பக்கம் எண் :

301

 

பெரிது அழுதனள் - குழல் இரங்கி யொலிப்பது போல் மிகவும்
அழுதாள் எ-று.

    மழை   வேண்டுங்   காலத்துப்   பெய்வித்தற்கும்   வேண்டாக்
காலத்தொழித்தற்கும் பலிதூஉய்ப் பேணிய குறவராகிய மாக்க ளென்க.
குறவர் மாக்கள்: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. மாக்கள் புனத்தினை
அயிலும் நாட, பேக, என் ஒக்கல் பசித்தென வாயிற் றோன்றி வாழ்த்தி
நின்று நின்னும் நின் மலையும் பாடக் குழல் இனைவதுபோல அழுதாள்;
அவ்வளிக்கத்தக்காள் யார்கொல், அவள்பால் அருள் பண்ணத் தகுமென
வினைமுடிக்க.

    இது, நின் மலையிற் குறவர் மாக்கள் கடவுட்பேணி மழை வேண்டிய
பொழுது  பெற்றுத்  தாம் வேண்டு முணவு நுகருமாறுபோல, இவளும் நின்
அருள்பெற்று  இன்பம் நுகர்வாளாக வேண்டு மென்பதொரு நயந்தோன்ற
நின்றது. மழை  மிகப் பெய்தலா னென்பது ஆற்றலாற் கூறப்பட்டது.

    பேகனால் துறக்கப்பட்ட கண்ணகியை அவனோடு கூட்டலுறுவார்,
அருள் பண்ண வேண்டுமென்று இரந்து கொண்டு கூறினமையின்,
குறுங்கலியாயிற்று.

    விளக்கம் :மழை குறித்துக் குறவர் கடவுளைப் பேணும் மரபை
நற்றிணைப் பாட்டொன்று “மலைவான் கொள்கெனக், கடவுளோங்கு வரை
பேண்மார் வேட்டெழுந்து, கிளையொடு மகிழுங் குன்ற நாடன்” (நற். 165)
என்று கூறுதல் காண்க. ஊர்க்குப் புறத்தேயுள்ள மன்றினை “வாயில்”
என்றார். கண்ணகியார் அழு துகுத்த கண்ணீர் இனிதன்று; இன்னாமை
விளைவிப்ப தென்பார், “இன்னா திகுத்த கண்ணீர்” என்றார். நின்னையும்
நின்    மலையையும்  பாடக்  கேட்டு  மகிழவேண்டிய  கண்ணகி  யார்,
கண்ணீருகுப்பது இன்னாதாக அதனை நிறுத்துமாறு யாம் வேண்டிய வழியும்
நிறுத்தாது அழுதன ரென்பார், “குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிது”
என்றார். இதனாற் பயன்,  அவரது  கண்ணீர் இன்னாதாகலின் விரைந்து
சென்று     அதனைத்     துடைத்து    நிறுத்தல்    வேண்டும்    
என்பதைக் குறிப்பெச்சத்தாற் பெற வைத்தார். கண்ணகியார் பொருட்டுப்
பேகன் மனந்தெருள்விக்கச் சென்றவிடத்து, அவனது நாட்டுக் குறவர்
செயலை விதந்தோதியதன் கருத்து இதுவென்பார், “இது நின் மலையிற்
குறவர் மாக்கள்... நயந்தோன்ற  நின்ற” தென்றார். மழை மேக்குயர்கவென
வேண்டுவது அது மிகப் பெய்த காலத்தாகலின், மிகப் பெய்தலான்
என்பதை வருவித்து ஆற்றலால் என்றார். முன்னும் பின்னும் நிற்கும்
சொற்கள் இயைதற்குரிய இயைபு ஆற்றலெனப்படும்.

                  144. வையாவிக் கோப்பெரும் பேகன்

     கண்ணகியாரைக்      கை    துறந்தொழுகும்    பேகனுடைய
புறத்தொழுக்கத்தைக் கேள்வியுற்ற பரணர், அக் கண்ணகியார் பொருட்டு
அவன்பாற் போந்து பாணனொருவன் கூற்றில் வைத்து அவன் தெருளுமாறு,
“வயங்கு புகழ்ப்பேக, முன்னாள், யாங்கள் இவண் இருண்மாலைப் போதில்
போந்து நின் கானத்தைப் பாடினேமாக, இளமகளா ரொருவர் கண் கலுழ்ந்து
எம் முன்னே வந்து அழுதுநின்றார்;