| 176. ஓய்மான் நல்லியக்கோடன்
ஓய்மான் என்பது ஓய்மா நாட்டை யுடையவன் என்று பொருள் படும். திண்டிவனத்தைச் சார்ந்த நாடு முற்காலத்தில் ஓய்மானாடென வழங்கிற்று. இதன்கண் மாவிலங்கை, வேலூர், எயிற்பட்டினம், கிடங்கில், ஆமூர் என்ற வூர்கள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. நல்லியக் கோடன் மாவிலங்கையில் இருந்து கொண்டு இந்நாட்டை யாட்சிபுரிந்து வந்தான். இவனை இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரும் புறத்திணை நன்னாகனாரும் பாடியுள்ளனர். இடைக்கழி நாடு ஓய்மானாட்டுக்குக் கிழக்கே கடற்கரைப் பகுதியாகும். இதனை இக்காலத்தும் இடைக்கழி நாடென்றே கூறுவர். கிடங்கிலில் இடிந்து சிதைந்த அகழியும் கோட்டையும் உண்டு. ஓய்மான் நல்லியக்கோடற்குப் பின் வந்தவன் ஓய்மாய் வில்லியாத னென்பானாவன். அவனை நல்லியாதனென்றும் கூறுவர்.
நல்லியக்கோடனுடைய குணம் செயல் கொடைநலம் முதலிய பலவும் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனாரால் சிறுபாணாற்றுப் படையில் அழகுறக் கூறப்பட்டுள்ளன. செய்ந்நன்றி யறிதலும் சிற்றினமின்மையும், இன்முக முடைமையும் இனியனாதலும், அஞ்சினர்க் களித்தலும் வெஞ்சின மின்மையும். ஆணணி புகுதலும் அழிபடை தாங்கலும், கருதியது முடித்தலும் காமுறப் படுதலும், ஒருவழிப் படாமையும் ஓடிய துணர்தலும், அரிவைய ரேத்த அறிவுமடம் படுதலும், அறிவு நன்குடைமையும், வரிசை யறிதலும் வரையாது கொடுத்தலும்(சிறுபாண்.207-17) பிறவும் இவனுடைய சிறப்புப் பண்புகளாக நத்தத்தனாரால் குறிப்பிடப்படுகின்றன. தன்னை யடைந்த இரவலரைத் தானே நேர் நின்று உண்பித்தலும், பகை மன்னரை வென்று அவர் தரும் திறைப் பொருளைக் கொண்டு நயவர் பாணர் முதலியோர்க்களித்து, அவர் வறுமை தீர்த்தலில் இவன் பெருவிருப்ப முடையவன். நனமா விலங்கை மன்ன ருள்ளும், மறுவின்றி விளங்கிய வடுவில் வாய்வாள், உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன்என்றும், பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை நல்லியக் கோடன்என்றும், குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச், செல்லிசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடன்என்றும் பாராட்டுவர். இதனால் இவன் ஓவியர் குடியிற் பிறந்தவன் என்றும் அறியலாம். ஓவியர் மா நாடென்பது, ஓய்மா நாடென மருவியது போலும்.
நல்லியக்கோடன் மாவிலங்கையில் இருந்து ஆட்சிபுரிந்து வருகையில் புறத்திணை நன்னாகனார் என்னும் சான்றோர் இவனைக் காணப்போந்தார். அக்காலத்தே வேங்கடத்தைச் சூழ்ந்த நாட்டிலுள்ளதாய கரும்பனூர் சென்று, அங்கேயிருந்த கரும்பனூர் கிழானைப் பாடிப் பரிசில பெற்றுப் பன்னாள் தம் மனைக்கண்ணேயிருந்து இரத்தலை நினையாதிருந்த இவர், தன்பால் வரக் கண்ட நல்லியக்கோடன் இவர்க்கு மிக்க பரசில் நல்கிச் சிறப்பித்தான். அதனால் வியப்பு மிகக்கொண்ட நன்னாகனார், தன் ஊழை வியந்து வாழியெற் புணர்ந்த பாலே எனப் பாராட்டி, பெருமா விலங்கைத் தலைவனான நல்லியக்கோடன் வறியவர் தொடுக்கும் புகழ்மாலை சூடுபவன்; அவனை நீ புரவலனாகப் பெற்றனை; இனி உனக்குக் குறைவில்லை என்றுரைத்து, பாரியது பறம்பிலுள்ள சுனைத் தெண்ணீர் தேடிச் சென்று கொள்ளவேண்டாமல் ஓரூரின்கண்ணே கிடைக்குமாயின் வேண்டும்போது எடுத்துக் கொள்ளலாமென நெகிழ்ந் தொழிபவரைப் போல, நல்லியக்கோடன் நம் நாட்டவனாதலின், |