பக்கம் எண் :

383

 

வேண்டும்போது சென்றுகண்டுகொள்ளலாமெனப் பன்னாட்களைக்
கொன்னே கழித்துக், கழிந்தவற்றைநினைந்து  எனது  நெஞ்சம்
இரங்குகின்றது; அது வேண்டா, இனி  இன்றேபோல் என்றும்    
அவன்  தொடர்பு பெற்று இனிதிருக்கலாம்”என்று கூறும் கருத்தால்
இப்பாட்டைப் பாடியுள்ளார்.

     புறத்திணை  நன்னாகனார்  தெண்டைநாட்டவர்.  புறத்திணைப்
பாட்டுக்கள்  பாடுவதில்  சிறந்திருந்தமைபற்றிச் சான்றோர்  இவரைப்
புறத்திணை  நன்னாகனார்  எனச் சிறப்பித்திருக்கின்றனர்.  இவர்
இவன் காலத்தும் இவற்குப் பிறபோந்த வில்லியாதன் காலத்தும் இருந்தவர்.
இவரது ஆழ்ந்த புலமைநலம் இப்பாட்டின்கண்ணும் பிறவற்றினும் இனிது
விளங்கக் காணலாம்.

 ஓரை யாயத் தொண்டொடி மகளிர்
கேழ லுழுத விருஞ்சேறு கிளைப்பின்
யாமை யீன்ற புலவுநாறு முட்டையைத்
தேனா றாம்பற் கிழங்கொடு பெறூஉம்
5இழுமென வொலிக்கும் புனலம் புதவிற்
 பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
உடையை வாழியெற் புணர்ந்த பாலே
பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
10ஓரூ ருண்மையி னிகந்தோர் போலக்
 காணாது கழிந்த வைகல் காணா
வழிநாட் கிரங்குமென் னெஞ்சமவன்
கழிமென் சாயல் காண்டொறு நினைந்தே.
(176)

     திணையுந் துறையு மவை. ஓய்மான் நல்லியக்கோடனைப்
புறத்திணை நன்னாகனார் பாடியது.

     உரை: ஓரை  ஆயத்து ஒண்டொடி மகளிர் - விளையாட்டுத்
திரட்சிக்  கண்  ஒள்ளிய  வளையையுடைய மகளிர்; கேழல் உழுத
இருஞ்    சேறு  கிளைப்பின் - கேழற்பன்றி யுழுத கரிய  சேற்றைக்
கிளறின்;  யாமை  ஈன் புலால் நாறு முட்டையை - அதன்கண்ணே
யாமை ஈனப்பட்ட புலால் நாறு முட்டையை; தேன் நாறு ஆம் பல்
கிழங்கொடு பெறூஉம் - தேனாறும் ஆம்பலினது கிழங்குடனே பெறும்;
இழும் என ஒலிக்கும் புனலம் புதவின் பெருமா விலங்கைத்
தலைவன் - இழுமென்னும்  அனுகரணமுண்டாக  முழங்கும்  நீர்
வழங்கும் வாய்த்தலைகளையுடைய  பெரிய மாவிலங்கை யென்னும்
ஊர்க்குத் தலைவன்;  சீறியாழ் இல்லோர் சொன்மலை  நல்லியக்
கோடனை உடையை - சிறிய யாழையுடைய வறியோர் தொடுக்கும்
புகழ் மாலை சூடும்  நல்லியக்கோடனைத்  துணையாக  
நீயுடையை யாதலான்; எற்புணர்ந்த பாலே வாழி - என்னைப்
பொருந்திய விதியே நீ ஒரு