| மலைத்தல் போகிய வீரர் போரான் மாறுபடுத்தலொழிந்த;சிலைத்தார் மார்ப - இந்திர விற்போலும் மாலையையுடைய மார்ப; செய்து இரங்கா வினை - ஒரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தே மென்று கருதாத செய்கையையும்; சேண் விளங்கும் புகழ் -சேய்மைக் கண்ணே விளங்கும் புகழினையுமுடைய; நெய்தலங் கானல் நெடியோய் - நெய்தலங் கானலென்னும் ஊரையுடைய நெடியோய்; எய்த வந்தனம் யாம் - அணுக வந்தேம் யாம்; பல ஏத்துகம் - நின் பல குணங்களையும் புகழ்வேமாக எ-று.
வழிபடுவோரை வல்லறிதி யென்றது, அறிந்து அவர்களுக்கு அருள் செய்வை யென்பதாம். பெரிதென்பது வினையெச்சக் குறிப்பாதலின், ஆக வென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது பண்டையிற் பெரிது தணிதி யென்றுரைப்பினு மமையும். அடப்பட்டமையாத அமிழ்து போலும் அடிசிலென்றுரைப்பினு மமையும். வினையும் புகழும் உடைய நெய்தலங்கானல் நெடியோய், பல வேத்துவேமாக எய்த வந்தன மெனக் கூட்டுக.
விளக்கம்: வினையும் புகழுமுடைய நெய்தலங்கானல் நெடியோய், மார்ப, நீ, வல்லறிதி, மொழிதேறலை, தகவொறுத்தி. தண்டமும் தணிதி,ஏத்துவேமாக, எய்த வந்தனம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தன்னை வழிபட்டொழுகுபவரை அவர் சொல் செயல்களைக் கண்டறிதற்கு முன்னே அவர் முகக்குறிப்பால் மனநிலையைக் கண்ட மாத்திரையே யுணர்ந்து கொள்ளுதல்பற்றி, வல்லறிதி என்றார்.அறிதியே யென்பது அறிதீயே யெனச் செய்யுளாதலின் விகாரமாயிற்று. அறிதிலின் பயன் செயலால்வெளிப்படுதல்பற்றி, அறிதி யென்றது அறிந்து அவர்களுக்கு அருள் செய்வை யென்பதாம் என்றார். குற்றமென்பது பழிக்கப்படுவதொன்றாதலால் பழியெனப்பட்டது. நீதிநூற்குத் தக ஆராய்ந்து என்பதனால், குற்ற வகைகளும் அவற்றை யாராயுந் திறங்களும் ஒறுக்கும் திறங்களும் உணர்த்தும் நீதி நூல்கள் தமிழகத்தே யிருந்தமை புலனாகிறது.பொருணூலை வடமொழியில் எழுதிய கௌடிலியன் தென்றமிழ் நாட்டவனாதலால் அவனது நூலில் காணப்படும் நீதிகள் பல தமிழகத்தே நிலவினவாம் என்பதும் ஈண்டு நினைவுகூரத்தக்கது. குறிப்பு வினையெச்சம் பொருள் முடிவின்கண் ஆக்கச்சொல் பெற்று முடிதல் வேண்டுமென்பது இலக்கணமாதலால் (சொல்.எச்ச. 36) ஆகவென ஒருசொல் வருவித்துரைக்கப்பட்ட தென்றார். ஒரு சொல் லென்றது ஆக்கச் சொல்லையென வறிக. தணிதியென்றதனால் தணிதற்குரிய வெகுளியை வருவித்து, பண்டு செய்த கோபத்தினும் பெரிதாகத் தணிதி யென்று பொருள் கூறினும் பொருந்துவதாம் என்பார், பண்டு-அமையும் என்றார். அதிழ்து அட்டு என்புழி, அடுதல்-சுவையால் வெல்லுதல். அவ்வாறன்றி, அட்டென்றதை உவமப்பொருளதாகக் கொண்டு அமிழ்து போலும் அடிசில் என்றும் பொருள் கூறலாம் என்றார். வருநர்க்கு வரையா என்றதற்கு வரும் விருந்தினர்க்கு வரையாமல் வழங்கி யென்று பொருள் கூறுகின்றாராதலால், அவ்வாறு வழங்கப்படும் அடிசிலின் அளவை வருவித்து, மிகுதி குறையாமல் என்றார். விருந்தோம்பாமை மனை வாழ்க்கைக்கு வசையாமாதலால், விருந்து வரையாத வாழ்க்கை, வசையில் வாழ்க்கை யெனப்பட்டது. வாழ்க்கையையுடைய மகளிர் என்க; |