திணை: அது. துறை: பரிசிற்றுறை. அவனை அவர் பாடியது. உரை: நீண்டொலி அழுவம் குறைபட முகந்து கொண்டு - பெரிதாய் ஒலிக்கின்ற பரப்பினையுடைய கடல் குறை பட நீரை முகந்துகொண்டு; ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ - விரைந்த செலவையுடைய முகில்கள் வேண்டிய விடத்தே திரண்டு; பெருமலை யன்ன தோன்றல - பெரிய மலைபோலுந் தோற்றத்தை யுடையவாய்; சூல் முதிர்பு - சூல் முதிர்ந்து; உரும் உரறு கருவி யொடு பெயல் கடன் இறுத்து - உருமேறிடிக்கும் மின் முதலாகிய தொகுதியுடனே கூடிப் பெயலை முறையாகப் பெய்து; வள மழை மாறிய என்றூழ்க் காலை - வளத்தைத் தரும் மழை நீங்கிய கோடைக்காலத்து; மன்பதை யெல்லாம் சென்றுண - உயிர்ப்பன்மைக ளெல்லாம் சென்று நீருண்டற்கு; கங்கை கரைபொரு மலி நீர் நிறைந்து தோன்றி யாங்கு - கங்கையினது கரையைப் பொரும் மிக்க வெள்ளம் நிறைந்து தோன்றியவாறு போல; எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின் - எங்கட்கும் பிறர்க்கும் தலைமையுடைய யாதலின்; அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவர - யாவரோடும் உறவில்லாத ஆறலை கள்வர் கொன்று வழியிலே அடித்துப் பறித்தலால்; சென்று தலைவருந அல்ல - போய் முடிவனவல்ல; அன்பின்று வன்கலை தெவிட்டும் அருஞ் சுரம் இறந்தோர்க்கு - அருஞ் சுரமாயிருக்கத் தம்முயிர்மேல் அன்பின்றி வலிய கலைகிடந்து அசையிடும் போதற்கரிய அச் சுரத்தின் கண்ணே அளவின்றிப் பிரிந்தவர்க்கு; இற்றை நாளொடும் யாண்டு தலைப் பெயர என -இற்றை நாளொடுங் கூடி யாண்டு கழிக வெனச் சொல்லி; கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து - கண்ணொளி மழுங்கிய இரக்கத்துடனே வலி கெட்டு;அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி - பொறுத்தற்கரிய துன்பமுறும் எனது பெரிய வறுமை யுறுவோள்; நின் தாள் படு செல்வம் காண்டொறும் மருள - நினது முயற்சியாலுண்டாகிய செல்வத்தைக் காணுந்தோறும் வியப்ப; |