| மலைந்தோர் விசி பிணி முரசமொடு - தன்னொடு மாறுபட்டோரது வலித்துப் பிணிக்கப்பட்ட முரசத்தோடு; மண் பல தந்த - மண் பலவற்றையும் கொண்ட; திருவீழ்நுண் பூண் பாண்டியன் - மறவன் திருமகள் விரும்பிய நுண்ணிய தொழில் பொருந்திய ஆபரணத்தையுடைய பாண்டியன் மறவன்; படை வேண்டுவழிவாள் உதவியும் - அவனுக்குப் படைவேண்டியவிடத்து வாட்போரை யுதவியும்; வினை வேண்டுவழி அறிவு உதவியும் - அரசியற்கேற்ற கருமச்சூழ்ச்சி வேண்டியவிடத்து அமைச்சியலொடு நின்று அறிவு உதவியும்; வேண்டுப வேண்டுப - இவ்வாறு வேண்டுவன பலவும்; வேந்தன் தேஎத்து - அவ்வரசனிடத்துதவி; நுகம் அசை படாஅ ஆண்டகை உள்ளத்து - தான் பூண்ட நுகம் ஒரு பாற் கோடித் தளராமற் செலுத்தும் பகடுபோல ஆண்மையினும் சூழ்ச்சியினும் தளராத ஆண்மைக் கூறுபாடு பொருந்திய ஊக்கத்தினையும்; தோலா நல்லிசை நாலை கிழவன் - தோலாத நல்ல புகழையுமுடைய நாலை கிழவன்; பருந்து பசி தீர்க்கும் நற்போர் திருந்து வேல் நாகன் - பருந்தினது பசி தீர்க்கும் நல்ல போரைச் செய்யும் திருந்திய வேலையுடைய நாகனை; பலர் கூறினர் - பலரும் சொன்னார் எ-று.
பருந்து பசி தீர்க்கும் வேல் என இயையும்.
விளக்கம்: மண்டை, உண்கலம். அடி குவிந்து வாய்விரிந்திருப் பதனாலும், ஏற்கும்போது அதன் வாய் தோன்ற ஏந்துவதும், ஏலாப் போது கவிழ்த்து வைப்பதும் இயல்பாதல்பற்றி, ஏலாது கவிழ்ந்த மண்டை யென்றும், இட்டு மலர்ப்போர் என்றும் கூறினார். நாகனைப் பாடப் போந்தவர், அவன் இறைவனான பாண்டியனை, மண்பல தந்த பாண்டியன் என்றது, அங்ஙனம் அவன் மண்பல கோடற்கும் இந்நாகனே படை வேண்டுவழி வாளும், வினைவேண்டுவழி அறிவும் உதவினானென்பது வற்புறுத்தற்கு. அசைநுகம் படாஅவென்றது குறிப்புருவகமாதலின், அதனை விரித்து, தான் பூண்ட நுகம் ஒருபாற் கோடித் தளராமல் செலுத்தும் பகடுபோல ஆண்மையினுஞ் சூழ்ச்சியினும் தளராதஎன்று வரை கூறினார். தீர்க்கு மென்னும் பெயரெச்சம் நற்போரைக் கொள்ளாது வேலைக்கொண்டு முடியும் என்பார், பருந்து பசி தீர்க்கும் வேல் என இயையும்என்றார். பருந்துபசி தீர்க்கும் வேல், திருந்து வேல் எனவும், நற்போர் நாகன் எனவும் இயையும்.
180. ஈர்ந்தூர்கிழான் கோயமான்
ஈர்ந்தூர் என்பது இக்காலத்தே கொங்கு நாட்டில் ஈஞ்சூர் என வழங்குகிறது. கோயமான் என்பான், இவ்வூரிலிருந்து சோழ வேந்தர்க்குத் துணைபுரிந்தவன். இவன் பெருஞ்செல்வ னல்லனாயினும், இரப்போர்க்கு இல்லை யென்னாது ஈயும் சிறப்பால் புலவர் பாடும் புகழ் பெற்றான். இவன் முடிவேந்தர்பொருட்டுப் போருடற்றி, அதனால் வரும் பொருளைப் பரிசிலர்க்கு வழங்கும் பான்மையன். சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி, |