பக்கம் எண் :

415

 

     விளக்கம்: மனைக்கிழத்தி நற்குண நற்செய்கைகளை யுடையளாதல்
அவட்கு மாண்பு. மக்கள்பால் நிரம்புதற் கமைந்த அறிவாதலால் “அறிவு
நிரம்பினார்”என்று உரை கூறினார். மனை வாழ்வானும், மகப் பெற்று
வளர்த்தலாலும் மனைவிக்கும் இயற்கை யறிவு மிகுந்து நிரம்புதலின்,
“மனையொடு”எனச் சிறப்பித்தார். “செறிவு நிறைவும் செம்மையும் செப்பும்,
அறிவும் அருமையு பெண்பா லான”(பொருள். 15) எனத் தொல்காப்பியனார்
எடுத்துதோதுதல் காண்க. இளையர் ஏவலர். ஆன்றவிந்தடங்கிய
கொள்கையென்பதை, ஆன்று அடங்கியவிந்த கொள்கையென மாறிக்
கூட்டுக. குணங்களால் அமைந்தவழி அடக்கமும் அதுவே வாயிலாக
ஐந்தவித்தலும் உண்டாதல்பற்றி, இவ்வாறு உரை கூறப்பட்டது. கிடந்தபடியே
கொள்வார்க்கு இது பொருள் என்பார், “ஆன்றவிந்தடங்கி....... அமையும்”
என்றார்.

                     192. கணியன் பூங்குன்றனார்

     கணியன் பூங்குன்றனார் இராமநாதபுர மாநாட்டிலுள்ள மகிபாலன்
பட்டியென இப்போது வழங்கும் ஊரினர். இவ்வூர்ப் பூங்குன்றமெனப்
பண்டைநாளிலும் இடைக்காலத்தும் வழங்கிற்றென்பதை, அவ்வூர்க் கோயில்
கல்வெட்டால் அறிகின்றோம். பூங்குன்றம் இப்போது குடக மலை யென
வழங்குகிறது. மகாமகோபாத்தியாய பண்டிதமணி மு. கதிரேசன்
செட்டியாராகிய தமிழ் பேராசிரியரும் இவ்வூரினராவர்; இவ்வூர்
பண்டேபோல் இன்றும் தமிழ்ப்புலமைச் சான்றோரைப் பெற்றிருப்பது
இதன் சிறப்பை வற்புறுத்துகிறது.

     இச் சான்றோர், இடரினும், தளரினும் இன்பத்தினும் துன்பத்தினும்
எவ்விடத்தும் அயராத உள்ளமும் கலங்காத அமைதியும் உடையர். நலஞ்
செய்தாரென ஒருவரைப் பாராட்டலும் தீது செய்தாரென ஒருவரை இகழ்தலும்
இல்லாதவர். இவ்வாறே பெரியோரென ஒருவரைப் புகழ்தலும்
சிறியோரெனப் புறக்கணித்தலும் அறியாதவர். உயிர்கள் அனைத்துத்
தாந்தாம் செய்த வினைக்கேற்ப இன்பமும் துன்பமும் உயர்வும் தாழ்வும்
செல்வமும் வறுமையும் எய்தும் என்பதை நூல்களானும் நடைமுறையானும்
நன்கறிந்தவர். இப் பண்பினால், நல்லிசைப் புலமை மிக்க இவர் எத்தகைய
வேந்தரையும் வள்ளல்களையும் பாடிற்றிலர் இதனைக் கண்ட அக்காலச்
சான்றோர்க்கு வியப்புண்டாயிற்று. சிலர் முன் வந்து “பாடுபெறு
சான்றோராகிய நீவிர் எவரையும் பாடாமை என்னையோ?”என்றாராக,
மேலே கூறிய தம் கருத்துக்களையமைத்து இப் பாட்டைப் பாடியுள்ளார்.

 யாது மூரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
5இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
 இன்னா தென்றாலு மிலமே மின்னொடு
வானந் தண்டுளி தலைஇ யானாது