பக்கம் எண் :

381

 

மோரியர் - நிலமுழுது மாண்ட மோரியது; திண் கதிர் திகிரி திரிதர
- திண்ணிய  ஆர் சூழ்ந்த சக்கரம் இயங்குதற்கு; குறைத்த
- குறைக்கப்பட்ட;  உலக  இடை  கழி  அறைவாய் - வெள்ளி
மலைக்கு  அப்பாலாகிய  உலகத்திற்குக் கழியும் இடைகழியாகிய
அற்றவாயின்கண்;  நிலைஇய  தேவர்களால் நிறுத்தப்பட்டு
இருபொழுதும் ஒருபெற்றியே நிலைபெற்று விளங்கும்; மலர்வாய்
மண்டிலத்தன்ன - பரந்த     இடத்தையுடைய ஆதித்தமண்டலத்தை
யொப்ப;  நாளும்  பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே -
நாடோறும்  இரவு  பக லென்னாமல் பலரையும் காத்தலை
ஏற்றுக்கொண்டு ஒரு பெற்றியே விளங்கிய அறத்துறையாகிய நின்னை
எ-று.

      எந்தை வழி, ஆதனுங்கனே, மண்டிலத் தன்ன அறத்துறை நின்னை,
நின்னுடையேனாகிய     யான்  மறப்பின் மறக்குங் காலமாவது என் யான்
மறப்பின்   மறக்குவென்;  ஆதலால், என்  நெஞ்சைத்  திறப்போர்
நிற்காண்குவரெனக் கூட்டி வினைமுடிக்க.

      மோரியராவார்,   சக்கரவாள  சக்கரவர்த்திகள்;  விச்சாதரரும்
நரகருமென்ப.     ‘திகிரி திரிதரக் குறைந்த’ என்றோதி, சக்கரவாளத்திற்
கப்பாற்பட்ட   உலகத்து மோரியர் திகிரி ஊடறுத்துச்சேறலின் குறைந்த
பிளவுபட்ட வாயிற்கு அப்பாலாகிய உதயகிரிக்கண் நிலைபெற்ற ஆதித்த
மண்டலமென் றுரைப்பாரு முளர்.

      விளக்கம்: நெஞ்சில் உள்ளதுதான் சொல்வழி வெளிப்படும் என்பது
குறித்து, “நின்புகழல்லது சொல்லாமையால்”எனக் காரணம் காட்டினார்.
அன்பு  செய்யப்பட்டார்  அன்புடையார்   நெஞ்சில்    உறைவரென்பது,
“நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல், அஞ்சுதும், வேபாக் கறிந்து”
(குறள். 1128) என்பதனாலும் தெளியப்படும். உயிர் உடம்பின்  நீங்குங்
காலத்துக் கருவி கரணங்கள் ஓய்ந்து போதலின், “மறக்குங்காலை என்னுயிர்
யாக்கையிற் பிரியும்பொழுது”என்றார். “என்னை  யான் மறக்குங்கால
முண்டாயின்”என்றவிடத்து, “உண்டாயின்”என்பது, “உண்டாதல் என்
செயலன்று;   காலத்தின் செயல். அக்காலத்தே யான் மறப்பேனேயன்றி,
உடம்பொடு கூடியிருக்குங்கால்     ஒருகாலும் மறவேன்”என்பது. உயிர்
உடம்பின் நீங்கியவழிப் பிறப்பு வேறுபடுதலாலும் மறதியுண்டா மென்பதை,
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் வானின், பிறப்புப்பிறி    தாகுவ    தாயின்,
மறக்குவேன்  கொல்லென் காதல னெனவே” (நற்.397) எனச் சான்றோர்
கூறுதல் காண்க. மோரியராவார் வடநாட்டில் வாழ்ந்த அரச பரம்பரையினர்.
அவர்கள் போர் குறித்துத் தம் நாட்டின் தென்பகுதி நோக்கிப் படையெடுத்து
வருங்கால், ஆங்கே ஒரு மலைத்தொடர் குறுக்கிடவே, அதனை ஒருபுறத்தே
வெட்டி  வழிசெய்து படைக் கருவிகளும் பிறவும் கொணரும்  
சகடங்கள் இனிது வருவித்தனர். இச்செய்தியை மாமூலனாரும்
பரங்கொற்றனாரும் குறித்துள்ளனர். இம் மோரியரைப்பற்றி உரைகாரர்
கூறுவன எந்நூல்களை யடிப்படையாகக்    கொண்டனவோ தெரிந்தில.
ஞாயிற்று மண்டிலம் ஏனை எல்லா மண்டிலங்களினும் பெரிதென்பதற்கேற்ப,
இச் சான்றோர், இதனை “மலர்வாய் மண்டிலம்”என்றது போற்றத்தக்கது.