -
இப்பொழுது; இன்னேம் ஆயினேம் - அவ்வறுமை நீங்கி இத்
தன்மையே மாயினேம்; என்றும் - எந்நாளும்; உடாஅ போரா
ஆகுதல் அறிந்தும்- உடா போராவாதலை யறிந்து வைத்தும்;
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்தஎம்கோ - படாத்தினை மயிலுக்குக்
கொடுத்த எம் இறைவன்; கடாஅ யானைக் கலிமான் பேகன் -
மதமிக்க யானையினையும் மனஞ் செருக்கிய குதிரையினையுமுடைய
பேகன்; எத்துணையாயினும் ஈத்தல் நன்றென - எவ்வளவாயினும்
கொடுத்தல் அழகிதென்று; மறுமை நோக்கின்றோ அன்று -
மறுபிறப்பை நோக்கிற்றோவெனின் அன்று; பிறர் வறுமை
நோக்கின்று அவன் கைவண்மை - பிறரது மிடியைக் கருதிற்று
அவனது கைவண்ணம் எ-று.